Monday, August 31, 2009

.ஆடும் பரி .

முருகன் வாகனமான மயில் , மிக வேகமாக ஓடுவதால் அதை மயில் என்று சொல்லாமல் குதிரை என்றே சொல்லுவது அருணகிரிநாதருக்கு வழக்கம் . ' ஆடும் பரி ' என்றும் , ' உக்ர துரகம் ' என்றும் பலவிடங்களில் மயிலைக் குதிரையாகவே வர்ணிப்பார் அருணகிரிநாதர் .மயிலைக் குதிரை என்று சொல்லி விட்டதால் , அதை ஒட்டி வருகிற முருகனையும் ' ராவுத்தன் ' என்று அழைக்கிறார் அருணகிரியார் .
யானையை ஓட்டுபவன் மாவுத்தன் ; குதிரையை ஓட்டுபவன் ராவுத்தன் .
இந்த மயிலைப் பற்றிய ஒரு சுவையான சர்ச்சையைத் தொல்காப்பியத்தில் காணலாம் .
தொல்காப்பியர் மரபியல் என்று ஒரு பகுதி எழுதியுள்ளார் . இன்னின்ன பொருளை இன்னின்ன பெயரால் அழைக்கவேண்டும் என்பதே மரபியல் . யானைக் குட்டியை யானைக் கன்று என்றும் , கோழிக்குஞ்சைக் கோழிப் பார்ப்பு என்றும் அழைக்க வேண்டும் என்கிறார் . நாம் பொதுவாகக் கோழி இனத்தில் ஆண் கோழியைச் ' சேவல் ' என்று அழைக்கிறோம் . ஆனால் , கோழிக்கு மட்டுமின்றி , இறைக்கையுடைய எந்தப் பறவையினத்திலும் ஆண் பறவைக்குச் ' சேவல் ' என்பது பொதுப் பெயர் . காக்கைச் சேவல் , குயில் சேவல் , குருவிச் சேவல் என இவ்வாறே சொல்ல வேண்டும் என்பது தொல்காப்பியர் மரபியல் கருத்து .
அப்படியானால் ஆண் மயிலையும் ' மயில் சேவல் ' என்றுதானே சொல்ல வேண்டும் ? ஆனால் தொல்காப்பியர் , " இறைக்கையுடைய பற்வையினத்தில் எல்லா ஆண்களும் சேவல் என்றே அழைக்கப்பட வேண்டும் , மயிலைத் தவிர " என்று எழுதியுள்ளார் .
" சேவல் பெயர்க்கொண்ட சிறகொடு சிவணும்
மாயிருந்தாவி மயில் அலங்கடையே "
மயிலில் ஆண் மயிலை மட்டும் ஏன் தொல்காப்பியர் நீக்கிவிட்டார் ? இங்கேதான் சுவை .
மயிலில் ஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டு . பெண் மயிலுக்கு இல்லை . தோகையுடைய ஆண்மயில் தான் பார்வைக்கு அழகாக இருக்கும் . அழகு என்பது பெண்மைக்கே உரியது . அதனால் , ஆண்மயில் பிறப்பால் ஆண் ஆனாலும் , அழகாய் இருப்பதால் அதைப் பெண் இனத்திலேயே சேர்த்து ஆண்மயிலைச் ' சேவல் ' என்று கூறக் கூடாது என்று தொல்காப்பியர் கூறிவிட்டார் .
--- புலவர் கீரன் .

சுவிஸ் வங்கி !

