Saturday, May 31, 2014

மோனோ, மெட்ரோ ரயிகள் !

 மோனோ ரயில்,  மெட்ரோ ரயில் ஆகிய இரண்டு வகை ரயில்களுமே உலகில் மிகக் குறைவான நகரங்களில்தான் இருக்கின்றன.  இவை இரண்டுமே திறமையான, வேகமான போக்குவரத்துகள் என்றாலும் பலவிதங்களில் வேறுபட்டவை.
     மோனோ ரயில் என்பது ஒரே தண்டவாளத்தில் ஓடுவது.  மெட்ரோ ரயில் என்பது, வழக்கமான ரயிகளைப்போல, இணை கோடுகளாக அமைந்த இரண்டு தண்டவாளங்களில் ஓடும்.  மோனோ ரயிலுக்கான அகலம் குறைவானது.  1950 களிலேயே இது அறிமுகமாகிவிட்டது என்றாலும், அவற்றின் மிக அதிகமான உருவாக்க கட்டணம் காரணமாக அவை வேகமாக அறிமுகப்படுத்தப்படவில்லை.  ஜெர்மனியில் முதலில் உருவானது என்றாலும், ஜப்பானில்தான் மோனோ ரயிலை பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.
     மோனோ ரயில் எப்போதும் உயரத்திலுள்ள தண்டவாளத்தில் ஓடும்.  மெட்ரோ ரயில் நிலத்துக்குக் கீழே, நிலத்தில் , நிலத்துக்கு மேலே என்று அனைத்து தடங்களிலும் செல்லும்.  ஷாங்காய், லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில்கள் சரளமாக ஓடுகின்றன.  நம் நாட்டில் கொல்கத்தாவில் அறிமுகமான இது டெல்லியிலும், சமீபத்தில் பெங்களூருவின் ஒரு பகுதியிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.  போதுவாக மோனோ ரயில் மெதுவாகத்தான பயணம் செய்யும்.
-- குட்டீஸ் கேள்வி - பதில்.
-- தினமலர். சிறுவர்மலர். மார்ச் 22, 2013. 

Friday, May 30, 2014

குட்டிமா தூங்குமா.

 நர்சரி பள்ளிக்கூடங்களில் பயிலும் 3 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளை, மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் தூங்கவைப்பதன் மூலம் அவர்களுடைய நினைவாற்றல் பெருகுகிறது என்று அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் பல்கலைக்கழக உளவியல் துறைப் பேராசிரியர்கள் ஆய்வில் கண்டுபிடிதுள்ளனர்.  தூக்கமின்றி படிக்கும் குழந்தைகளால் அதிகபட்சம் 65 சதவிகிதம்தான் படித்ததை நினைவுபடுத்த முடிகிறதாம்.
-- திசை எட்டும். கருத்துப் பேழை.
     அண்டர்டிகா கண்டத்தில் உள்ள வாஸ்டாக் பகுதியில் 1983 ஜூலை 21ம் தேதி மைனஸ் 89.2 டிகிரி செல்சியஸ் ( மைனஸ் 128.6 டிகிரி ஃபாரஹீட் )
குளிர் நிலவியது.  இதுதான் இத்துவரை பதிவான வெப்பநிலையிலேயே மிகக் குறைந்த அளவாகும்.
-- மீட்டர் பேசுது. பூச்செண்டு.
     மரங்கொத்திப் பறவையின் தலைப்பகுதியில் இருக்கும் காற்றுப் பை,  குஷன் போல் செயல்பட்டு தொத்தும்போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்குகிறது.
கண்களின் மேல் உள்ள படலம்,  மரங்களைக் கொத்தும்போது தெறிக்கும் மரத்துகள்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
-- ஜெரீ ஜெய்.மாயாபஜார்.
-- தி இந்து. செப்டம்பர் 25, 2013.

Thursday, May 29, 2014

மென்பானம்.

 மென்பானத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்த மற்றொரு காரணம் கண்டறியப்பட்டுள்ளது.  ஒரு நாளைக்கு நான்கு முறைக்கு மேல் மென்பானங்களைக் குடிக்கும் அமெரிக்கக் குழந்தைகள்,  மற்றவர்களைவிட  அதிக வன்முறை குணத்துடனோ எரிச்சலுடனோ,  கவனம் செலுத்துதலில் குறைபாட்டுடனோ இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.  பொம்மைகளையோ அல்லது பொருள்களையோ உடைப்பது,  மற்ற குழந்தைகளைத் தாக்குவது போன்றவற்றை இந்தக் குழந்தைகள் செய்யக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பருவ வயதைத் தொட்ட சிறுவர்,  சிறுமிகளில் வாரத்துக்கு 5 கேன் மென்பானம் குடிப்பவர்கள் ஆயுதம் வைத்திருக்கவோ,  வன்முறையில் ஈடுபடவோ வாய்ப்பு இருப்பதாக தி ஜர்னல் ஆப்பீடியாட்ரிக்ஸ் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
-- சிறப்புப் பகுதி. சுற்றுச்சூழல்.
--   தி இந்து.  செப்டம்பர் 24, 2013. 

Wednesday, May 28, 2014

படித்தவன் - படிக்காதவன் !

படித்தவன்
பணம் கொடுத்து
பேப்பர் வாங்குகிறான்...
படிக்காதவன்
பேப்பரைக் கொடுத்து
பணத்தை வாங்குகிறான்...!
-- பிரியா லட்சுமணன்,  திருவண்ணாமலை.
-- தினமலர். பெண்கள்மலர். ஜூன் 1, 2013. 

Tuesday, May 27, 2014

பல தகவல்...

*  எறும்புகள் தூங்குவதே இல்லை.
*  மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
*  கரப்பான் பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.
*  பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்.
*  ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்.
*  யானை,  விலங்கினத்தில் மிக நீண்ட காலம் நினைவாற்றல் பெற்ற விலங்கினம்.  பல ஆண்டுகளுக்குப் பிறகும் தன் குட்டி அல்லது குழுவைச் சேர்ந்த
   யானை மரணமடைந்த இடத்திற்குச் சென்று அது நினைவஞ்சலி செய்யும்.
*  சிறுத்தையால் அரிமாவைப் போல் ஒலி எழுப்ப ( கர்ஜிக்க ) முடியாது.  பூனையைப் போல ' மியாவ் ' என்ற ஒலியைத்தான் எழுப்ப இயலும்.
-- ரிலாக்ஸ் , தி இந்து.  செப்டம்பர் 24, 2013.   

Monday, May 26, 2014

ஒன்பது வகை பக்தி !

