Monday, March 31, 2014

பெண்களின் சூழலுக்கு ஏற்ற கவிதை.



கொட்டுவது சுலபம்; அள்ளுவது?

  2010 - ல் மெக்ஸிகோ வளைகுடாவில் நேரிட்ட எண்ணெய்க் கசிவுதான் வரலாற்றிலேயே மிக மோசமான கசிவு.  பிரிட்டிஷ் பெட்ரோலியத்துக்குச் சொந்தமான எண்ணெய் துரப்பணக் கிணற்றில் நடந்த இந்த விபத்தில், 40 லட்சம் பீப்பாய்கள் அளவு எண்ணெய் வெளியானது.  விபத்துக்குப் பிறகு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 1.7 லட்சம் பேரும் ஏதாவது ஒரு வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  என்ன செய்வது என்று கையைப் பிசைகிறார்கள்.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
--  -' தி இந்து '  நாளிதழ் .செவ்வாய், அக்டோபர் 29, 2013.  

Sunday, March 30, 2014

புதிய சூரியக் குடும்பம்.

7 கோள்களுடன் புதிய சூரியக் குடும்பம்.
      நமது சூரிய மண்டலத்தைப் போலவே, நட்சத்திரம் ஒன்றைச் சுற்றிவரும் 7 கோள்கள் அடங்கிய சூரியக் குடும்பத்தை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
    இந்த சூரியக்குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
    ஏழு கோள்கள் சுற்றி வரும் அந்த நட்சத்திரம் எச்டி 10180 என அழைக்கப்படுகிறது.  இதனை 5 கோள்கள் சுற்றி வருகின்றன.  அங்கு மேலும் 2 கிரகங்கள் இருப்பதற்கான தடயங்களையும் வானியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.  அதில் ஒன்றின் நிறை இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில்  மிகக்குறைவானதாகும்.
    நமது சூரியக் குடும்பத்தைப் போலவே, புதிதாகக் கண்டறியப்பட்ட சூரியக் குடும்பத்திலும் கோள்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வழக்கமான பாதையில் சுற்றிவருவதைக் கண்டறிந்துள்ளனர்.
    அங்கு சனி போன்ற ஒரு கிரகம் குறைந்தது 65 பூமிநிறையுடன் 2200 நாள்கள் சுற்றுப்பாதையை கொண்டுள்ளது.  மற்றொன்று மிகக்குறைந்த நிறையைக் கொண்டுள்ளது.  புவியின் நிறையைவிட 1.4 மடங்கு அதிகம்.  பூமிக்கு 1.18 நாள்கள் என்பது.  அக்கோளூக்கு ஒரு ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் சிலியில் லா சில்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் இந்த சூரியக் குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது.
--  பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- -' தி இந்து '  நாளிதழ் .. சனி, அக்டோபர் 26, 2013. 

வாழ்க்கையைக் கொண்டாடியவர்!

 ( சிறப்பு )
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் மறைவு .  ( 2-2-1915  --  20-3-2014 )    
      எவ்வளவு பெரிய புத்திஜீவியாக இருந்தாலும் தன்னுடைய மரணத்தைப் பற்றி யோசிக்கும்போது பயம் வந்துவிடும்.  ஆனால், எதைப் பற்றியுமே கவலைப்படாத குஷ்வந்த், 30 வயதைத் தாண்டாத இளைஞராக இருந்தபோதே ( 1943-ல்) தன் கல்லறை வாக்கியம் எப்படி இருக்கும் என்று எழுதி வெளியிட்டார்.  அந்த வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு இது :
     'கடவுளையோ, மனிதனையோ யாரையும் விட்டு வைக்காதவன் இங்கே உறங்குகிறான்.  யாரும் இவனுக்காகக் கண்ணீர் சிந்த வேண்டாம்.  ஏனென்றால், இவன் ஒரு பொறுக்கி.  அசிங்கமாக எழுதுவது இவனுக்கு ஒரு விளையாட்டு.  நல்லவேளை செத்துவிட்டான்... ரவுடிக்குப் பிறந்த ரவுடி!'
      ஆனால், குஷ்வந்த் விரும்பியபடி அவர் புதைக்கப்படவில்லை.  மண்ணில் இருந்து வந்த நாம் மண்ணுக்கே போவதுதான் சரி என்று சொல்லிக்கொண்டிருந்தார்.  பல நிர்வாகக் காரணங்களால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை.  உயிரோடு இருந்திருந்தால் இதையும் கிண்டல் செய்து எழுதியிருப்பார்.
      குஷ்வந்த் சிங் பற்றி சுருக்கமாகச் சொன்னால், அவரைப் படிப்பதற்கு முன்னால் எப்படி இருந்தோமோ, அதேபோல் அவரைப் படித்த பிறகும் இருக்க முடியாது !
-- சாரு நிவேதிதா.  எழுத்தாளர்.
-- ஆனந்த விகடன்.  02-04-2014. 

Saturday, March 29, 2014

காற்றின் பெயர்கள்.

  தமிழில் பண்டைக் காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்குத் தனித்தனி பெயர்கள் இட்டு அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
வாடை........................................ வடக்கில் இருந்து வீசும் காற்று.
சோழகம், தென்றல்................ தெற்கில் இருந்து வீசும் காற்று.
கொண்டல் ................................. கிழக்கில் இருந்து வீசும் காற்று.
கச்சான் ........................................ மேற்கில் இருந்து வீசும் காற்று.
--  ஆதி வள்ளியப்பன், பொது அறிவு. வெற்றிக்கொடி. அறிவு உயர்வு தரும் . சிறப்புப் பகுதி.
--   -' தி இந்து '  நாளிதழ் ..திங்கள், அக்டோபர் 28, 2013. 

பேஸ்புக் முயற்சி

  ( சிறப்பு )
ஆளில்லா விமானம் மூலம் இன்டர்நெட்:: பேஸ்புக் முயற்சி
*வாஷிங்டன் *
     உலகத்தின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் ஃபேஸ்புக்கை கொண்டு செல்ல அதன் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்குக்கு நிரம்ப ஆசை போலும்.
     ஆனால், துரதிருஷ்டவசமாக பல இடங்களில் இணையதள இணைப்புக் கிடைப்பதில்லை.  எனவே, இணையதள வசதி இல்லாத இடங்களையும் ஆளில்லா விமானங்கள் மூலம் இணைக்க தற்போது முயற்சி எடுத்துள்ளார் ஜூகர்பெர்க்.
     ஆங்கிலத்தில் 'ட்ரோன்' என்றழைக்கப்படும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் மூலம் அனைவருக்கும் இணைய வசதி ஏற்படுத்தித் தர ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  இத்திட்டத்தை ஃபேஸ்புக்கின் சகோதர நிறுவனமான 'இன்டர்நெட் டாட் ஆர்க்' எனும் நாசா உட்பட ஆறு இதர தகவல் தொழில்
நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து நடைமுறையில் கொண்டு வர முயன்று வருகிறது.
     இந்த  'இன்டர்நெட் டாட் ஆர்க்' நிறுவனத்தில் 'கனெக்டிவிட்டி லேப்' எனும் துறை உள்ளது.  இது இத்திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு வழிவகைகளை வகுத்துத் தரும்.
     அதில் ஒன்று சூரிய ஒளி மூலம் இயங்கும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்.  இதற்காக, 'செஃபைர்' எனும் உலகின் நீளாமான சூரிய ஒளியால் இயங்கும் ஆளில்லாத விமானத்தை வடிவமைத்த இங்கிலாந்து நாட்டின் அசென்டா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ஃபேஸ்புக்.
     இந்த முயற்சியில் ஃபேஸ்புக் மட்டுமல்லாமல், கூகுள் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது.  அதனுடைய திட்டத்திற்கு 'புராஜெக்ட் லூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.  இதில் பலூன்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தித் தர கூகுள் முயன்று வருகிறது.
-- பி.டி.ஐ.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, மார்ச் 29, 2014. 