எந்த பொருளுக்கும் வரி போடவேண்டியது இருக்காது !
சுவிஸ் வங்கி கொடுத்துள்ள கணக்கு விவரங்களுக்குப் பின்னும் இந்தியா ஒரு ஏழை நாடு என்பதை நம்ப முடிகிறதா ? கறுப்பு பணம் பதுக்குவதில் போட்டி வைத்தால் சந்தேகமே இல்லாமல் , அதில் நம் நாட்டுக்குத்தான் முதலிடம் . கறுப்பு பணம் பதுக்கலில் கம்யூனிச நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் ரஷ்யா 2 -வது இடத்தில் இருக்கிறது .
உலக பொருளாதாரம் சரிவு அடைந்துள்ள நிலையில் , சுவிஸ் வங்கிகளில் தங்கள் நாடுகளை சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண முதலீடுகள் பற்றி தகவல் சொல்ல வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் சுவிஸ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்துள்ளன . ' இதில் எங்களுக்கு என்ன சிரமம் ? அந்தந்த நாடுகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்தால் இங்கு பணம் முதலீடு செய்பவர்களின் பட்டியலை தரத்தயார் ' என்று சுவிஸ் வங்கி அறிவித்து , பதுக்கியவர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது .
இதையடுத்து , கணக்குகளை சொல்லுங்கள் என்று எல்லா நாடுகளும் சுவிஸ் வங்கிக்கு அதிகாரப்பூர்வ கடிதங்களை எழுதியிருக்கின்றன . ஆனால் , நம்நாட்டின் சார்பில் கறுப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்கள் விவரங்களை இதுவரை மத்திய அரசு கேட்கவில்லை . அதற்கான முயற்சி நடந்திருப்பதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர் .
ஆனாலும் , நம்நாட்டை சேர்ந்தவர்கள் முறைகேடாக சம்பாதித்து சுவிஸ் வங்கியில் சேர்த்து வைத்திருக்கும் ரூ . 75 லட்சம் கோடி என்பது அம்பலமாகி இருக்கிறது . இது நம் நாட்டின் கடங்களை விட 13 மடங்கு அதிகமாகும் . இந்தப்பணத்தை பிரித்துக் கொடுத்தால் , நாட்டில் 10 வயதை தாண்டிய ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விடலாம் . இதெல்லாம் , நாட்டு மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து எடுத்துக்கொள்ளப்பட்ட பணம்தான் .
இந்த கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் இருந்து நம் நாட்டுக்கு திரும்ப கொண்டு வரப்பட்டால் உடனடியாக நம்நாட்டின் ஒட்டு மொத்த வெளிநாட்டுக்கடன்களையும் அடைத்து விடமுடியும் . எஞ்சியிருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டியானது , ஆண்டுதோறும் போடப்படும் மத்திய அரசு பட்ஜெட் நிதியை விட அதிகமாக இருக்கும் . எந்த ஒரு பொருளுக்கும் வரி விதிக்க வேண்டிய தேவையிருக்காது .
ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்துக்கு 80 ஆயிரம் பேர் செல்கின்றனர் . இதில் 25 ஆயிரம் பேர் அடிக்கடி சுவிட்சர்லாந்து செல்கின்றனர் . இவர்கள் எல்லோரும் குளுகுளு சுவிட்சர்லாந்தை சுற்றிப்பார்க்க சென்ற சுற்றுலாப்பயணிகள் அல்ல . பலரும் ' வங்கி ' வேலைக்காக சுவிட்சர்லாந்து சென்று வந்துள்ளனர் .
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய வகையில் டாப் 5 !
1 . இந்தியா : ரூ. 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி .
2 . ரஷ்யா : ரூ. 23 லட்சத்து 50 ஆயிரம் கோடி .
3 . இங்கிலாந்து : ரூ. 19 லட்சத்து 50 ஆயிரம் கோடி .
4 . உக்ரைன் : ரூ. 5 லட்சம் கோடி .
5 . சீனா : ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி .
இந்தியாவை காப்பாற்றுவதற்கு யாராவது இருகிறார்களா ?
--- தினமலர் , 09 - 05 - 2009 .

Sunday, August 30, 2009

இயற்கை !