  சாஸ்திரங்கள் கடவுள் மீது நாம் கொள்ளவேண்டிய பக்தியை 9 வகைகளாகப் வகைப்படுத்தியுள்ளன.  அவை:
1.  சரவணம்:  குருமார்களிடமும்,  சமய சான்றோர்களிடமும் நாம் இறைவனின் அருமைப் பெருமைகளைப்பற்றி கேட்டு அறிந்து இறைவனிடம் பக்தி
     கொள்வது சரவணம் ஆகும்.  --  சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து,  பாகவதம் கேட்டு தன் பாவங்களில் இருந்து விடுபட்டான்.
2.  கீர்த்தனம்:  இறைவனின் புகழ்பாடும் பாடல்கள் கீர்த்தனங்கள் ஆகும்.  இதனை பஜனை செய்து, இறைவனை வழிபடுவது கீர்த்தனம்.  -- சுக முனி பாடிய
     பாகவதக் கதையால் சுகம் அடைந்தவர் கேட்டவர் எல்லாம்.
3.  ஸ்மரணம்:  ' இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் ' என்று மாணிக்கவாசகரின் எண்ணப்படி,  முழு நம்பிக்கையுடன் எப்போதும் இறைவனை பற்றி
     நினைத்துருகுவது ஸ்மரணம்.  --  எத்தனையோ துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பிரகலாதன் தன் ஹரியை மறக்காமல் நினைத்துக்கொண்டிருந்தான்!
4.  பாதஸேவனம் :  இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது,  நல்ல உள்ளத்துடன் இறைவனை சேவை செய்தல் பாதஸேவனமாகும்.  --  இந்தப்
     பாக்கியத்தை பெற்றவள் லட்சுமி தேவி.
5.  அர்ச்சனை :  உள்ளன்புடன் நாளும் பொழுதும் மலர்களைக்கொண்டு ஈசனுக்கு பூஜை செய்வது அர்ச்சனை.  --  பிருது மகாராஜா என்பவர்,
     இறைவனுக்கு இடைவிடாது அர்ச்சனை செய்தவர்களில் பிரசித்தி பெற்றவர்.  இறை அருள் பெற்றவர்.
6.  வந்தனம் :  இந்த உடல் இறைவன் கொடுத்தது.  எனவே,  இந்த உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து,
     சாஷ்டாங்கமாக இறைவனை வணங்கி எழுதலுக்குப் பெயர் வந்தனம்.  --  கண்ணனை தினமும் வணங்கி,  கண்ணனைக் கண் கூடாகக் கண்டவர் பக்த
     அக்ரூரர்.
7.  தஸ்யம் :  எப்போதும் இறைவனுக்கு நம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் கஸ்யம் ஆகும்.  --  இதற்கு சிறந்த உதாரணம் அனுமன்.
8.  ஸக்யம் :  ஒரு பக்தன்,  இறைவனை தம் தோழனாய்,  தம் அன்பிற்குரியனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது.  --  முப்பொழுதும் கண்ணனோடு
     இருந்து, உண்டு, உறங்கி, பேசிப் பழகி, அன்பு, நட்பு, பக்தி செய்த அர்ஜுனன் கொண்ட பக்தி ஸக்யம்.
9.  ஆத்ம நிவேதனம் :  இந்த ஆத்மா அவனுடையது.  அது அவனுக்கு உரிமையுடையது என நினைத்து,  இறைவனுக்கு தன்னையே ஒப்புக்கொடுப்பது
     ஆதம நிவேதனம் ஆகும்.  -- இதற்கு சிறந்த உதாரணம் அரசன் மகாபலி.
-- தேவராஜன்.
-- தினமலர். வாரமலர். 26- 5-2013. 

Sunday, May 25, 2014

ஒரு குறும்பு !

  " சமீபத்தில் உங்களுக்குப் புன்னகையை வரவழைத்த ஒரு குறும்பு ?"
     " என் மாணவர்கலிடம்,  கரும்பலகையில் தினமும் ஏதாவது ஒரு பொன்மொழியை எழுதும்படி கூறியிருந்தேன்.  அன்றைய தினம் ஆங்கிலப்பாடத் தேர்வு நாள்.  வினாத்தாள்களுடன் வகுப்பறைக்குள் நுழைந்தேன்.  அங்கு கரும்பலகையில் என்னை வரவேற்ற பொன்மொழி... ' இன்று எனக்குத் தேர்வு.  ஆனால்,  அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.  ஏனெனில்,  ஒரு காகிதம் மட்டுமே எனது எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட முடியாது '  -- தாமஸ் ஆல்வா எடிசன்.!"
--   நானே கேள்வி... நானே பதில் !  பகுதியில் .கே.சரஸ்வதி, ஈரோடு - 12.
-- ஆனந்த விகடன். 28 - 8 - 2013.  

Saturday, May 24, 2014

ஆப்பிள் நல்லதா?..கெட்டதா?

   உலகம் வெப்பமயமாக்கல் பருவநிலை மாற்றத்துடன் சில தாவரங்களின் இயல்பிலும் மாற்றத்தை உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக,  ஆப்பிள் பழத்தைச் சாப்பிடும்போது உணரும் ' மொறு மொறு ' தன்மை மாறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.  அதோடு ஆப்பிள் பழத்தில் மிக அதிகமான இனிப்பு சுவை மாற்றத்தையும் காண முடிகிறதாம்.  ஆப்பிள் மரங்களில் பூக்கள் பூத்து அவை காயாகும்போது வெப்பம் அதிகளவு தாக்குவதால்,  இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.  - அப்போ இனி ஆப்பிள் நல்லதா?...கெட்டதா?
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 28 - 8 - 2013.  

Friday, May 23, 2014

ஃப்ரெஞ்சுப் படை...

  " உருவத்தைப் பார்த்து எடை போடலாமா?"
     " 1911 -ம் ஆண்டு வியட்நாமை ஆக்ரமித்த ஃப்ரெஞ்சுப் படைகள்,  ' கலகம் செய்தார்கள் ' என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றை கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது.  வண்டியில் இடம் இல்லாததால்,  ஒல்லியாகவும் பார்க்கப் பரிதபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, " இவன் தானாகவே செத்து விடுவான் " என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர். பிற்காலத்தில் அந்தச் சிறுவன் ஃபிரெஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான்.  அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான்   அந்தச் சிறுவனின் பெயர் ஹோசிமின் !"
-- நானே கேள்வி... நானே பதில் !  பகுதியில் . ஜெ.கண்ணன், சென்னை - 101.
-- ஆனந்த விகடன். 28 - 8 - 2013.    

Thursday, May 22, 2014

கணிதம் கற்க எளியமுறை.

  கணிதப் பாடத்தை ஆர்வத்துடன் படிக்க எளிய வழிமுறைகள் மூலம் வழிகாட்டுகிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் என், உமாதாணு.  இந்தப் பணியில் அவரது மனைவி கனகம் உறுதுணையாக இருக்கிறார்.
     எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும், அதன் காரணிகளை எளிதாக கண்டுபிடிக்கும் முறையை உருவாக்கியிருக்கிறார்.  உதாரணத்திற்கு :
     இரு எண்களின் பெருக்குத் தொகை -480,  கூட்டுத்தொகை -1 என்று எடுத்துக்கொண்டால், இதன் காரணிகளைக் கண்டுபிடிக்க தற்போதைய கற்பிக்கும் முறையில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும்.  ஆனால், தான் கண்டுபிடித்துள்ள முறையில் இரண்டே நிமிடங்களில் காரணிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.  அதாவது, பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க வேண்டும்.  அதேநேரத்தில் சிறிய எண்ணை அதே எண்ணால் பெருக்க வேண்டும்.  அப்படி செய்தால், எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் இரண்டே நிமிடங்களில் விடை கிடைத்துவிடும்.  இந்த புதிய எளியமுறைக்கு யூனூஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
-- டி.செல்வகுமார். பூச்செண்டு.
--    ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013.