Friday, March 28, 2014

கண்ணுக்குத் தெரியாத காவலாளி.

  ஒவ்வொரு நிமிடமும் ஒரு வளர்ந்த மனிதர் சராசரியாக ஏழு லிட்டர் காற்றை சுவாசிது, வெளியே விடுகிறார்.  நமது நுரையீரல் நான்கு முதல் ஆறு லிட்டர் காற்றை சராசரியாக பிடித்து வைத்திருக்கக்கூடியது.  அதில் ஒரு சிறு பகுதியைத்தான் நாம் சுவாசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
 நம்மில் பலரும் நம்புவது போல நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பெருமள் வு காடுகளில் இருந்து வருவதில்லை.  கடல்களில் இருந்தே வருகின்றன.  கடலில் உள்ள ஆல்கா எனப்படும் பாசிகள் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனில் பெருமளவை உற்பத்தி செய்கின்றன.  இந்தத் தாவரங்கள் சிறியதாக இருந்தாலும், பெருமளவில் இருப்பதால், ஆயிரக்கணக்கான கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.
    ஆக்சிஜன் மட்டுமல்ல, காற்று நிரம்பிய வளிமண்டலம்தான் ( ஓசோன் படலம் ) சூரியனிலிருந்து வெளிப்பட்டு நமக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் புறஊதாக் கதிர்களின் வீரியத்தைக் குறைப்பதுடன், சூரியனில் இருந்து வரும் கூடுதலான வெப்பத்தை கட்டுப்படுத்தவும் செய்கிறது.
-- ஆதி வள்ளியப்பன், பொது அறிவு. வெற்றிக்கொடி. அறிவு உயர்வு தரும் . சிறப்புப் பகுதி.
--   -' தி இந்து '  நாளிதழ் ..திங்கள், அக்டோபர் 28, 2013.  

Thursday, March 27, 2014

நம்பர் பிளேட் !

   வாகனங்களில் ' நம்பர் பிளேட் ' பொருத்துகிறோம்.  உலகில் முதன் முதலில் இப்படிப் ' பதிவு எண் ' கொடுத்து சாலையில் வாகனங்களை ஓடவிட்டவர்கள் ஃப்ரான்ஸ் நாட்டினர்தான்.  நான்கு சக்கர வாகனங்களுக்குத்தான் முதலில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டன.  1893ம் ஆண்டில் இந்த நடைமுறை பரவலாகியது.  கதவுகளூக்கு எண் இடும் வழக்கத்தையுக் ஃப்ரான்ஸ் நாட்டினர்தான் கொண்டுவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-- ஏ.ஆர்.ராஜகணேஷ், திருச்சி..  சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.    

Wednesday, March 26, 2014

கண்பார்வை பாதிக்கும்.

விண்வெளியில் இருந்தால் கண்பார்வை  பாதிக்கும்.
     விண்வெளியில் வெறும் 13 நாள்கள் தங்கியிருக்கும்போது உண்டாகும் அழுத்தத்தினால் கண்ணின் அமைப்பிலும், மரபுக்கூறுகளிலும் பெரும் மாற்றம் ஏற்படும் எனத்தெரியவந்துள்ளது.
     மரபணுக்களின் அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரெடினா ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறது.  கதிர்வீச்சு வெளிப்பாடால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கலாம்.
     இவற்றில் சில பாதிப்புகளை பூமிக்குத் திரும்பியதும் சரி செய்ய முடியும்.  பார்வை நரம்புகளில் ஏற்படும் சில காயங்கள் உள்ளிட்ட பாதிப்புகளைச் சரி செய்ய முடியாது. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் தொடர்கிறது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- -' தி இந்து '  நாளிதழ் .. சனி, அக்டோபர் 26, 2013. 

Tuesday, March 25, 2014

தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன்.

சில நொடிகளில் தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன்.
     சிலிக்கானில் தயாரிக்கப்பட்ட அதிநவீன சூப்பர் மிந்தேக்கி ( கெபாசிட்டர் )  மூலம், சில நொடிகளில் தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன்
.சாத்தியமாகியுள்ளது
     நுண் மின்னணுச்சுற்றுகளால், இந்த சிலிக்கான் மிந்தேக்கி சக்தியூட்டப்படுகிறது.  இந்த மிந்தேக்கி சோலார் செல்களைப் பயன்படுத்தி ஒரு சில நொடிகளூக்குள் தானாகவே ரீசார்ஜ் ஆகிக்கொள்ளும்.
     மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களில் இது பொருத்தப்படும்.  கட்டுப்படியாகக் கூடிய விலையில் விரைவிலேயே இது சந்தைக்கு வரவுள்ளது.
     சிலிக்கானைக் கொண்டு மின்நோக்கியை உருவாக்க முடியும் என நிபுணர்களிடம் நீங்கள் கூறினால் அது கிறுக்குத்தனாமான யோசனை என்று அவர்கள் கூறுவர்.  ஆனால், நாங்கள் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறோம்.  மின்கலங்களில் வேதிமாற்றங்களின் அடிப்படையில் மின்சக்தி தேக்கப்படுகிறது.  இதற்கு மாற்றாக, நுண்துளைப் பொருள்களில் ( போரஸ் ) மேற்பரப்பில் அயனிச் சேகரத்தின் மூலம் மின்சக்தி சேமிக்கப்படுகிறது.
     இதன் விளைவாக சில நிமிடங்களில் மின்சக்தியைச் சேமிக்கவோ,  செலவிடவோ இயலுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- -' தி இந்து '  நாளிதழ் .. சனி, அக்டோபர் 26, 2013.   

Monday, March 24, 2014

தமிழ்த் தண்ணீர் !

  நீர்நிலைகள் இருக்கும் இடங்களுக்குக் குளம், ஊற்று, நதி, குட்டை, ஆறு, அருவி, சமுத்திரம் என எத்தனையோ பெயர்கள்.  ஆனால், நீங்கள் அதிகம் கேள்விப்பாடத தமிழ்ப் பெயர்களும் தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு உண்டு.  அவை...
சுணை  --  ஊற்று.
தீர்த்திகை  --  நதி.
கலுழி  --  காட்டாறு.
கிண்ணகம்  --  வெள்ளம்.
கூவம், கேணி  --  கிணறு.
ஊறுணி  -- குளம்.
-- து.விஷ்ணு பிரசாத், திண்டிவனம்.  சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால். 

Sunday, March 23, 2014

'ஓகே'