இயற்கையிலிருந்து நாம் பயிலவேண்டிய இந்த முக்கியமான பாடங்களைத் தொகுத்து , ' தி கேஸ் ஆஃப் போன்ஸாய் மானேஜர் ' ( ' The Case Of Bonsai Manager ' , Penguin Portfolio வெளியீடு )) என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது . இந்த புத்தகத்தின் ஆசிரியர் யுனிலிவர் , டாடா உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியிருக்கும் ஆர் . கோபாலகிருஷ்ணன் . அவரது சிந்தனைகளிலிருந்து சில துளிகள் இங்கே .
போன்சாய் மரங்கள் :
ஒரு விதையை மண்ணில் ஊன்றி வைத்துத் தண்ணீர் ஊற்றிப் பராமரித்தால் அது பெரிய விருட்சமாக வளரக்கூடும் . ஆனால் , அதைக் கவனமாகக் கத்தரித்து ஒடுக்கினால் , அது ஒரு சின்னத் தொட்டிக்குள் அடங்கிப்போகிற குட்டியூண்டு போன்சாய் மரமாகிவிடுகிறது .
அதுபோல , நாம் ஒவ்வொருவரும் மிகப் பெரிய விஷயங்களைச் சாதிக்கப் பிறந்தவர்கள் , அதை உணராமல் வெளி விஷயங்கள் நம்மைப் பாதிக்க -- கட்டுப்படுத்த அனுமதித்தால் , கிணற்றுத்தவளைபோல ஒரு சின்ன வட்டத்துக்குள் நம்முடைய வாழ்க்கை எல்லை முடிந்துபோய்விடும் .
நத்தையும் நண்டும் :
நத்தைகளின் ஜென்ம விரோதி , நண்டுகள் தான் . எங்கே நத்தையைப் பார்த்தாலும் நண்டுகள் உடனடியாகப் பிடித்துப் பிய்த்து விழுங்கிவிடும் .ஆனால் , அதே நண்டு வில்லன்களால் , நத்தைகளுக்கு ஒரு மிகப் பெரிய நல்லதும் நடக்கிறது தெரியுமா ?
நத்தைகள் சாதாரணமாக நான்கு மாதங்கள்தான் உயிர் வாழும் . ஆனால் , அவற்றுக்கு மத்தியில் ஒரு நண்டை உலவவிட்டால் , அந்த நண்டிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க வேண்டும் என்கிற துடிப்பில் நத்தைகள் சுறுசுறுப்பாகி விடுகின்றன . அவற்றின் சராசரி வாழ்நாள் பன்னிரண்டு மாதங்களாக அதிகரிக்கிறது .
நாமும் , நம்முடைய எதிரிகள் , போட்டியாளர்களை வெறுத்து ஒதுக்கவேண்டியதில்லை . நம்முடன் சரிக்குச் சரி முன்னேறுவதற்கு போட்டி போடுவதற்கு ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தால் , நம்முடைய செயல்திறன் பலமடங்கு அதிகரிப்பது நிச்சயம் .
உருப்படாத மண் :
உலகிலேயே விவசாயத்துக்குக் கொஞ்சம்கூடப் பொருந்தாத மண்ணைக் கொண்ட பிரதேசம் என்று பார்த்தால் , ஆஸ்திரேலியாதான் .
ஆனால் , அதே ஆஸ்திரேலியாவில்தான் , மிகப் பிரமாதமான பூச்செடிகள் , மரங்களெல்லாம் வளர்ந்திருக்கின்றன . பசுமை கொஞ்சுகிறது . இந்த அதிசயம் எப்படிச் சாத்தியமானது ?
ரொம்பச் சுலபம் . இந்த மண்ணில் போதுமான ஊட்டச் சத்துக்கள் , வளங்கள் இல்லை என்று தெரிந்ததும் , அங்கே விளையும் செடி , கொடிகள் , ஏன் மிருகங்களின் வளரும் தன்மைகூட மாறிவிட்டது . இருக்கும் சொற்ப சத்துக்களைப் பயன்படுத்திக்கொண்டு வளர்வது ஒன்றுக்கொன்று உதவியாக ஒத்துழைத்துக்கொள்வது போன்றதின் மூலம் அந்த ' உருப்படாத மண்ணைக்கூட , மிகப் பிரமாதமான பூங்காக்கள் , கானகங்களாக மாற்றியிருக்கிறது இயற்கை .