Wednesday, May 21, 2014

ஷேக்ஸ்பியர் நாடகங்கள்!

உலகமே நாடக மேடை, அதில் மேலும் மூன்று நாடகங்கள்.
     ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எத்தனை என்று கேட்டால், இனி 37 என்று சொல்லாதீர்கள்.  தப்பாகிவிடும்.  40 என்று சொல்லுங்கள்.  எப்படி? இதுவரை வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டவை என்று அறியபட்ட  ' ஆர்டர் ஆஃப் ஃபேவர்ஷாம் '  ' தி ஸ்பானிஷ் டிராஜிடி '  ' மியூசிடோரஸ் ' ஆகிய நாடகங்களின் ஆசிரியரும் ஷேக்ஸ்பியர்தான் என்று' இலக்கியத் தடயவியல் ' முறைப்படி கண்டரிந்திருக்கிறார் ' ஜொனாதன் பாட் ' என்பவர்.

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்.
     புதிய போப் ஃபிரான்ஸிஸ் எளிமையின் வடிவம்.  எளிய வீடு, எளிய வாழ்க்கையோடு, முந்தைய போப்புகலின் ஆடம்பரத்தையும் விளாசுகிறார்.  அதற்காக பிஷப்புகள் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?  ஜெர்மனியைச் சேர்ந்த பிஷப் தன்னுடைய வீட்டைப் புனர்நிர்மாணம் செய்வதற்காகச் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?  ரூ.257,08,20,000.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
--    ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013.  

Tuesday, May 20, 2014

வந்தாச்சு புதிய தனிமம் !

 வேதியியல் தனிம அட்டவணை பற்றிப் பள்ளிக்கூடத்தில் படித்திருப்பீர்கள்.  இதோ, அந்த அட்டவணையில் ஒரு புதிய உருப்பினர் சேர இருக்கிறது.  ஸ்வீடனில் உள்ள லுண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அந்தப் புதிய தனிமத்தைக் கண்டறிந்துள்ளனர்.  ரஷ்ய, அமெரிக்க அறிவியளாளர்கள் 10 ஆண்டுகளுக்கு கருதுகோளாக முன் வைத்த இந்தப் புதிய தனிமம், இப்போது உறுதியாகியுள்ளது.  வாயில் நுழையாத பெயர் கொண்ட அந்தத் தனிமத்துக்கு அன் அன்பென்டியம் ( ununpentium ) என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது.  குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய, இந்த கன உலோகம் தனிம அட்டவணையில் 115வது இடத்தைப் பிடிக்க உள்ளது.  ஆனால், அமெரிக்காவை மையமாகக் கொண்ட நேரடி மற்றும் பயன்முறை வேதியியல் சர்வதேச கூட்டமைப்பு  ( International Union Of Pure and Applied Chemistry )  அங்கீகரித்தால் மட்டுமே இந்த தனிமம், அட்டவணையில் இடம் பிடிக்கும்.  அதுவரை இந்த இடம் தற்காலிகம்தான்.
--   உயிர் மூச்சு. பசுமையின் சுவாசம் . சிறப்புப் பகுதி.
--    ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013. 

Monday, May 19, 2014

யானை அழிவதால்...

யானை அழிவதால் நமக்கு என்ன பிரச்சினை?
     "உலகிலிருந்து மற்ற உயிரினங்கள் முற்றிலும் அற்றுப் போவதால் ( extinction ),  நமக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது? " என்று கேட்பவர்கள், ஒரு நிமிடம் சிந்திக்கவும்.  இதோ ஒரு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெரும் பாலூட்டிகள், புவிப்பரப்பில் பரவலாகத் திரிந்தபோது அந்தப் பகுதிகளில் கழிவு, உடல் மக்கிப் போனதன் மூலமாக ஊட்டச்சத்துகளை பரப்பியுள்ளன.  உயிரினங்கள் அற்றுப் போவதால் ஊட்டச்சத்து இழப்பு எப்படி ஏற்படும் என்பதைக் கணக்கிட அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு கணித மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
      ஒரு பெரும் உயிரினம் முற்றிலும் அற்றுப் போனதால் வளமான சமவெளிப் பகுதிகளைத் தாண்டியுள்ள பிரேசிலின் கிழக்கு அமேசான் பகுதியில் பாஸ்பரஸ் 98 சதகித இழப்பு ஏற்பட்டுள்ளது.  உயிரினங்களும் தாவரங்களும் வளர பாஸ்பரஸ் ஊட்டச்சத்து மிகவும் அவசியம்.  பாலூட்டிகளில் மிக அதிகமாக உள்ள இரண்டாவது மிகப் பெரிய கனிமம் பாஸ்பரஸ்.  தாவரங்களில் உயிரோடு உள்ள ஒவ்வொரு செல்லிலும் அது அவசியம் இருக்க வேண்டும்.
      இப்போது இப்படிச் சிந்தித்துப் பார்ப்போம்.  2025 இல் எல்லா யானைகளும் அற்றுப்போய்விட்டால், அதன் பிறகு நதிகளையும் மலைகளையும் கடந்து யார் ஊட்டச்சத்துகளை எடுத்துச் செல்வார்கள்?  நதிகள் வழியாகத்தான் பல்வேறு ஊட்டச்சத்துகள் நம்மை வந்தடைகின்றன.
--  உயிர் மூச்சு. பசுமையின் சுவாசம் . சிறப்புப் பகுதி.
--    ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013. 

Sunday, May 18, 2014

மனிதரைக் கொட்டியவுடன்..

மனிதரைக் கொட்டியவுடன் தேனீ ஏன் இறந்து போகிறது ?
      தேனீக்கள் கூர்முனையுடன் கூடிய கொடுக்குகளைக் கொண்டுள்ளன.  இவற்றின் மூலம் தங்களுக்குத் தொந்திரவாக இருக்கும் மற்ற தேனீக்களையும் பூச்சிகளியயும் கொட்ட முடியும்.  அதேநேரம், தன் கொடுக்குகள் மூலம் ஒரு பாலூட்டியைத் தேனீ கொட்டும்போது, பாலூட்டிகளுக்கு உள்ள கடினமான தோல் காரணமாக, தேனீயின் கொடுக்குகள் தோலில் மாட்டிக்கொள்கின்றன.  அதிலிருந்து விடுபடுவதற்குத் தேனீ முயற்சிக்கும்போது, அதன் அடிவயிற்றின் ஒரு பகுதி பிய்ந்து விடுகிறது.  இதனால் அடுத்த சில நிமிடங்களில், அது இறந்துபோகிறது.  இப்படி இறப்பவை வேலைக்காரத் தேனீக்கள்தான்.  அவை பெண்ணும்கூட.  ராணி தேனீக்கள், மற்ற தேனீ வகைகள், குளவிகள் போன்றவை மென்மையான கொடுக்குகளையே கொண்டுள்ளன.  இந்த மென்மையான கொடுக்குகள் மூலம், பாலூட்டிகள் தோலிலும்கூட  அவை பல முறை கொட்ட முடிகிறது.  இந்த வசதி வேலைக்கார பெண் தேனீக்களுக்கு இல்லை.  பஸ்மாசுரன் போல, கொட்டியவுடன் அவை இறந்து போகின்றன.
-- உயிர் மூச்சு. பசுமையின் சுவாசம் . சிறப்புப் பகுதி.
--    ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013. 