'ஓகே'வுக்கு இன்று 175வது வயது!
     உலகில் எல்லோராலும் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை என்று உண்டென்றால் அது 'ஓகே'தான்.  நமது ஒப்புதலை, எல்லாம் சரியாக இருக்கிறது என்பதை மிகச் சுருக்கமாக தெரிவிக்க 'ஓகே' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம்.
     தாங்கள் அடைந்த பயனை மிகச் சுருக்கமாக தெரிவிக்கும் வழியாக அமெரிக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஓகே என்ற வார்த்தை.
     மது அருந்தியபின் ஏற்படும் உனர்வை வெளிப்படுத்தும் 'ஓக்...ஆயே' என்ற சொல்லாடல், கிரேக்க மொழியில் இது நல்லது என்பதை தெரிவிக்க பயன்படும் 'ஓலா காலா' என்ற வார்த்தைகளில் இருந்து ஓகே என்ற வார்த்தை தருவிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுவதை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி உறுதியாக மறுக்கிறது.
     ஒருவரின் ஒப்புதலை, சம்மதத்தை வெளிப்படுத்தும் அர்த்தத்தில் பயன்படுத்தும் ஓகே வார்த்தை 'ஆல் கரெக்ட்' என்ற அர்த்தம் கொடுக்கும் 'ஓர்ல் கொரெக்ட்' என்ற பேச்சுவழக்கு வார்த்தையில் இருந்து உருவாகியிருக்கல்லாம் என்கிறார் அமெரிக்காவின் பேராசிரியர், 'ஓகே' என்ற வார்த்தையின் வரலாறு மற்றும் அர்த்தம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவருமான ஆலென்மெட்கார்ப்.
     1838 மார்ச் 23ம் தேதியில் வெளியான கட்டுரையில் தான் 'ஓகே' என்ற வார்த்தை முதன்முதலில் அச்சிடப்பட்டிருந்தது என்பதை கொலம்பியா பேராசிரியர், ஆலன்வால்கா உறுதி செய்துள்ளார்.
     குழந்தையின் 'ம்மா...' என்ற வார்த்தைக்கு அடுத்த படியாகாதிகம் பயன்படுத்தும் வார்த்தையான 'ஓகே' முதன்முதலில் அச்சானதன் 175வது ஆண்டு தினம் இன்று என்பது மொழியியல் மற்றும் வார்த்தை ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தி என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
--- தினமலர் நாளிதழ்.  23-3-2014. 

செக்கிங் ப்ளீஸ்!

   எறும்புகள் கூட்டுக்குச் செல்லும்போது, ஓர் எறும்பு அங்கே நின்றவாறு, உள்ளே வருகிற ஒவ்வொரு எறும்பையும் தொடும்.  அந்தக் கூட்டின் பாதுகாவலர் எறும்பான அது தனது உணர்கொம்புகள் மூலம் இப்படி கூட்டுக்குள் நிழையும் ஒவ்வோர் எறும்பையும் தொட்டு இவர் நம்மவர்தானா, வெளிக்கூட்டினரா எனப் பரிசோதித்த பின்னரே, கூட்டுக்குள் அனுமதிக்கும்.  வருகின்ற எறும்புகளின் உடம்பில் இருந்து வெளியேறும் வேதிப்பொருள் மூலம் தன் கூட்டு எறும்புகளின் வாசனையை அந்தக் காவலாளி எறும்பு உறுதி செய்கிறது.
-- செ.தீபக்ராஜா, தேவக்கோட்டை.    சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால். 

Saturday, March 22, 2014

தெரிந்து கொள்வோம்!

*  விமான நிலையங்கள், வணிக வளாகங்களில் இருக்கும் கதவுகள், தானாகத் திறந்து மூடுவதைப் பார்த்திருப்பீர்கள்.  இதற்கு உதவியாக இருப்பது, ' ஸெலினியம் ' என்ற  தனிமம்.  இது, எளிதில் மின்சாரத்தைக் கடத்தும்.  என்றாலும், வெளிச்சத்தில் மட்டுமே மின்சாரத்தைக் கடத்தும் குணம்கொண்டது.  தானியங்கிக் கதவுகளில் ஸெலினியம்
   தகடும், அதில் ஒளிபடும் அமைப்பும் இருக்கும்.   நாம் கதவின் அருகே சென்றதும் ஒளி தடைபடுவதால், கதவு தானாகத் திறக்கிறது.

*  இசைக்கு நிகராக இயற்கையாகவே இசை எழுப்பும் பறவைகள் எத்தனையோ உண்டு.  அந்தப் பறவைகளின் ஒலி மனிதனின் உயர் ரத்த அழுத்தத்தைக்கூடச் சரிசெய்யும்  வல்லமை பெற்றது.

*  சாதாரணமாகக் காலை வேளைகளில் மரஞ்செடி கொடிகளுக்கு மத்தியில் அமர்ந்து பறவைகளை ரசிக்கும்போது அதற்கு இணையான இன்பம் ஏதுமில்லை.  அதனாலேயே  இயற்கை ரசிகரான பாரதியும் உணவுக்கு வைத்திருந்த குறைந்த அளவு அரிசியைக்கூடப் பறவைகளுக்கு உணவாகப் போட்டுவிட்டு பசியாய் இருந்ததாக கூறுவார்கள்.

கூகுளில் தேட...

 ( சிறப்பு )
எளிய முறைகள்.
     குறிப்பிட்ட உங்கள் குறிச்சொற்களுக்கு ஏற்ற பி.டி.எப். கோப்பை மட்டும் தேட நினைக்கிறீர்கள் என்றால், அந்தக் குறிச்சொல்லுடன் File Type: PDF என டைப் செய்தால் போதுமானது.  அதாவது indian Election Result என்ற குறிச்சொல்லில் தேட நினைக்கிறீர்கள் என்றால்  indian Election Result File Type: PDF என டைப் செய்தால் பி.டி.எப். கோப்புகளை மட்டும் தேடல் முடிவுகள் காட்டும்.  ps, doc, ppt, xls, rtf ஆகிய கோப்புகளையும் இதுபோலத் தேடிக் கண்டடையலாம்.
     கூகுள் தேடுதலை ஏற்கனவே பார்த்த பக்கங்களை மறுபடியும் வருவதைத் தவிர்க்க கூகுள் பக்கத்தில் Show Search Tools என்பதை கிளிக் செய்ய வேண்டும்.  அதில் சில தெரிவுகள் ( Options ) இருக்கும்.  அதில் Not Yet Visited என்பதை கிளிக் செய்தால் போதும் ஏற்கனவே பார்த்த பக்கங்கள் நீக்கிப் புதிய தேடல் முடிவுகளை கூகுள் நமக்கு வழங்கும்.
     கல்வி தொடர்பாக தேடலுக்கு Site: edu எனக் குறிச்சொல் இடலாம்.  இதனால் தேடுதல் சுலபமாகும்.  கல்வியிலேயே கணிதத் தேர்வு குறித்து தேடவேண்டியிருப்பின் site: edu maths exams என்ற சொற்களை போட்டுத் தேடினால் எளிதில் தீர்வு கிடைக்கும்.
     நமக்குத் தேவையான தகவல்களை விரிவாகத் தேட நமக்குத் தெரிந்த இணைய தளத்தோடு தொடர்புடைய வேறு இணையதளங்களில் தகவல்களை தேட வேண்டுமெனில் related என்ற சொல்லுடன் நாமறிந்த இணையதள முகவரியைச் சேர்த்து டைப் செய்து தேடலாம்.  எடுத்துக்காட்டாக related www.hindu.com என்று தேடினால் இந்து இணையதளத்தின் அனைத்துப் பக்கங்களையும் அது போக இந்து என்ற பெயரில் உள்ள இணையதளங்களையும் கூகுள் கொண்டுவந்து சேர்க்கும்.
-- வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, மார்ச் 22,2014.

Friday, March 21, 2014

ஊசி போடுவது !

சில டாக்டர்கள் ஊசிபோடுவதற்கு முன்னால், ஊசி போடப்போகும் உடல் பகுதியை பஞ்சினால் வேகமாக துடைத்துவிட்டு ஊசி போடுகிறார்களே, என்ன காரணம்?
     அந்த திரவம் ஆல்கஹால்.  அந்த ஆல்கஹாலை ஊசிபோடும் இடத்தில் தடவும்போது,  அங்குள்ள சின்னஞ்சிறிய கிருமிகள் இறந்துவிடுகின்றன.   இப்படிச் செய்யாவிட்டால் ஊசி போதும்போது, அந்த ஊசியின் பக்கவாட்டில் நம் தோலில் உள்ள நுண்ணுயிர்கள் ஒட்டிக்கொண்டு நம் உடலுக்குள் சென்றுவிடலாம்.  இதைத் தவிர்க்கத்தான் டாக்டர்கள் அப்படிச் செய்கிறார்கள்.
--குட்டீஸ் சந்தேக மேடை ?!  -- ஜி.என்.எஸ்.
-- தினமலர். சிறுவர் மலர். அக்டோபர் 18, 2013.