சின்ன முதலை , பெரிய முதலை :
ஒரு முதலை இரண்டு முட்டை போடுகிறது . அதிலிருந்து வரும் குட்டிகளில் ஒன்றை ஒரு சிறிய அறைக்குள் அடைத்துவைத்து வளர்க்கிறோம் . இன்னொன்று பரந்து விரிந்த நதிக்கரையில் வளர்கிறது .
சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் , அந்த முதல் முதலை சிறிய அளவில் , அதாவது அது வளர்ந்த அறையின் நீளத்துக்குத்தான் இருக்கும் . ஆனால் , அதோடு கூடப் பிறந்த இரண்டாவது முதலை அதைப்போல இரண்டு , மூன்று மடங்குகூட மிகப் பெரியதாக வளர்ந்திருக்கும் .
நாமும் அந்த முதலைகளைப்போல்தான் . நாம் எந்தமாதிரியான சூழ்நிலையில் வளர்கிறோம் . நாம் சந்திக்கிற அனுபவங்கள் எப்படிப் பட்டவை . இதெல்லாம்தான் நமது முன்னேற்றத்தைத் தீர்மானிக்கின்றன . ஆகவே , புதிய வாய்ப்புகள் , சவால்கள் வரும்போது தைரியமாக ஏற்றுக்கொள்ளுங்கள் . தயங்கி ஒதுங்கிப்போய் ' சுருங்கிய முதலை 'யாகி விடாதீர்கள் .
பூச்சிக்கு ஆயிரம் கண்கள் :
நம்முடைய வீட்டில் சர்வ சாதாரணமாகத் தென்படும் ஈ , கொசு உள்ளிட்ட பூச்சிகளுக்கு இரண்டு , மூன்று இல்லை , ஏகப்பட்ட கண்கள் உண்டு .
மேலோட்டமாகப் பார்த்தால் இது தெரியாது . உருப்பெருக்கி மூலம் கவனித்தால் ஒரு சின்னப் பூச்சித் தலைக்குள் பல ஆயிரம் கண்கள் இருப்பது தெரியும் .
இதனால் , இந்தப் பூச்சிகள் ஒரு பொருளைப் பார்க்கும்போது , அதைச் சுற்றியிருக்கிற மற்ற சமாச்சாரங்களையும் கவனித்து உள்வாங்கிக் கொள்கின்றன . அவற்றின் அடிப்படையில் தங்களுடைய அடுத்த கட்டத் திட்டங்களைத் தீர்மானிக்கின்றன .
பல சமயங்களில் நம்முடைய சிந்தனையிலும் இந்தப் பூச்சிப்பார்வை அவசியப்படுகிறது . சேணம் பூட்டியதுபோல் ஒரு விஷயத்தை மட்டும் கவனித்துக்கொண்டிருக்காமல் , அங்கே உள்ள சூழல் , மற்ற பின்னணித் தகவல்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒரு முடிவெடுத்தால் அது இன்னும் சிறப்பானதாக அமையும் .
கழுகுக்கும் அன்பு தேவை :
அரேபியா என்று சொன்னதும் , எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது ஒட்டகம் , அப்புறம் கழுகு .
நம் ஊரில் நாய் , பூனை , கிளியைச் செல்ல பிராணியாக வளர்ப்பதுபோல் , அரேபிய ஷேக்குகள் கழுகு வளர்க்கிறார்கள் . அதற்குப் பல வாரங்கள் பயிற்சி கொடுத்துத் தயார்படுத்துகிறார்கள் . கழுகுக்கும் , அதை வளர்க்கிறவர் , பயிற்சி தருகிறவருக்கும் இடையே நிஜமான அன்பு மலரவேண்டும் . இவர் நம்மீது அன்பு செலுத்துகிறார் என்று தெரிந்துவிட்டால் , அதன்பிறகு அந்தக் கழுகு தனது முரட்டுத்தனத்தையோ , பலத்தையோ காண்பிக்காது . அவர் என்ன கோட்டாலும் செய்யத்தயாராகிவிடும் .
அடுத்தவர்களிடம் பழகுகிறபோது , நாமும் இந்தக் கழுகு உதாரணத்தை நினைத்துக் கொள்ளவேண்டும் . மனதில் உண்மையான அன்புடன் பேசி உறவாடினால் , எப்பேர்பட்ட முசுடுகளையும்கூட நம்முடைய நண்பர்களாக்கிக்கொண்டுவிடலாம் .
--- குமுதம் , 06 - 05 - 2009 .