Saturday, May 17, 2014

சுட்டது நெட்டளவு

 கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே வரும் கப்பல் மோதிவிடக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.
    " உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப் பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்".
      இதற்கு, " மன்னிக்கவும்... நாங்கள் மாற்றமுடியாது.  நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் " என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.
    " நான் கப்பல் மாலுமி,  நீ உன்னுடைய வழித்தடத்தை மாற்றிக் கொள் " என்றான் மாலுமி.
    " நான் கடல் பிரதேச மனிதன்.  நீ உன்னுடைய பாதையை மாற்றிக் கொள் " என்று பதில் வந்தது.
    " இது யுத்த கப்பல், நான் அதன் கேப்டன்.  நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன் " என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
      அதற்கு அங்கிருந்து வந்த பதில் :
    " முட்டாளே ... இது கப்பல் அல்ல கலங்கரை விளக்கம் ( லைட் அவுஸ் ).  உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் இதை மாற்றிக்கொள்ள முடியாது.  எங்கள் எச்சரிக்கையை மீறியதால் உன் கப்பல் தரை தட்டப்போகிறது."
--- ஷேர் செய்தவர் : சிவகாசி சுரேஷ்.  ரிலாக்ஸ்.
--   ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013. 

Friday, May 16, 2014

18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.

18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.பல்குச்சி பயன்படுத்திய மனிதர்கள்.  ஜூரிச் பேராசிரியர் தகவல்.
     ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களை இணைக்கும் நாடான ஜார்ஜியாவில் டுமான்சி எனும் பகுதி உள்ளது.  இது தொல்லியல் படிமங்கள் நிறைந்த பகுதியாகும்.
     பல லட்சம் ஆண்டுகளூக்குமுன் மனிதன் இங்கு வாழ்ந்ததற்கான எச்சங்கள் கிடைத்துள்ளன.  ஆப்பிரிக்காவுக்கு வெளியே கிடைத்துள்ள மிகப் பழமையான மனித படிமங்கள் இங்குதான் கிடைத்துள்ளது.  இவற்றில், மனித மண்டையோட்டின் கீழ்த்தாடை எலும்புகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அப்போதைய மனிதர்கள் பல்குத்தும் குச்சியைப் பயன்படுத்தியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.  பல்குச்சியைத் தொடர்ந்து பயன்படுத்தியதால் ஈறு நோய் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
    மேலும், கிடைத்துள்ள கீழ்த்தாடைகள் எந்த வயதினருக்கு உரியவை என்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.  கீழ்த்தாடைகள் பல்வேறு அளவில் உள்ளன.  பற்களில் ஏதோ அணிந்திருந்தனர்.
    இளம் வயதுடைய ஒருவர் பல்குச்சி பயன்படுத்தியது, அவரின் பற்கள் விழுந்து விடாமல் முழுதாக உள்ளது, பல்லுக்கும் ஈறுக்கும் இடையே ஒரு துளை உள்ளதும், அத்துளை வழியாக ஒரு பல்குச்சியைச் செருக முடியும் என்பதையும் தெரிவித்தனர்.
    டுமான்ஸியில் கண்டறியப்பட்ட தொல்படிமங்களின் மூலம் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து பெருமளவில் இடம் பெயர்ந்திருக்கக் கூடும் எனவும், அவர்கள் குட்டையாக, மிக நீண்ட கைகளும், சிறிய மூளையையும் கொண்டவர்களாக இருந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம் .
-- ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013. 

Thursday, May 15, 2014

நர்சரிப் பள்ளி ஒன்றில்...

 நர்சரிப் பள்ளி ஒன்றின் உணவு அறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.  அந்தக் கூடையின் மேல், ' ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;  கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் ' என எழுதி இருந்தது.  அங்கு தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.  அந்த சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது : ' என்னளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'
-- facebook.com / Panithuli Sankar:
-- வலை பாயுதே !  சைபர் ஸ்பைடர்.
--  ஆனந்த விகடன். 17- 4-2013. 

Wednesday, May 14, 2014

ஐசான் வால்நட்சத்திரம்.

பூமியின் மீது ஐசான் வால்நட்சத்திரம்.மோதுமா?
     சூரிய மண்டலத்துக்கு அடுத்துள்ள ' ஊர்ட் ' எனும் மேகப்பகுதியில் இருந்து வரும் ஒரு புதிய வால்நட்சத்திரம்தான் ஐசான் வால்நட்சத்திரம்.  மேலும், பவுர்ணமி நிலவின் பிரகாசத்தைவிட மிக அதிக பிரகாசமாக இந்த  வால்நட்சத்திரம் இருக்கும் என்று நம்பப்படுவதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
     கடந்த 200 ஆண்டுகளாக நாம் பார்த்த வால்நட்சத்திரங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் சூரியனையே சுற்றி வருபவை ஆகும்.  ஆனால், முதன்முறையாக சூரியனை நோக்கி வருகிறது இந்த ஐசான் வால்நட்சத்திரம்.  மேலும், ' ஊர்ட் ' மேகப் பகுதியில் இருந்து வரும் இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பம் தோன்றியபோது உருவானது.
     அதனால், அது சூரிய குடும்பம் தோன்றிய காலத்தில் உள்ள தகவல்களைப் பத்திரமாக வைத்திருக்கும்.  அதன் மூலம் உலகம்தோன்றியதைப் பற்றி மேலும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க உதவும்.
       இந்த  வால்நட்சத்திரம் பூமியில் மோத வாய்ப்பு இல்லை.  வரும் நவம்பர் 2013, 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை இந்த  வால்நட்சத்திரம் வானில் புலப்படும்.  அப்போது தொலைநோக்கி, பைனாகுலர் போன்றவற்றின் மூலம் இதை நாம் வெறும் கண்ணால் காண முடியும்.
-- ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013.

Tuesday, May 13, 2014

' வைகைப் புயல் வடிவேலு '

" தமிழ்கூறும் நல்லுலகுக்கு ' வைகைப் புயல் வடிவேலு 'வின் அளப்பறிய உண்மையான சாதனை என்ன?"
" நம்முடைய உயிர் எழுத்துக்கள் 12 ல் அதிகம் பயன்படுத்தாத ஒரே எழுத்து ' ஔ '.  ஏனெனில், ' ஔ ' என்ற எழுத்தில் நம்மிடம் அதிகமான சொற்கள் இல்லை.  அதனால், அந்த எழுத்தை நாம் பன்னெடுங்காலமாக அதிகம் பயன்படுத்துவதே இல்லை.  அவ்வளவு ஏன்... திருவள்ளுவரே 1,330 குறள்களில், ' ஔ ' என்ற இந்த உயிர் எழுத்தை ஒரு முறைகூடப் பயன்படுத்தவில்லை.  அப்படியிருந்தும் இந்த 21 -ம் நூற்றாண்டில் ' ஔ 'க்கு வடிவேலுவின் தயவால் சாப விமோசனம் கிடைத்துவிட்டது.  ' ஔளளள...' என்று அவர் ஆரம்பித்துவைத்த இழுவை இன்று நண்டு சிண்டு முதல் பாட்டன் பூட்டன் வரை பயன்படுத்துகிறார்களே !"
-- மு.அழகரசன், சேலம்.
--  நானே கேள்வி... நானே பதில்!
-- ஆனந்த விகடன். 17- 4-2013.

