Monday, September 28, 2015

மணல் ரகசியம்.

தஞ்சை பெரிய கோயிலில் ' புதைந்திருக்கும் ' மணல் ரகசியம்.
கட்டிடக்கலை வல்லுநர்கள் புதிய தகவல்.
கீழே இரு மடங்கு சுமை    
     பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்ததில், கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமான ஆற்றுமணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.  அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இருமடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.
     அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டி கட்டியிருக்கிறார்கள்.  கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும்.  அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது.  பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது.  அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.
தலையாட்டி பொம்மை போல...
     தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ.  தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன்.  அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.  இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைதானே சமப்படுத்திக்கொள்ளும்.  இதனை zero settlement of foundation என்பர்.  இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது.  அசையுமே தவிர விழாது.  தலையாட்டி பொம்மையின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
     இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது.  அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மனலும் இடம்பெறுகின்றன.
     2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை.  அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை.  350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.
      இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல.  தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல்.  ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல்.  இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல்.  மேற்கு தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.(கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்யம்மன் ,  கூறக்கேட்டது ) பூச்செண்டு.
-- ' தி இந்து ' நாளிதழ்.  செவ்வாய், டிசம்பர் 24, 2013.  

1 comment:

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

வணக்கம்...

வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தாங்கள் விழாவிற்கு வர முடியா விட்டாலும், தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் வழங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...