Saturday, August 29, 2009

கண்ணதாசன் .

சென்னை அரசினர் மருத்துவமனையில் கவிஞர் கண்ணதாசன் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் , " இப்போ நான் சாப்பிடுகிறேனே இவை ' மாத்திரை ' அல்ல . ' மாத்து -- இரை ' என்று நகைச்சுவையாகக் கூறுவாராம் .

Friday, August 28, 2009

'T I P S '

' TIPS ' என்பது ' To induce prompt service ' என்பதில் உள்ள முதல் நான்கு எழுத்துக்களாகும் .

9 வாசல் !

உடலுக்கு 9 வாசல் !
பரம்பரையாகச் சொல்லப்பட்டு வரும் கணக்கு இது . ஆனால் , இக்கணக்கு தவறு .
இரண்டு கண்கள் + இரண்டு காதுகள் + இரண்டு மூக்குத் துவாரங்கள் + வாய் + சிறுநீர்ப்பாதை + மலப்பாதை ஆக ஒன்பது வாசல் உடலுக்கு என்பர் .
இது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் . பெண்களுக்கு 10 வாசல் . ஆண்களை விட ஒன்று கூடுதல் . கருப்பைப் பாதை அல்லது உடலுறவுப்பாதை என்பது பெண்களுக்கு கூடுதலான வாசல் .
அதாவது , ஆண்களுக்கு சிறுநீர்ப்பாதையும் விந்து வெளியேறும் பாதையும் ஒன்று . ஆனால் , பெண்களுக்கு உடலுறவுப் பாதை ( கருப்பைப் பாதை ) தனி , சிறு நீர்ப்பாதைத்தனி . எனவே , பெண்களுக்கு 10 வாசல் .
பெண்களுக்கு கருப்பைப் பாதைத் தனி , சிறுநீர்ப்பாதைத் தனி என்பதைக்கூட அறியாமல் காலங்காலமாய்ச் சொல்லப்படும் கணக்கு தவறு என்பதை அனைவரும் அறிய வேண்டும் . கருப்பைப் பாதைக்கு மேல் உள்ள சிறு துவாரந்தான் பெண்ணின் சிறுநீர்ப்பாதை கருப்பைப்பாதை ( உடலுறவுப் பாதை ) வழி பெண்களுக்கு சிறுநீர் வருவதில்லை .
இன்னும் சரியாகச் சொன்னால் , பெண்களுக்கு மொத்தம் 12 வாசல்கள் . ஆம் , பால் சுரப்புப் பாதைகள் இரண்டையும் சேர்த்தால் 12 வாசல்கள்தானே !
--- மஞ்சை வசந்தன் . பாக்யா , ஏப்ரல் 24 -- 30 ; 2009 .

Thursday, August 27, 2009

ஐஸ்கட்டி கதை !