Monday, May 12, 2014

சொலவடை ஒன்று !

" All roads lead to Rome "  தற்காலத்தில் இதற்குப் பொருத்தமான சொலவடை ஒன்று சொல்லுங்கள்...? "
" அனைத்துச் சாலைகளும் 2014 ஐ நோக்கி...!"
-- சுரா.மாணிக்கம், கந்தர்வக்கோட்டை.
" தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டி தீக்குளிக்கச் செய்துவிட்டு, பின் அனுதாப அறிக்கைவிடும்தலைவர்களைப் பற்றி...? "
" இதற்கு முல்லாவின் நீதிக் கதைதான் பதில்...
      ஒரு நாள் முல்லா வீட்டுக் கோழிக் குஞ்சுகள் கழுத்தில் கறுப்பு ரிப்பனோடு மேய்ந்துகொண்டு இருந்தன.  முல்லாவிடம் எதிர்வீட்டுக்காரர் கேட்டார், ' ஏன் முல்லா... கறுப்பு ரிப்பன்? '
     ' அவற்றின் தாய் இறந்ததால் துக்கம் அனுஷ்டிக்கின்றன.'
     " அச்சச்சோ... அது எப்படி இறந்தது ?"
     " நான் பிரியாணி செய்தேன் !"

" தத்துவத்துக்கும் இலக்கியத்துக்கும் என்ன வித்தியாசம்?"
" புதுமைப்பித்தனின் வார்த்தைகளில் சொல்வது என்றால், வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்வது தத்துவம்.  வாழ்க்கையையே சொல்வது இலக்கியம்! "
-- தாமு, தஞ்சாவூர்.  
-- நானே கேள்வி... நானே பதில்!
-- ஆனந்த விகடன். 17- 4-2013.  

Sunday, May 11, 2014

ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு பெயர்.

   மாதங்கள் 12 ஆகும்.  சந்திரன் நாள் ஒன்றுக்கு ஒரு நட்சத்திரத்தைக் கடக்கிறான்.  அவன் 12 ராசிகளைக் கடக்கும் கால அளவே ஒரு மாதம் எனப்படுகிறது.  சூரியன் இக்கால அளவில் ஒரு ராசியிலேயே இருக்கிறான்.  அதாவது சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயருடன் ஒரு ராசியில் இருக்கிறான்.  மாதங்களின் பெயர்களும், அவற்றுக்குரிய ராசிகளும், வடமொழிப் பெயர்கலும் பின்வருமாறு :
ராசியின் பெயர்....மாதப் பெயர்........சூரியப் பெயர்........வடமொழிப் பெயர்
மேஷம்..................சித்திரை.................அம்சுமான்........சைத்ரம்
ரிஷபம்................. வைகாசி...............  தாதா.............. வைசாகம்
மிதுனம்.................ஆனி...................... சபிதா..............ஜேஷ்டம்
கடகம் .................. ஆடி.......................அதியமான்........ஆஷாடம்
சிம்மம்................... ஆவணி..................விஸ்வான் .......  சிராவணி
கன்னி .................. புரட்டாசி ............... பகன் .............  பிரவுஷ்டபதி
துலாம் .................. ஐப்பசி ...................பர்ஜன்யன் ......  ஆச்வயுஜம்
விருச்சிகம் ............. கார்த்திகை ........... துவஷ்டா .........  கார்த்திகம்
தனுசு .................... மார்கழி ................மித்திரன் ...........  மார்கசீரிஷம்
மகரம் ...................  தை ..................... விஷ்ணு ............  தைஷீ
கும்பம் ....................மாசி .................... வருணன் ........... மாகம்
மீனம் ...................  பங்குனி ............... பூஷா ................. பால்குணம்.
-- புலவர் வே.மகாதேவன்.
-- தினமலர். பக்திமலர். ஏப்ரல் 7. 2011.

Saturday, May 10, 2014

வைரமழை !

சனி, வியாழனில் வைரமழை!  ஆராய்ச்சியாளர்கள் தகவல்.
     சனி, வியாழன் கிரகங்களின் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள வைரத்துகள்கள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தில் மிதந்துகொண்டிருக்கலாம்.  அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தால் அவை உருகும் வாய்ப்புள்ளது.  வைரம் உருவாவதற்கு அடிப்படையாக இருப்பது கார்பன்.  சனி, மற்றும் வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தில் நிரம்பியிருக்கும் கார்பன் படலத்தின் மீது சக்திவாய்ந்த மின்னல் தாக்குதலால் இந்த வைரத்துகள்கள் உருவாகி இருக்கலாம்.  நெப்டியூன், யுரேனஸ் போன்ற திரவங்களின் குளிர் தன்மையில் நிலையான வைரம் இருப்பதை போல இங்கு திக வெப்ப நிலையில் இருக்கலாம்.
--  தினமலர்.. 12-10-2013. 

Friday, May 9, 2014

நச் !

*  நகரங்களில் மனிதர்களைவிட , வீடுகளே அதிக நெருக்கமாக உள்ளன !
   Udhay@ twitter.com.
*  ஒரு வீட்டில் சண்டை நடக்கும்போது, பக்கத்து வீடுகளின் கதவுகள் திறக்கப்படாமல், காதுகள் மட்டுமே திறந்து வைக்கப்படுகின்றன !
   prakash @ twitter.com.
*  ஷூ மிதிக்கும் என்று ஏழைகளும், ஷூ மிதிக்கப்படும் என்று பணக்காரர்களும் பயந்து பயந்து செல்கின்றனர் பேருந்துகளில் !
   Kannan @ twitter.com.
*  மேனேஜரு ஜோக் சொல்லியிருக்காருங்கிறத அவர் முகத்தை பார்த்தா தெரிஞ்சுக்கலாம்... யாராவது சிரிக்கிறாங்களானு மூக்குக்கண்னாடி மேல் வழியா
   பார்ப்பாரு !
   Vibusi @ twitter.com.
-- இனைய வெளியிடையே...
-- தினமலர். 13-10-2013. 

Thursday, May 8, 2014

பூமியை போன்ற கிரகம்.

நாசா கண்டுபிடிப்பு.
     வாஷிங்டன் :  பூமியை போ உயிரினங்கள் வாழ சாதகமான  நீர் மற்றும் பாறைகள் சூழ்ந்த கிரகத்தை நாசா கண்டறிந்துள்ளது.
     பூமியில் இருந்து 150 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தில், நீரும் பாறைகளும் உள்ள ஒரு  கிரகத்தை நாசா கண்டறிந்துள்ளது.
     ஜிடி 61 என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம், 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தன் சக்தியை இழந்து அருகிலுள்ள கிரகங்களை தன்னுள் ஈர்த்துக்கொண்டது.  அப்போது சிதறிய பாறைகளிலிருந்துதான் இத்தகைய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.  பிறஊதா கதிர்களின் ஆய்வின்படி நீர்நிலைக்கான சாத்தியகூறும், அந்த பாறைகளில் மெக்னீஷியம், சிலிகான், இரும்பு போன்ற தாதுபொருள்களும் உள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
--  தினமலர்.. 12-10-2013.  