Thursday, March 20, 2014

ஞாபகமறதிக்கு புரோட்டீன் !

    முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபகமறதியைப் போக்கும் புரோட்டீனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  ' Rb Ap 48 ' என்ற இந்தப் புரோட்டீனை,  வயதான எலிகளிடம் பரிசோதித்தனர்.  அவை, இளம் எலிகளைப் போல ஞாபகசக்தியுடன் வேலைகளைச் செய்தனவாம்.  எனவே,  இவை விரைவில் மனிதர்களுக்கான  ஞாபகசக்தி மருந்தாகத் தயாரிக்கப்படுமாம்.
     ஹை ஜாலி... இனிமே,  ' என் மூக்குக் கண்ணாடியை எங்கே வெச்சேன்?னு நம்ம தாத்தா, நம்மகிட்டே கேட்க மாட்டார்.
-- ந.சகானா, காஞ்சிபுரம்.  சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.    

Wednesday, March 19, 2014

முதல் எலக்ட்ரிக் பஸ்!

  ( சிறப்பு )
     இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் 'மின்சார பஸ்' அறிமுகம் செய்யப்பட்டது.  முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் இந்த பஸ்ஸில் இருந்து புகை முற்றிலும் வெளிவருவதில்லை.
அதி நவீன பஸ்
     மற்ற பஸ்களைக் காட்டிலும் மின்சார பஸ்ஸில் பல்வேறு அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக பஸ்ஸின் முன் பக்கம், பின் பக்கம் என 2 பக்கங்களிலும் 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இதன் மூலம் பேருந்தில் இருக்கும் பயணிகளை பாதுகாக்கவும், விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் முடியும்.  அதே போல ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியே டிவி, இணையதள வசதி செய்யப்பட்டுள்ளன.
     பயணிகளுக்கு அடுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் எல்,இ.டி. அறிவிப்புப் பலகையும், ஒலிபெருக்கியும், மின்சாரத்தின் மூலம் இயங்கும் கதவுகளும் இருக்கின்றன.  31 இருக்கைகள் மட்டுமே இந்த பஸ்ஸில் உள்ளன.  மாற்றுத் திற்னாளிகளுக்கான சிறப்பு இருக்கைகள் இதில் உள்ளன.
     மின்சார பஸ்ஸில் இன்ஜின் ஆயில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எதுவும் தேவைப்படாது.  அதே வேளையில் மற்ற வாகனங்கள் எழுப்பும் ஒலியை கட்டிலும் குறைந்த அளவிலான ஒலியை    மட்டுமே மின்சார பஸ் எழுப்புகிறது.  மேலும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த பஸ் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் மேடு, பள்லங்களில் அதிகம் குலுக்காமல் பயணிக்க முடியும்.  மேலும் விபத்தின்போது தப்பிக்கும் வகையில் அவசரகால கதவுகளும் பொருத்தப்பட்டிருக்கின்றது.
எல்லா வகையிலும் சிறந்த வாகனம்
     இந்த பஸ்ஸில் 540 வோல்ட் பேட்டரி ( மின்கலம் ) பயன்படுத்தப்பட்டுள்ளது.  6 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் 250 கி.மீ. தூரம் பயணம் செய்யமுடியும்.  3 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் தாராளமாக 100 கி.மீ. பயணிக்கலாம்.  அதிகபட்சமாக 96 கி.மீ. வேகத்திலும், சரியாக 60-65 கி,மீ. வேகத்திலும் செல்லலாம்.  மின்சாரம் இல்லாத மின்வெட்டு நாட்களில் சோலார் பேனல்களின் மூலம் மின்சாரம் பெறும் வசதியும் உள்ளது.
     பேட்டரியால் ஏற்படும் விபத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில் அயர்ன் ( iron battery ) பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த பேருந்தின் விலை ரூ.2.7 கோடி.  இந்தியாவில் பயன்படுத்தப்படும் பேருந்துகளை விட விலை அதிகமாக இருப்பினும், இது அரசிற்கு அதிக லாபத்தை வழங்கக்கூடியது.  ஏனென்றால், எரிபொருட்களை பயன்படுத்தும் பஸ்ஸில் 1 கி.மீ. தூரத்திற்கு 18 ரூபாய் செலவாகிறது.  ஆனால் இந்த பஸ்ஸில் 1 கி.மீ. தூரத்திற்கு 7 ரூபாய் மட்டுமே செலவு ஆகிறது.
     முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட  இப்பேருந்தில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.15-ம் அதிகபட்ச கட்டணமாக ரூ.80-ம் வசூலிக்கப்படுகிறது.
-- இரா.வினோத்.  பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், மார்ச் 19,2014. 

யம்மா... எத்தனை பெயர்கள் !

   வேழம், களிறு, பிடி, கலபம், மாதங்கம், கைமா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு...
     இதெல்லாம் என்ன தெரியுமா ?
     சங்க இலக்கியங்களில் யானைக்கு இருந்த பல்வேறு பெயர்கள்.  இதில் ஆண், பெண் என்ற வேறூபாடுகள் உண்டு.  உதாரணமாக,  ' களிறு ' என்பது ஆண் யானையையும் ' பிடி ' என்பது பெண் யானையையும் குறிக்கும்.
-- ரா.தனுஜா,  ராஜபாளையம்.     சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.  

Tuesday, March 18, 2014

சூப்பர் 6.

*  சூரிய ஒளி பூமியை வந்தடைய எட்டரை நிமிடங்கள் பிடிக்கும்.
*  உலகின் மிக உயரமான மரம்.  கலிஃபோர்னியாவில் காணப்படும் செகோயா. ( SEQUOUA ) .  இதன் உயரம் 360 அடி !
*  பார்பி பொம்மையின் முழுப் பெயர், பார்பி மில்லிசென்ட் ராபர்ட்ஸ்  ( BARBIE  MILLICENT  ROBERTS ).
*  1681 - ல் , கடைசியாக இருந்த ' டோடோ பறவை '  ( DODO BIRD )  இறந்தது.
* ' பழங்களின் ராஜா '  என்று அழைக்கப்படுவது மாம்பழம் !
*  உலகில் மிக அதிகமாகப் பயிரிடப்படும் தானியம்.  மக்காச்சோளம் !
---    சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.      

Monday, March 17, 2014

மனையும் அளவீடும்

  சில ஊர்களில் நிலத்தின் அளவீடுகளை சென்ட்,  குழி எனக் குறிப்பிடுவார்கள்.  ரியல் எஸ்டேட் துறையில் பயன்படுத்தப்படும் அளவீடுகளை தெரிந்துகொள்வது நல்லது.
1  ஹெக்டேர் ......................... 2 ஏக்கர் 47 சென்ட்.
1  ஹெக்டேர் ......................... 10,000 சதுர மீட்டர்.
1  ஏக்கர் .................................  0.405 ஹெக்டேர்.
1  ஏக்கர் .................................  4,046. 82 சதுர மீட்டர்.
1  ஏக்கர் .................................  43.560 சதுர அடி.
1  ஏக்கர் ..................................  100 சென்ட்.
1  சென்ட் ................................  435. 60 சதுர அடி.
1  சென்ட் ................................  40.5 சதுர மீட்டர். (  5.52 சென்ட் ).
1  கிரவுண்ட் ............................ 2400 சதுர அடி.
1  மீட்டர் .................................  3.281 அடி.
1  குழி ......................................  144 சதுர அடி.
3  குழி ......................................  1 சென்ட்.
300 குழி ...................................  1 மா.
1  காணி ...................................  1.32 ஏக்கர்.
1  அடி .......................................  12 இஞ்ச்   (  30.48 செ.மீ. )
1 செயின் ...................................  66 அடி (  100 லிங்க் ).
1  லிங்க் .....................................  0.66 அடி  (  7.92 அங்குலம் ).
-- சொந்த வீடு.
--' தி இந்து '  நாளிதழ் . இணைப்பு. சனி, அக்டோபர் 26, 2013.  