ஐரோப்பிய நாட்டிலே ' பிரடெரிக் தி கிரேட்' என்ற மன்னன் , " ஏழைகளுக்கு எவ்வளவோ செய்கிறேன் . ஆனால் , எதுவும் கிடைக்கவில்லை , கிடைக்கவில்லை என்று குறை கூறுகின்றார்களே , ஏன் ?"
என்று , ஒரு பெரிய விருந்தின்போது தனது பிரபுக்களையும் , அமைச்சர்களையும் பார்த்துக் கேட்டான் .
வயது முதிர்ந்த அமைச்சர் ஒருவர் , " நான் இதற்குப் பதில் சொல்கிறேன் " என்று சொல்லி விட்டு , விருந்தில் தனக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ஐஸ்கட்டியை எடுத்துப் பக்கத்திலிருந்தவரிடம் கொடுத்து , ' இதை அடுத்த பிரபுவிடம் கொடு என்றார் . அவர் அவரிடத்தில் கொடுத்தார் . அந்தப் பிரபு தன் பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்தார் . இப்படி 50 , 60 கைகள் மாறி , கடைசியிலே மன்னர் கையில் போய்ச் சேரும்போது , இரண்டு சொட்டுத் தண்ணீர்தான் மிச்சம் இருந்தது . ' எங்கே ஐஸ்கட்டி ?" என்று கேட்டான் மன்னன் .
' உங்களுக்குக் கிடைத்த இரண்டு சொட்டுத் தண்ணீர்தாம் ! . அது ஐஸ்கட்டியாகத்தான் புறப்பட்டது . இத்தனை இடைத் தரகர்கள் வழியே வந்ததாலே , கடைசியில் உங்களுக்கு இரண்டு சொட்டுத் தண்ணீர்தான் கிடைத்தது . நீங்கள் ஏழைகளுக்குச் செய்யும் உதவிகளும் இப்படித்தான் ! " என்று விளக்கினார் அந்த அமைச்சர் .
--- C . N . அண்ணாதுரை சொன்ன ஐஸ்கட்டி கதை . ஆனந்தவிகடன் , 10 - 10 - 1965 .

Wednesday, August 26, 2009

' குட்பை '

ஒருவரிடமிருந்து விடைபெறும்போது ' வரேன் ' என்று சொல்லிவிட்டுப் போகும் பழக்கம் நம் ஊரில் உண்டு . ஆங்கிலேயர்கள் ' குட்பை ' சொல்கிறார்கள் . ' God be with you ' என்பதன் சுருக்கம் அது . பிரெஞ்சுக்காரர்கள் ஆட்யூ ( Adieu ) அல்லது au revoir என்பார்கள் . கிரேக்கர்கள் ' ஆடியோலிஸ் ' என்கிறார்கள் . எல்லாமே கடவுளைக் குறிக்கும் . ஜெர்மனியில் யூஃப்வைடர்ஸெஷன் என்பார்கள் . ரஷ்யாவில் -- டோஸ்வைடேனியா . சைனீஸ் -- லாய் சீயன் . சோனியா காந்தி இத்தாலியிலிருந்து இந்தியா வருமுன் பெற்றோரியம் ' அரைவெடொஸி ' என்று சொல்லியிருப்பார் . (' மறுபடியும் நாம் சந்திக்கும் வரை ' என்று அர்த்தம் ) . ஹவாய் தீவில் ' அலோஹா ' -- 'Love ' என்று பொருள் .!
பிலிப்பைன்ஸில் ஒரு நண்பரிடம் நான் விடைபெற்றபோது , ' ஸலாமத் ஜலான் ' என்றேன் . ' அமைதி உண்டாகட்டும் ' ' விடைபெறுகிறேன் ' என்னும் அர்த்தத்தில் ! ஜப்பானில் உலகப் புகழ்பெற்ற அழகிய வார்த்தை -- ஸயனோரோ ! அதாவது , ' என்ன செய்வது ...? நாம் தற்போதைக்கு பிரிந்தாக வேண்டும் ' என்கிற அளவுக்கு அர்த்தமுள்ள வார்த்தை அது ! துருக்கிய ' வரேன் ' தான் எனக்குப் பிடித்தது --
' கலீ...கலீ...'! அதற்கு ' சிரித்துக்கொண்டே... சிரித்துக்கொண்டே...' என்று பொருள் .
--- ஹாய் மதன் , ஆனந்தவிகடன் , 10 - 10 - 1999 .

Monday, August 24, 2009

அழகு என்றதும் ...