Wednesday, May 7, 2014

வினா - விடை !

  ( சிறப்பு ).
*  "பிரதமர் இல்லத்தில் இருந்து காலி செய்ய இருக்கும் மன்மோகன் சிங், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் எங்கு குடியேற
     இருக்கிறார்?"
    -- டெல்லி மோதிலால் தெருவில் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அரசு பங்களாவில் குடியேற இருக்கிறார்.  ஏப்ரல்
    மாத இறுதிக்குள் அங்கு மராமத்துப் பணிகள் நடக்கின்றன.  இதில் இதுவரை ஷீலா தீட்ஷித் குடியிருந்தார்.
* "தேர்தல் பிரச்சாரத்தில் 'நான் யாருடைய பெண்ணையும் இழுத்துக்கொண்டு ஓடிவிடவில்லை' என்று கூறியவர் யார்?"
    -- அரவிந்த் கெஜ்ரிவால்.
* "தமிழக வேட்பாளர்களில் அதிகபட்ச சொத்து கொண்ட கோடீஸ்வர வேட்பாளர் யார்?  அவரின் சொத்து மதிப்பு என்ன"
    -- கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்.  அவரது சொத்து மதிப்பு 283 கோடி.
* " 'அம்மா குடிநீரைவிட ரெயில்வே குடிநீர் விலை அதிகம்' என்று சுட்டிக்காட்டிப் பிரசாரம் செய்கின்றனர் அ.தி.மு.க-வினர்.
    இரண்டுக்குமான விலை வித்தியாசம் என்ன?"
    -- அம்மா  குடிநீர் 10 ரூபாய்.  ரெயில்வே  குடிநீர் 15 ரூபாய்.
* "சமீபத்தில் ஒரு தமிழ் நடிகையும், இந்தி நடிகையும் நரேந்திர மோடிக்குத் தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.  அவர்கள் யார்"
    -- தமிழ் நடிகை சமந்தா ; இந்தி நடிகை சோனாக்க்ஷி சின்ஹா.
-- ஆனந்த விகடன்.  23 - 04 - 2014. 

பற்களை மட்டுமல்ல...

பற்களை மட்டுமல்ல பாத்திரங்களையும் துலக்கல்லாம்...
     டூத் பேஸ்ட் என்பது பற்களை துலக்க மட்டுமே என்று எண்ண வேண்டாம்.  பற்களை மட்டுமல்ல, வேறு சில பொருட்களையும் பளிச் ஆக்க டூத் பேஸ்ட்டும், பிரஷ்ஷும் உதவும்.  முயற்சி செய்து பாருங்களேன்...
*  தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களில் எண்ணை பிசுக்கு மற்றும் அழுக்குள்ள பகுதிகளில் டூத் பேஸ்ட் தடவி தேய்த்தால் அழுக்குகள் நீங்கும்.
*  லெதர் ஷூக்களில் ஏதேனும் கறைபட்டிருந்தால், அதன் மேல் டூத் பேஸ்ட் தடவி ஈரமான துணி வைத்து துடைத்தால் கறை போய்விடும்.
*  துரு பிடித்த பாத்திரங்களை டூத் பேஸ்ட் வைத்து தேய்த்து சுத்தம் செய்தால் துரு விரைவில் நீங்கிவிடும்.  கறைகளும் காணாமல் போய்விடும்.
*  கல் மோதிரங்களில் அழுக்குகள் புகுந்து அதன் அழகை பாதித்தால், ஒரு மென்மையான பிரஷ்சில் பேஸ்டை தடவி சூத்தம் செய்தால், அழுக்குகள்
   வெளியேறிவிடும்.
*  சிடி, டிவிடிக்களில் கீறல் ஏற்பட்டிருந்தால், அதில் டூத் பேஸ்ட் தடவி துடைத்தால் தடையில்லாமல் இயங்கும்.
*  டூத் பேஸ்ட்டை பிரஷ்சில் தடவி பால் பாட்டிலை தேய்த்து கழுவி, பின்னர் வெந்நீரில் சிறிது ஊற வைத்து கழுவினால் பாட்டிலில் இருக்கும் பால் மணம்
   நீங்கிவிடும்.
*  வாட்ஸ் பட்டைகளில் அழுக்குகள் இருந்தால் டூத் பேஸ்ட்டை அதில் தடவி, ஈரத் துணியை வைத்து துடைக்கவேண்டும்.  பின் ஈரமுல்லாத சுத்தமான
   துணியால் துடைத்தால், வாட்ச் புதிது போல் காணப்படும்.
-- பவானி மணியன்.
-- தினமலர். பெண்கள்மலர். 12-10-2013. 

Tuesday, May 6, 2014

துளி...துளி...

*  ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம்னு கேட்டால் 24 மணி நேரம்னு சொல்வோம்.  உண்மையில் ஒரு நாள் என்பது 23 மணி, 56 நிமிடம், 4 நொடிகள்
   மட்டுமே.
*  விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லாததால் அங்கே உயிர்வாழ முடியாதுன்னு உங்களுக்குத் தெரியும்.  ஆனால், விண்வெளியில் உயிர் காக்கும்
   உபகரணங்கள் இன்றி 2 நிமிடங்கள் வாழ முடியும்.
*  காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததே இல்லை.  பிரிட்டனுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் கப்பலில்தான் பயணித்திருக்கிறார்.
*  ஊர் பெயர்களை மனிதர்களுக்கு வைப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்துக்கு
   விலங்கின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.  அந்த ஊரின் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதாம்.  அப்படி என்ன பெயரா?  டை நோசர்!
*  நாலா பக்கமும் கையை, காலை நீட்டிக்கிட்டு அவ்ளோ பெருசா இருக்கிற ஆக்டோபஸ் ,  பிறக்கும்போது ஒரு ஈ அளவில்தான் இருக்கும்.
*  பாலைவனம்னாலே கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் மணல்தானே இருக்கும்.  ஆனால், பெரு நாட்டில் உள்ள செக்கரா பாலைவனத்தில் மணலே
   இல்லை.  மலை மேடு போலவே காட்சியளிக்கும்.
-- டி.கே.   மாயாபஜார். குழந்தைகளின் குதூகல் உலகம்.  சிறப்புப் பகுதி.
--   ' தி இந்து 'நாளிதழ்  புதன்,. அக்டோபர் 9, 2013.  

Monday, May 5, 2014

நகரும் பிரமாண்டம்!

  கப்பல் என்றாலே பிரமாண்டம்தான்.  அதிலும் உலக மகா பிரமாண்ட கப்பல் எது தெரியுமா? ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் .  ஃபின்லாந்தில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல் ராயல் கரீபியன் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்குச் சொந்தமானது.  2009 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வ பயணத்தைத் தொடங்கியது.  இந்தக் கப்பல் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆச்சரியம் தருகின்றன.
*  எடை 2 லட்சத்து 25 ஆயிரம் டன்.
*  கப்பலுக்குள் 150 மைல் நீளத்திற்கு பைப்புகளை பயன்படுத்தியுள்ளனர்.
*  கப்பலில் பயன்படுத்தப்பட்ட மின் ஒயர்களின் நீளம் 3 ஆயிரத்து 300 மைல்.
*  ஒரே சமயத்தில் இந்தக் கப்பலில் 6,300 பேர் பயணிக்க முடியும்.
*  பதினாறு மாடிகள் கொண்ட இதில் 2 ஆயிரத்து 700 அறைகள் உள்ளன.
*  கப்பலுக்குள் 7 சிறிய நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  திறந்த வெளி அரங்கமும் உண்டு.
*  11 விடுதிகளும் 7 நீச்சல் குளங்களூம் உள்ளன.
*  குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலும், கைப்பந்து, கோல்ஃப் மைதானங்களூம் இருக்கின்றன. இது கப்பலா இல்லை கடலான்ணு ஆச்சரியமா
   இருக்குதானே!?
-- கார்த்தி.  மாயாபஜார். குழந்தைகளின் குதூகல் உலகம்.  சிறப்புப் பகுதி.
--   ' தி இந்து 'நாளிதழ்  புதன்,. அக்டோபர் 9, 2013. 