Sunday, March 16, 2014

கிருமிகளுக்கு டிஷ்ஷூம்!

     பொதுவாகவே,  நம் நாட்டில் கழிப்பறை சுத்தம் பற்றிய விழிப்பு உணர்வு குறைவு.  அதைப் பற்றி பெசறதும்கூட ஏதோ வேண்டாத விஷயமா நினைக்கிறாங்க.  ஆனா,  உணவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ,  அந்த அளவுக்கு கழிப்பறை சுத்தத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்.
    சென்னை, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் த்ரவிதா,  வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறையில் கிருமிகள் பரவாமல் தூய்மையாக இருக்க மிக எளிமையான வழிமுறை ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.
    அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை எடுத்துக்கங்க.  கீழே இருந்து இரண்டு இன்ச் உயரத்தில் சின்னத் துளை ஒன்றைப் போடுங்க. அந்தப் பாட்டிலில் ஃபினாயில் நிரப்பி, டாய்லெட் ஃப்ளஷ் டாங்க் உள்ளே வைங்க.  ஒவ்வொரு முறையும் டாங்க் ஃப்ளஷ் ஆகும்போது, ஃபினாயில் பாட்டிலிலிருந்து டாங்க் உள்ளே கொஞ்சம் கொஞ்சமா விழும்.  பாட்டிலில் ஓட்டை போட்ட இடம்வரை டாங்க் நீர் நிரம்பினதும் பாட்டிலிலிருந்து ஃபினாயில் வெளியே வர்றது நின்னுடும்.
    அதே நேரம், ஒவ்வொரு முறையும் ஃபிளஷ் பண்ணும்போதும் கொஞ்சமாக ஃப்னாயில் கலந்த தண்ணீர் டாய்லெட்டில் வரும்.  எப்பவும் டாய்லெட் ஃபினாயில் வாசத்தோட இருக்கும்.  கிருமிகள் சேராது.  அது மட்டுமா?  இந்த அரை லிட்டர் பாட்டிலால், ஒவ்வொரு ஃபிளஷ்ஷுக்கும் அரை லிட்டர் தண்ணீர் மிச்சமாகும்.  எப்படின்னா... அரை லிட்டர் தண்ணீர் இருக்க வேண்டிய இடத்தை ஃபினாயில் பாட்டில் ஆக்கிரமிச்சுக்குதே.
-- அ.பார்வதி.   சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.    

Saturday, March 15, 2014

வைக்கோல் குக்கர் !

வியக்கவைக்கும் வைக்கோல் குக்கர் !
   "  வைக்கோல் மூலம் வீட்டில் அமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம் "என்கிறார் கோபிச்செட்டிபாளையம்,  ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சிந்து.
     சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு,  அதில் அரிசியைப் போடுவோம்.  அது முழுமையாக வேகும் வரை காஸ் அடுப்பு எரியும்.  அப்படி இல்லாமல்,  ஒரு கொதிவந்ததும் அந்தப் பாத்திரத்தை எடுத்து,  வைக்கோல் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டியில் நடுவில் வைக்கணும்.  பிறகு,  வைக்கோலை அடைச்சு செய்த ஒரு தலையணையால் மூடிடணும்.  வைக்கோல் என்பது திறன் குறைந்த ஒரு வெப்பக் கடத்தி.  அதனால், அது வெப்பம் வெளியே போகாமல் பாதுகாக்கும்.  அந்த வெப்பத்தில் உள்ளே இருக்கும் அரிசி, நாம் குக்கரில் சமைக்கும் நேரத்தில் வெந்துவிடும்   இதனால்,  எரிபொருள் மிச்சம்.
     சாதம் மட்டுமல்ல, பருப்பு, சுண்டல் மற்றும் அனைத்து விதமான காய்கறிகளையும் இப்படி வைக்கோல் குக்கர் மூலம் வேகவைக்கலாம்.
     இதனால், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சப்படும்.  ஆரோக்கியமானதும்கூட.  முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது.  குக்கரில் சமைக்கிறபோது, கஞ்சி வெளியே போக வாய்ப்பு இல்லாததால் அரிசியோட கலந்துடுது... இது சர்க்கரை நோய்க்குக் காரணமாயிடுது. ஆனா, இந்த முறையில் நாம் கஞ்சியைத் தனியே வடிச்சுக்கலாம்.  சுற்றிச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்.
-- மா.அ. மோகன் பிரபாகரன்.  சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.   

Friday, March 14, 2014

' குன்றிமணி '

' குன்றிமணி ' அளவாவது தங்கம் இருக்கிறதா?
      குன்றி என்னும் செடியின் கொத்துக்கொத்தான விதைகள்தான் குன்றிமணி.  இந்த விதைகள் முழுவதும் சிவப்பாகவோ,  பாதி சிவப்பாகவும் பாதி கறுப்பாகவோ இருக்கும்.  'குன்றி '  என்று இந்தச் செடியைச் சொல்லும் வழக்கம் இன்று மறைந்துவிட்டது.  செடியையும் அதன் விதைகளையும் குன்றிமணி என்றுதான் தற்காலத்தில்  அழைக்கிறார்கள்.
தங்கத்தை நிறுக்க குன்றிமணி என்ற அளவு முன்பு பயன்படுத்தப்பட்டது என்பது இப்போது எவ்வளவு பேருக்குத் தெரியும்?  குன்றிமணி என்பது 33.33 மில்லி கிராம் அளவு.  சர்வதேச அளவை முறைகளின் ஆதிக்கத்தால்,  இது போன்ற தமிழ் அளவை முறைகள் வழக்கொழிந்துவிட்டன.   இருந்தாலும், கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் ' வீட்டுல ஒரு முன்றிமணி அளவுகூடத் தங்கம் இல்லைன்னா எப்படி? ' என்று சொல்வதுண்டு.  அந்த வகையில் குன்றிமணி என்ற நிறுத்தல் அளவை இன்னும் உயிரைப் பீடித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  நம் வீடுகளில் குன்றிமணி அளவாவது தங்கம் இருக்கும்.  ஆனால், குன்றிமனி என்ற அளவு இல்லாமல் போய்விட்டது வருத்தம்தான்.
     பொன்னை நிறுப்பது தொடர்பான வேறு சில சொற்கள் :
நெல்
( நெல்லெடை ) .............. 8.3 மி.கி.
மஞ்சாடி .......................... 66.67  மி.கி.
பணம் ( பனவெடை ) .....133.33  மி.கி.
வராகன் ........................... 1.067 கிராம்
அழஞ்சு ............................ 5.33 கிராம்.
கஃக ................................. 10.4 கிராம்.
பலம் ................................ 41.6 கிராம்.
-- சாத்தனார்.  அறிவோம் நம் மொழியை. கருத்துப் பேழை.
--   ' தி இந்து ' .நாளிதழ் . வியாழன்  அக்டோபர் 24  ,2013.  

Thursday, March 13, 2014


தங்கம்.

 உலகில் நாகரீகம் வளரத்தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை ஒரு லட்சத்து 74 ஆயிரம் டன் தங்கத்தை பூமியில் இருந்து வெட்டி எடுத்துள்ளோம்.   பூமிக்கு அடியில் இன்னும் 51 ஆயிரம் டன் தங்கம் இருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் சர்வே மதிப்பிட்டுள்ளது.
     ஆபரணம், முதலீட்டுகளையும் தாண்டி எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பதிலும், கேன்சர் உட்பட சில மருத்துவ சிகிச்சை முறைகளிலும் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதால்,  கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கடந்த மார்ச் மாதத்துக்குள் தங்கத்தின் விலை 482 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
-- தினமலர் . 24-10-2013.                                        
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
--   ' தி இந்து ' .நாளிதழ் . வியாழன்  அக்டோபர் 24  ,2013. 

Wednesday, March 12, 2014

தங்கம் காய்க்கும் மரங்கள் !

  ஆஸ்திரேலிய  விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
     வடக்கு ஆஸ்த்திரேலியாவின் கல்கூர்லி என்ற பகுதியில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்கிறது என 19ம் நூற்றாண்டில் பரபரப்பாக பேசப்பட்டது.  அந்த பகுதியில் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.  அப்போது அந்த பகுதியில் வளர்ந்திருந்த சில யூக்கலிப்டஸ் மரத்தின் கிளைகளிலும், இலைகளிலும் தங்கத்தின் துகள்கள் கலந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.  மையா டிடெக்டர் என்னும் கருவியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மனித தலைமுடியை விட 5 மடங்கு சிறிய துகள்களாக தங்கம் யூக்கலிப்டஸ் மரத்தின் இலை மற்றும் கிளைகளில் படிந்திருப்பதை கண்டுபிடித்தனர்.  இதுகுறித்து, அந்த ஆராய்ச்சி கழகத்தின் புவியியல் வல்லுனர் மெல்லின் லிட்ரன் கூறுகையில். "10 மீட்டர் உயரத்துக்கு மேல் வளர்ந்திருக்கும் யூக்கலிப்டஸ் மரத்தின் வேர் பூமிக்கடியில் 40 மீட்டர் ஆழம் வரை சென்றிருக்கும்.  வறட்சி காலத்தில் ஈரப்பதத்தை தேடி மரத்தின் வேர்கள் இன்னும் அதிக ஆழத்துக்கு சென்றிருக்கும்.  அப்போது அந்த ஆழத்தில் படிந்துள்ள தங்கத்துகள் கலந்த நீரை மரத்தின் வேர்கள் உறிஞ்சி, மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும்.  மரத்தின் வளர்ச்சிக்கு தங்கம் ஒவ்வாத காரணத்தால் இலைகளின் வழியாக வெளியேற்றப்படுகிறது.  ஆனால் 500 மரங்களில் படிந்துள்ள தங்கத்தின் அளவை எடுத்தால் அது ஒரு மோதிரம் செய்யும் அளவில் மட்டுமே இருக்கும் " என்றார்.
     பூமிக்கு அடியில் படிந்திருக்கும் கனிமங்களை கண்டறிவதற்கும், அவற்றை பூமிக்கு அடியில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-- தினமலர் . 24-10-2013.  

Tuesday, March 11, 2014

குரங்கிலிருந்து...

குரங்கிலிருந்து மீண்டும் மனிதன் தோன்ற முடியுமா?
      பூமியில் மனிதர்கள் ஒருக்கால் அழிந்துவிட்டால்,  மீண்டும் மனிதக்குரங்குகளில் இருந்து மனிதன் தோன்ற வாய்ப்பு இருக்கிறதா?  இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முதலில் நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.  பரவலாக நம்பப்படுவது,  கூறப்படுவதைப் போல நாம் மனிதக் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையவில்லை.
நமக்கும், மனிதக்குரங்குகளுக்கும் பொதுவான ஒரு மூதாதை 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.  அந்த பொது மூதாதையை Pan Prior என்று அழைக்கிறார்கள்  அல்லது மனிதன், குரங்கு பொது மூதாதை என்கிறார்கள்.  அறிவியல்ரீதியில் நாம் இன்னமும் மனிதர்களாக வகைப்படுத்தப்படவில்லை.  நாம் மனிதக்குரங்குகள்தான்.  அதாவது,  சமூகத்தில் வாழும் மனிதக்குரங்குகள்.
     அதேநேரம் நமது பொது மூதாதை இப்போது வாழ்கிறது என்று வைத்துக்கொண்டாலும்கூட,  பரிணாம வளர்ச்சி என்பது தொடர்பற்ற  மரபணு கலப்பு  ( Gene mutation),  சுற்றுச்சூழல் நெருக்கடிகளால்  (  Envionmental  pressures ) உருவாகும் இயற்கைத் தேர்வு (  Natural selection )  ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிகழ முடியும்.  இவற்றை வைத்துப் பார்த்தால்,  மீன்டும் மனித இனம் தான் கடந்து வந்த பாதையைத் தொடுவதற்கு மிகக் குறைந்தபட்ச வாய்ப்புகள்கூட இல்லை.
-- அறிவியல் அறிவோம்.  
--   ' தி இந்து ' .நாளிதழ் . செவ்வாய்  அக்டோபர் 22  ,2013.  

Monday, March 10, 2014

சிறுநீரில் மின்சாரம் !

   நீங்கள் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம், உங்கள் கைபேசிக்கு மின்னூட்டம் ( ரீசார்ஜ் ) செய்யமுடிந்தால் எப்படியிருக்கும்?  குழப்பமாக இருக்கிறதா?  பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் ரோபாடிக்ஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,  நுண்ணுயிர் ஆற்றல் கலன் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.  இந்த மின்கலத்துக்குள் சிறுநீர் செல்லும்போது நுண்ணுயிரிகள் அவற்றைச்  சிதைக்கின்றன.  இந்த நடைமுறையின்போது எலக்ட்ரோடுகள் உற்பத்திச் செய்யப்படுகிறன.  அது மின்சாரமாக மாற்றப்படுகிறது.  இந்தக் கலன் மூலம் 2 எஸ்.எம்.எஸ்., ஒரு அழைப்பைச் செய்யத் தேவையான மின்சாரம் கிடைத்ததாம்.  மின்னேற்றியை மேம்படுத்த இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது முயன்றுவருகிறார்கள்.
-- உயிர் மூச்சு . பசுமையின் சுவாசம். சிறப்புப் பகுதி.
--   ' தி இந்து ' .நாளிதழ் . செவ்வாய்  அக்டோபர் 22  ,2013.   .   

Sunday, March 9, 2014

அச்சச்சோ தப்பு...

அச்சச்சோ தப்பு. பண்ணிட்டனே !  மனிதர்களைப் போலவே சிந்திக்கும் எலிகள்.
      வாஷிங்டன் :  ஏதேனும் ஒரு செயல் தவறாக நடந்து விட்டால் அது குறித்து மனிதர்கள் சிந்திக்கும் விதமும்,  எலிகள் சிந்திக்கும் விதமும் ஒரேமாதிரியாக இருக்கிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
     அத்தவறுகளுக்கு மாற்றாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்வது குறித்து மனிதர்களின் மூளைகளும்,  எலிகளின் மூளைகளும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கின்றன.
     மோட்டார் கார்டெக்ஸ் எனப்படும் மூளையின் இயக்க மேற்பட்டைப் பகுதியில் இச்சயல்பாடுகள் நிகழ்கின்றன.  இந்த  ஆய்வில் மனிதர்களும், எலிகளூம் தவறுகளுக்காகத் தகவமைக்கும்போது எப்படி மிக எளிதாக நேரத்தைக் கணக்கிட்டுச் செயல்படுகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.  மனிதர்களின் தகவமைப்புக் கட்டுப்பாட்டுத் திறன் குறித்து மேலும் அறிவதற்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்லனர்.
     இந்த ஆய்வுகள் ஓசியு, மன அழுத்தம், ஏடிஎச்டி, முடக்குவாதம் போன்ற மூளை சார்ந்த நோய்களுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
--    பி.டி.ஐ.  சர்வதேசம்.
--    ' தி இந்து ' .நாளிதழ் . செவ்வாய்  அக்டோபர் 22  ,2013.  