Sunday, May 4, 2014

  கோடை காலங்களான சித்திரை, வைகாசி மாதங்களில் பூமிக்கு அருகில் சூரியன் வருவதால் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும்.  இதில் சித்திரை மாதத்தில் 3 வாரங்கள் கடும் கோடை எனப்படும் அக்னி நட்சத்திர காலமாகும்.  இந்த 3 வாரங்களில் முதல் வாரம் தொடுப்பு, அடுத்தது கத்திரி வெயில், இறுதியில் கழிவு என்று கிராமங்களில் கூறப்படுவதுண்டு.
-- தினமலர்.  மே 3, 2014.   

அக்னி நட்சத்திரம்.








































  கோடை காலங்களான சித்திரை, வைகாசி மாதங்களில் பூமிக்கு அருகில் சூரியன் வருவதால் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும்.  இதில் சித்திரை மாதத்தில் 3 வாரங்கள் கடும் கோடை எனப்படும் அக்னி நட்சத்திர காலமாகும்.  இந்த 3 வாரங்களில் முதல் வாரம் தொடுப்பு, அடுத்தது கத்திரி வெயில், இறுதியில் கழிவு என்று கிராமங்களில் கூறப்படுவதுண்டு.
-- தினமலர்.  மே 3, 2014.  












மலேரியா தடுப்பு மருந்து

மலேரியா தடுப்பு மருந்தும் சோதனைச்சாவடி எலிகளும்.
     கொசுவினால் பரவும் மலேரியா காய்ச்சலுக்கு உலகின் முதல் தடுப்பூசி மருந்தைச் சந்தைப்படுத்தக் காத்திருக்கிறது பிரிட்டனின் மருந்து தயாரிப்பு நிறுவனம் ' கிளாக்ஸோ ஸ்மித்கிஸைன் .'  " ஆர்.டி.எஸ்.எஸ். என்று இதற்குப் பெயர்   லாப நோக்கமற்ற ' மலேரியா தடுப்பு இயக்கம் ', ' பில் கேட்ஸ் - மெலின் டா கேஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் உதவியுடன் இந்தத் தடுப்பூசியை    விற்பனைக்குக் கொண்டுவர கிளாக்ஸோ விரும்புகிறது.  7 ஆப்பிரிக்க நாடுகளில் 15 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியை போட்டு சோதனை செய்துள்ளனர்.  மூன்றாம் உலக மக்கள்தான் எப்போதும் சோதனைச்சாலை எலிகளா?
-- எத்திசையும்... கருத்துப் பேழை. .
--   ' தி இந்து 'நாளிதழ்  வெள்ளி,. அக்டோபர் 11, 2013.   

Saturday, May 3, 2014

பெரிய கோள் கண்டுபிடிப்பு

வியாழனை விட பெரிய கோள் கண்டுபிடிப்பு
     வியாழன் கிரகத்தை விட பெரிய அதே சமயம் மிக இளவயதுடைய கோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.  நமது சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள இந்தக் கோள் பூமியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
     பிஎஸ்ஓஜே 318.5 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கிரகம் 1.2 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இந்த கிரகம் குறிப்பிட்ட எந்த நட்சத்திர மண்டலத்தையும் சார்ந்தது இல்லை.
     இது தொடர்பாக ஹவாய் பல்கலைக்கழக வானியல் பிரிவு தலைவர் மைக்கேல் லியூ கூறுகையில், " விண்வெளியில் இது போன்று நட்சத்திரங்களின்றி தனித்து மிதக்கும் கோள் எதையும் இதுவரை நாங்கள் கண்டதில்லை.  இந்தக் கிரகம் எந்த நட்சத்திரத்தையும் சுற்றி வரவில்லை " என்றார்.
-- பி.டி.இ.  சர்வதேசம்  GLOBE ஜாமூன்.
--   ' தி இந்து 'நாளிதழ்  வெள்ளி,. அக்டோபர் 11, 2013.

புதிய வகை காசோலைகள்

 ( சிறப்பு )
புதிய வகை காசோலைகள் ஜனவரி முதல் கட்டாயமாகிறது.
    வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய காசோலைகளைப் பயன்படுத்துவது ஜனவரி முதல் கட்டாயமாகிறது.  காசோலைகளை பணமாக மாற்றுவதில் தற்போது ஏற்பட்டு வரும் தாமதத்தைத் தவிர்க்க ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
     இத்திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அமலாவதில் தாமதம் ஏற்பட்டது.  வங்கிகளில் புதிய காசோலை முறையை 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது.  அதன்படி, "சி.டி.எஸ்" என்ற இந்த திட்டத்தின் கீழ், அனைத்து வங்கிகளும் சி.டி.எஸ்.- 2010 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட காசோலைகலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  இவை "ஸ்கேன் செய்யப்பட்டு, ஆன்-லைன் வாயிலாகவே, மற்றொரு வங்கிக் கிளைக்கு அனுப்பி வைக்கப்படும்.  அதன் பிறகு, காசோலையில் குறிப்பிட்டுள்ளபடி வாடிக்கையாளருக்கு பணம் உடனடியாக வழங்கப்படும்.
     இந்த புதிய வகை காசோலைகளை, முழு அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு, அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களிடம் உள்ள பழைய காசோலைகளைத் திரும்பப் பெற்று வருகின்றன.
     வங்கிகள், சேமிப்புகணக்கு வாடிக்கையாளர்களுக்கு, முதன் முறையாக வழங்கும் புதிய வகை காசோலைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
     தற்போது, வங்கி வட்டாரத்தில், பழைய காசோலைகளின் புழக்கம் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, புதிய காசோலைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலக் கெடு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.  2013-ல் ஜூலை மாதம், பின்னர் ஆகஸ்டு 1-ம் தேதி என காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
     இந்நிலையில் தற்போது இந்த காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதிக்கு நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  வரும் ஜனவரி முதல் பழைய காசோலைகளை வங்கிகள் ஏற்காது என்றும், சி.டி.எஸ்.- 2010  தொழில்நுட்ப வசதி கொண்ட காசோலைகளை மட்டுமே ஏற்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தகவல் அனுப்பியுள்ளது.
பழைய காசோலைகள் பணமாவதில் கூடுதல் தாமதம் :
     வாடிக்கையாளரின் பெயர் உள்பட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சிடிஎஸ் காசோலைகளை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.  எனினும், சிடிஎஸ் காசோலை பெறாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  அவர்களது பழைய காசோலைகளை வங்கிகள் தொடர்ந்து பெற்று வருகின்றன.  எனினும், அவற்றை பணமாக மாற்றுவதற்கான "கிளியரிங்" வசதி வாரத்துக்கு 3 முறை என்பதை மாற்றி ஜூன் முதல் 2 முறையாகவும், அக்டோபரில் இருந்து மாதம் ஒரு முறை என்றும் குறைக்கப்பட்டுள்ளது.  இதனால், காசோலைகளை பணமாக்குவதில் கூடுதல் தாமதம் ஏற்படக்கூடும்.  எனினும், டிசம்பருக்கு பிறகு, புதிய காசோலைகள் மட்டுமே பெறப்படும் என்பதால் அப்பிரச்சினை இருக்காது என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
-- வணிகம்.  Business Line பக்கம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  வெள்ளி,  மே 2, 2014.