Saturday, March 8, 2014

பாதை எப்படி?

பாதை, பருவ நிலை எப்படி?   இனி ஹெல்மெட் சொல்லும்.
     வாஷிங்டன் :  செல்ல வேண்டிய பாதை, பருவ நிலை, வரைபடம் எனப் பல்வேறு தகவல்களையும் இணைத்துக் கொடுக்கும் ஹெல்மெட் கண்டறியப்பட்டுள்ளது.
     சிலிக்கான் வேலி பகுதியைச் சேர்ந்த நிறுவனம் இந்த ஹெல்மெட்டைக் கண்டறிந்துள்ளது.  ஹெல்மெட்டினுள் சிறிய திரை அமைக்கப்பட்டுள்ளது.  இதில், வலது கன்னம் அருகே சாலை வழித்தடம் தெளிவாகக் காண்பிக்கப்படும்.  ஓட்டுநருக்குப் பின்புறம் உள்ளவற்றை 180 டிகிரி கோணத்தில் காண்பிப்பதற்கான கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது.
      ஆண்டிராய்டு தளத்தில், புளூடூத் தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்த ஹெல்மெட்டில்,  செல்லவேண்டிய வழித்தட வரைபடம்,  வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
      ஸ்மார்ட் போனுடன் இணைக்கப்படும் தொழில்நுட்பம் இருப்பதால்,  தொலைபேசி அழைப்பு, இசை, குறுஞ்சேய்திகளை  அனுப்புதல், சென்றடைய வேண்டிய இடத்தை வரைபடத்தின் மூலம் தேர்வு செய்தல் அல்லது மாற்றுதல் போன்ற செயல்பாடுகளைக் கைகளைப் பயன்படுத்தாமலேயே, குரல் மூலம் கட்டுப்படுத்தும் வசதியும் உண்டு.  இந்த ஹெல்மெட் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--    ' தி இந்து ' .நாளிதழ் . செவ்வாய்  அக்டோபர் 22  ,2013.

தெரிந்தது...

 ஸ்டாக் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் இல்லை என்ற பதிலே ரேஷன் கடையில் கிடைக்கும்.  இனி, இப்படி ஏமாற்ற முடியாது.
ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினால், அன்றைய சரக்கிருப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
எஸ் எம் எஸ் அனுப்பும் முறை :
      குடும்ப அட்டைதாரார்கள் ( பிடிஎஸ் )  -  இடைவெளி -- மாவட்ட குறியீடு  --  இடைவெளி - கடை எண் என்ற முறைய்யில் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும்.   உதாரணமாக பிடிஎஸ் 01 பி இ 014 என்று அனுப்பவேண்டும்.
      குடும்ப அட்டையில் உள்ள எண்ணில் முதல் இரண்டு எழுத்துகள் மாவட்ட குறியீடு எண்.  இது போல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது.
      எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்கள் 97890- 06493, 97890-05450, 01764-80226, 91764-80527, 91764-80216 என்ற மொபைல் எங்களில் ஏதாவது ஒரு எண்ணிற்கு அனுப்பலாம்.  உடனே பதில் கிடைக்கும்.
-- மா.கல்பனா, பழனி, கூத்தப்பாடி.                              
-- தினமலர்.பெண்கள்மலர். 8-3-2014.. 

Friday, March 7, 2014

நிஜ எந்திரன்

  எந்திரன் படத்தில் நாம் பார்த்து, ரசித்த ரோபோ, நிஜமாகவே வந்துவிட்டது.  அமெரிக்காவின் பாஸ்டன் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் அதிநவீனமான ரோபோ ஒன்றைத் தயாரித்துள்ளது.  ஆறடி உயரமும், 149.7 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோ அலுமினியம் மற்றும் டைட்டானியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.  13 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ரோபோ, ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
-- ரிலாக்ஸ் .
--   ' தி இந்து ' .நாளிதழ் . வெள்ளி, அக்டோபர் 18,2013.   

Thursday, March 6, 2014

இதையும் தெரிஞ்சுக்கோங்க...

*  படித்தவன் பாடம் நடத்துகிறான்.  படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்.
*  அபங்கம் என்றால் குற்றமில்லாதது, பங்கம் இல்லாதது.  குற்றமில்லாதது ஆனந்தம்.  சிறுசிறு பாடல்கள் மூலம் இறைவனுடன் பேசுதல் என்றும் இதற்கு
   பொருல் சொல்லலாம்.
*  ஒவ்வொரு அபங்கப் பாடலுக்கும் இத்தனை வரிகள்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் கிடையாது.  எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும்   இருக்கலாம்.  சந்தங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.  அபங்கங்களை பாடுவதற்கு மிகுந்த சங்கீத ஞானம் வேண்டும் என்பது இல்லை.
*  ஈரானில் போதைப் பொருள் கடத்தியதற்காக தூக்கில் போடப்பட்ட அலிரேசா ( 37 ).  12 நிமிடம் தொங்கிய பிறகும் இறக்கவில்லை.  அவரை மீண்டும்  தூக்கில் போடக் கூடாது என்று நீதித்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
--   ' தி இந்து ' . நாளிதழ்களிலிருந்து. . 

Wednesday, March 5, 2014

நோய் பரவல்.

நோய் பரவலைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்.
ஒரே நாளில் தெரிந்துகொள்ளலாம்.  இந்தியாவில் முதல்முறை.
     பொதுவாக எந்த ஊரில் என்ன நோய் தாக்குகிறது என்பதை அறிய, இப்போதுள்ள நடைமுறைகளின் படி சுமார் 6 மாத காலம் ஆகும்.  அதற்குப் பிறகே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  ஆனால் அதற்குள்ளாகப் பல உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.  இவற்றைக் கருத்தில் கொண்டு
' கணினி தொழில்நுட்ப முன் கணிப்பு மேலாண்மை ' எனும் பெயருள்ள மென்பொருள் ஒன்றை சென்னை கிங்ஸ் நோய்த் தடுப்பு நிறுவனத்திடம்
வழங்கப்பட்டது.
     இன்று நாட்டில் எந்த மூலையில் என்ன நோய் தாக்குகிறது என்பது உடனடியாகத் தெரியாது.  அது மற்ற பகுதிகளுக்கும் பரவுவதற்கு முன்னால் அதன் பாதிப்பை முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களூக்குச் சிகிச்சையளிக்க வேண்டும்.  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     கால விரயத்தைத் தடுக்க இந்த மென்பொருளில் சில படிவங்களை மின்னணு முறையில் நிரப்பும்படி வடிவமைத்துள்ளோம்.  தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள களப் பணியாளர்களுக்கு இந்த மென்பொருளை சாதாரண செல்போனில் பதிவு செய்து கொடுத்துவிட்டால் குறுஞ்செய்தி மூலமாக அவர்கள் அந்தப் படிவங்களை நிரப்பி தலைமைக் கணினிக்கு அனுப்பிவிட்டால் போதும்.
     ஆரம்ப சுகாதர நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிகப்பட்ட ஒரு வரைபடமும் இந்த மென்பொருளில் உண்டு. இதில் நோய் பரவல் உள்ள இடங்களை பச்சை, நீலம், மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் காட்டும்.  அதனால் எந்த இடத்தில் மிகக் குறைவாக, ஓரளவு அதிகமாக மற்றும் மிக அதிகமாக நோய்பரவல் உள்ளது என்பதை ஒரே நாளில் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசு வீண் செலவுகளைத் தவிர்க்க முடியும்.
     இந்த மென்பொருள் மூலம் சுமார் 250 நோய்ப் பரவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.  ஒவ்வொரு நாளும் என்ன நோய் எந்த இடங்களில் பரவியுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இந்த மென்பொருளை அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று அவர்களின் வழிகாட்டுதல்படி இது நடைமூறைப்படுத்தப்படும்.
-- தேசம்.
--   ' தி இந்து ' . நாளிதழ் . சனி, அக்டோபர் 19 ,2013.    . 

Tuesday, March 4, 2014

' ஞாங் ஞாங் நவ்யு '

  நாய்களுக்கான பிரத்யேக பீர் ஐட்டங்களை சில வெளிநாட்டு நிறுவனங்கள் சில ஆண்டுகளாகத் தயாரித்து வருகின்றன.  பேருதான் சரக்கு, அதில் ஒப்புக்குக்கூட ஆல்கஹால் கிடையாது.  நாய்கள் சப்புக்கொட்டி சாப்பிடட்டுமே என்று இறைச்சி வாசனையை மட்டும் சேர்ப்பார்கள்.
     ஜப்பானில் செல்லப் பிராணிகளூக்கான ஆகாரங்கள் தயாரிக்கும் பி அண்ட் ஹெச் லைப்ஸ் என்ற நிறுவனம் தற்போது பூனைகளுக்கான ஒயினைத் தயாரித்திருக்கிறது.  ' ஞாங் ஞாங் நவ்யு ' என்று பெயர்.  ஜப்பான் மொழியில் மியாவ் மியாவ் என்று அர்த்தமாம்.  நாய்  பீர் போலவே இதிலும் ஆல்கஹால் கிடையவே கிடையாது. நொதிக்காகத் திராட்சை ஜூஸ் மட்டும் பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.  முதல் கட்டமாக ஆயிரம் பாட்டில்கள் மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள்.  பூனைகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து எலி வாசனை, பால் வாசனை, மீன் வாசனை என மேலும் பல நறுமணங்களில் வரக்கூடும்.  இப்போதைக்கு பாட்டில் விலை 245 ரூபாய் !
--   ' தி இந்து ' . நாளிதழ் . சனி, அக்டோபர் 19 ,2013.   

Monday, March 3, 2014

ஜீரா மீந்துவிட்டதா?

*  தீபாவளியன்று உப்பு வாங்கினால், லஷ்மியே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.  இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
*  பீட்ரூட் அல்வா,  பீட் ரூட் பூரி, பீட்ரூட் திரட்டுப் பால் சிவப்பு நிறம் மாறாமல் இருக்க வினிகரில் முக்கி எடுத்து, நீரை வடிகட்டி நறுக்கினால், கலர் அப்படியே இருக்கும்.
*  கேரட் அல்வா செய்வதாக இருந்தால், கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்து பிறகு தோலைச் சீவினால் மிகச் சுலபமாக
    தோலை நீக்கிவிட முடியும்.
*   குலோப்ஜாமூன் செய்த ஜீரா மீந்துவிட்டதா?  கவலை வேண்டாம்.  ஸ்பெஷல் ' ஷாயி துக்கடா ' செய்து ஜமாய்த்து விடலாம்.  ஆறு அல்லது ஏழு பிரெட் ஸ்லைஸ்களை
     முக்கோண வடிவில் கட் செய்து,  டால்டா அல்லது ரிபைண்ட் ஆயிலில் பொரித்து,  ஜீராவுக்குள் பொடவும்.  இரண்டு நிமிடம் கழித்து எதுத்து, வடிதட்டில் போட்டு
     ஆறவைக்கவும்.  டப்பாவில் போட்டு சில நாட்கள் வைத்துச் சாப்பிடலாம்.  ருசியாக இருக்கும்.  ஜீராவும் மீதமாகாது.
-- அவள் விகடன்.  அக்டோபர் 24 , 2003.       

Sunday, March 2, 2014


டிப்ஸ்...டிப்ஸ்

*  பக்கோடா செய்ய பெரும்பாலும் கடலைமாவுதான் உபயொகிக்கிறோம்.  அவசரத்துக்கு சரி.  அதையே கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து
    பிறகு மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்துக்கொண்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து செய்தால் பக்கோடா மொரமொரப்பாக அதிக
   ருசியுடன் இருக்கும்.
* கோதுமை ரவை உப்புமா என்றாலே யாருக்கும் பிடிக்கவில்லை எங்கள் வீட்டில்.  ரவையை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிளகய், பெருங்காயம், வெங்காயம்
  போட்டு அரைத்து தோசை வார்த்தேன்.  எல்லோருமே சூப்பர் என்றார்கள்.  மிளகாய் சட்னி இதற்கு பெஸ்ட் காம்பினேஷன்.
* மதியம் வடித்த சாதம் மீந்து விட்டால், அதை ஃபிரிட்ஜில் வைத்து, மறுநாள் காலை பொங்கலாக மாற்றலாம்.  பாசிப்பருப்பு வேகவைத்து மிளகு, சீரகம், மிளகாய், இஞ்சி,
   முந்திரியை வறுத்து, தேவையான உப்பு, மஞ்சள் தூளுடன் சாதத்தில் கலந்து இரண்டு விசில் வந்தவுடன் நெய் கலந்தால், மனக்கும் ஈஸி பொங்கல் தயார்.  சாம்பார்  
   போதும்.
*  பிரியாணி மற்றும் ஃப்ரைட் ரைஸ் வகைகள் செய்யும்போது,  அடிபிடிக்காமல் இருக்க அடியில் பிரியாணி இலைகளை பரப்பி தம் போடுங்கள்.
-- அவள் விகடன். ஏப்ரல் 11 , 2003.    

Saturday, March 1, 2014

நாய்க்கறி சாப்பிடுங்கள்!

  இறைவன் பேரைச் சொல்லி அறுக்கப்படாத எந்த விலங்கினத்தையும் உண்ணக்கூடாது.  தாமாக இறந்த விலங்கினங்களைப் புசிக்கக்கூடாது.  ( கடல்வாழ் உயிரினங்கள் விலக்கு )  எந்த விலங்கினத்தின் ரத்தமும் உண்னக்கூடியதில்லை.  பன்றிக்கறியைத் தொடக்கூடது.  இது குரான் சொல்வது ( சூராபகரா 2.173 ).  எனவே நாய், பூனை, குரங்கு மட்டுமல்ல,  வழக்கமாக மாமிச உணவாகும் மிருகங்கள் தவிர மற்ற அனைத்துமே இஸ்லாத்தின் ஹராம்தான்.
     இப்போ என்ன அதுக்கு என்று கேட்டுவிடாதீர்கள்.  பக்ரீத்துக்கு உலகெங்கும் எத்தனை லட்சம் ஆடுகள் வெட்டப்பட்டிருக்கும்.  எத்தனை ஒட்டகங்கள் பிரியாணி யாகியிருக்கும்.  எத்தனை சந்தோஷமாக , திருப்தியாகம் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள். மகா ஜனங்கள்!  ஆனால், இந்த வருஷ பக்ரீத்துக்கு சிரியா மக்களுக்கு பிரியாணியல்ல, வெறும் சோறே பிரச்சினைக்குக்குறியதாகிவிட்டது.  யுத்த களேபரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் வீட்டைத் துறந்து, ஊரைத் துறந்து எங்கெங்கோ ஓடிப் போய் பதுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  தொழுகைக்குக் கூட  மசூதிப் பக்கம் போக முடியாத சூழ்நிலை.  பெருநகரங்கள் நீங்கலாக மற்ற இடங்களில் கடைகண்ணியெல்லாம் சுத்தமாக இழுத்து மூடப்பட்டுவிட்ட நிலையில் சப்பாட்டுக்கு வழியே இல்லாமல், குடிக்க நீர் கூட இல்லாமல் ஒரு மாபெரும் மனிதக்கூட்டம் சின்னாபின்னமாகிக்கொண்டிருகிறது.
--பா.ராகவன்.  சர்வதேசம்.
--  ' தி இந்து ' . வெள்ளி, அக்டோபர் 18,2013.