Friday, May 2, 2014

டைப்ரைட்டர்.

Vடைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!
லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு !
     ஹென்றி மில் 1714ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார்.  அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் டைப்ரைட்டருக்கு மூன்றாவது செஞ்சுரி முடிகிறது.
நொடிக்கு நொடி நவீனமயம் நம்மை விழுங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 300 ஆண்டுகள் ஒரு இயந்திரம் தாக்குப்பிடித்திருக்கிறது என்றால் அதற்காக ஒரு விழாவே கொண்டாடலாம்.  மனிதனுக்கு குரங்கு எப்படி முன்னோடியோ அதுபோன்று ... இன்று நம் மடிவரை வந்துவிட்ட கம்ப்யூட்டர்களூக்கு டைப்ரைட்டர்கள் தான் மூலாதாரம்.
     இன்ஸ்டிடியூடுகளில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் டைப்ரைட்டர்கள் உள்ள வரை தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளுக்கு செல்லமுடியும்.  பழுதாகும் டைப்ரைட்டர்களுக்கு இப்போதே உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை.  ஏற்கனவே பழுதாகிக் கிடக்கும் டைப்ரைட்டர்களில் நல்ல நிலையில் உள்ள பாகங்களை எடுத்து ஸ்பேராக பயன்படுத்தி வருகிறார்கள்.  இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ?
     டைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!
     அரசாங்க ரகசியங்கள் வெளியில் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அலுவலகப் பணிகளில் கம்ப்யூட்டர்கள் ஒழிக்கப்பட்டு, மீண்டும் தட்டச்சு எந்திரங்கள் பயன்படுத்தும் முடிவை எடுத்திருக்கிறது ரஷ்யா.  இதற்காக புதிதாக தட்டச்சு எந்திரங்கள் வாங்குவதற்கான அரசாணையில் கடந்த ஜூலையில் கையெழுத்திட்டார் அதிபர் புடின் !
-- குள.சண்முகசுந்தரம். பூச்செண்டு.
--   ' தி இந்து 'நாளிதழ்.வியாழன். அக்டோபர் 10, 2013.  

Thursday, May 1, 2014

கிரகப்பிரவேசம்.

கிரகப்பிரவேசத்தை அதிகாலை தான் நடத்த வேண்டுமா?
        கிரகப்பிரவேசம் செய்ய விடியற்காலை நேரமே உகந்தது.  வாசல் நிலையில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம்.  எனவே, லட்சுமிகடாட்சம் பெற விடியற்காலையில் வாசல் நிலை பூஜை செய்து, பசு கன்று, சீர்வரிசைகளுடன் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும்.
--  அறிவோம்!  தெளிவோம்! . மயிலாடுதுறை.  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். அக்டொபர் 10, . 2013. 

ஸ்ரீ மடத்தில்...

 ஸ்ரீ மடத்தில்  பெரியவர்  முன்னிலையில்  தினமும்  காலையில்  பஞ்சாங்க  படனம்  நடைபெறும்.  நாள்தோறும் திதி- வார- நஷத்ர-யோக  கரணங்களை  அறிந்து  கொண்டாலே  மகத்தான  புண்ணியம்  என்பது  சாஸ்திர  வாக்கியம்.  ஒரு  அமாவாஸ்யை  திதியன்று  செவ்வாய்கிழமையும்  கேட்டை  நட்சத்திரமும்  கூடியிருந்தன.  " இன்னைக்கு  கேட்டை  மூட்டை  செவ்வாய்க்கிழமை  எல்லாம்  சேர்ந்திருக்கு,  அதை  ஒரு  தோஷம்  என்பார்கள்.  பரிகாரம்  செய்யணும்"  என்றார்கள்  பெரியவர்.  " அப்பாகுட்டி  சாஸ்திரிகளுக்குச்  சொல்லியனுப்பு,  லோகஷேமத்துக்காக  ஹோமங்கள்  செய்யச்  சொல்லு..."
      பரிகார  ஹோமம்  நடந்துகொண்டிருக்கும்போது  பெரியவர்  அங்கே  வந்து  பார்த்தார்கள்.  " கேட்டை,  மூட்டை,  செவ்வாய்க்கிழமை  என்றால்  என்ன  அர்த்தம்?  கேட்டை  என்பது  நட்சத்திரம்,  செவ்வாய்  என்பது  கிழமை,  மூட்டை  என்றால்  என்ன?  என்று  கேட்டார்கள்.  எவருக்கும்  பதில்  சொல்லத்  தெரியவில்லை.
      பெரியவர்களே  சொன்னார்கள்:
     " அது  மூட்டை  இல்லை.  மூட்டம்.  மூட்டம்  என்றால்  அமாவாஸ்யை.  பேச்சு  வழக்கில்  மூட்டை,  மூட்டை  என்று  மோனை  முறியாமல்  வந்துடுத்து"
       தொண்டர்களுக்கெல்லாமே  ஆச்சரியமாக  இருந்தது. " பெரியவா  இம்மாதிரி  நுட்பமான  விஷயங்களை  எங்கிருந்து  தெரிந்துகொண்டார்கள்?"
-- ( 'மகா  பெரியவாள்  தரிசன  அனுபவங்கள் ( 3-ம்  தொகுதி)  தொகுப்பாசிரியர்:  பி.எஸ்.கோதண்டராமசர்மா.)
-- தினமணி கதிர்.  25 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர்.     

சித்திர குப்தனின் பிறந்தநாள்

  சித்திரா பவுர்ணமி -- சித்திரகுப்தனின் பிறந்த நாள்.  உயிர்களின் புண்ணிய பாவக் கணக்குகளை எழுதுவதற்காகச் சிவனால் படைக்கப்பட்டவன் சித்திரகுப்தன்.
     கணக்கு எழுதும் தெய்வங்கள்
     சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் உயிகளின் புண்ணிய பாவக் கணக்கு எழுதுகிறார்கள் .  ஏழுவகையான பிறவிகள், 84 லட்சம் யோனி பேதங்கள், உணவு, உறக்கம் இல்லாவிட்டால் உடல் இளைக்கும். உயிரும் இளைப்பதுண்டு எப்படி தெரியுமா?
     ' புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
       பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
       கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
       வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
       செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
       எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்...' என்கிறார் மாணிக்கவாசகர்.
-- தினமலர் . பக்திமலர் . ஏப்ரல் 18, 2013.