" அந்தப் பெண்னின் பெயர் நார்மா ஜீன் . 17 வயது . ராணுவத்துக்குச் சொந்தமான பாராசூட் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டு இருந்தாள் . ' எங்கள் ராணுவத்தில் பெண்களும் இருக்கிறார்கள் ' என்று வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட நினைத்த ராணுவ அதிகாரிகள் , அவளை ஏகப்பட்ட போட்டோக்களை எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டார்கள் . அடுத்த இரண்டு மாதங்களில் ... கிட்டதட்ட 30 பத்திரிகைகளில் அட்டைப்படத்தில் சிரித்தாள் நார்மா ஜீன் . இந்தப் படங்களைப் பார்த்த ஒரு தாயாரிப்பாளர் ' லேடீஸ் அஃப் தி கோரஸ் ' ( Ladies of the Chorus ) படத்தில் , நார்மா ஜீன் என்கிற பெயரை மாற்றி நடிக்கவைத்தார் . படம் சூப்பர் ஹிட் ! அவர்தான் மர்லின் மன்றோ !"
--- எஸ். ஆனந்தசேகர் , திருச்சி - 20 , ஆனந்தவிகடன் , 22 - 04 - 2009 .

Sunday, August 23, 2009

ஒரு குட்டிக் கதை !

இந்தியத் தலைநகரிலிருந்து வெளிவரும் ' வடக்கு வாசல் ' இதழில் படித்த கதை இது :
அமெரிக்காவில் காட்டின் அருகில் அமைந்த ஒரு கிராமத்தில் புலி ஒன்றின் அட்டகாசம் இருந்தது . என்ன செய்தும் அந்தப் புலியைப் பிடிக்கமுடியவில்லை . அமெரிக்காவில் முப்படைகளாலும் அந்தப் புலியைப் பிடிக்க முடியாத நிலையில் வேற்று நாடுகளிடம் அமெரிக்கா உதவி கோரியது . யு.கே , கனடா , ஃப்ரான்ஸ் , ஜப்பான் ம்ஹூம் யாராலும் முடியவில்லை .
' எங்களைக் கேட்கலியே , நாங்கள் எவ்வளவு புலிகளைப் பிடிக்கிறோம் . இதைப் பிடிக்கமாட்டோமா ? ' என்று ஒரு குரல் . யார் ? இலங்கை அரசுதான் .
இலங்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது .
இலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று . வருடமாயிற்று . போன படை திரும்பவேயில்லை .
கடைசியில் , உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து இலங்கைப் படைகளை மீட்க காட்டுக்குள் சென்றன . நடுக்காட்டில் அவர்கள் கண்ட காட்சி ...
ஒரு மான் தலைகீழாக நெருப்பின் மேல் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது . கீழே இலங்கைப் படையினர் அந்த மானைக் குண்டாந்தடிகளால் தாக்கிக்கொண்டிருந்தனர் . ' ஒப்புக் கொள் . ஒப்புக்கொள் . நீதான் புலி '
உலகப் படையினர் அந்த அப்பாவி மானை விடுவித்து , "ஒரு வருடமாக இதையா கேட்டு உன்னை வதைத்தனர் ?"
அதற்கு அந்த மான் , " பரவாயில்லைங்க , எனக்காவது ஒரு வருஷம் தான் . ஆனா , இலங்கையில 25 வருஷமா இதைத்தான் பண்றாங்க " என்றது .
--- ஆனந்தவிகடன் , 22 - 04 - 2009 .

Saturday, August 22, 2009

ஓசி !

ஆபீஸ் தபால்களை அனுப்பும் உறை ( கவர் ) மீது சர்வீஸ் ஸ்டாம்ப் ஒட்டி ' இந்திய அரசுப் பணிக்கு மட்டும் ' ( On I . G . S . Only ) என்ற எழுத்துக்களை முத்திரை குத்தும் வழக்கம் இப்போது உள்ளது .
சர்வீஸ் ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கம் 1865 - ல்தான் நடைமுறைக்கு வந்தது . அதற்கு முன்பு , கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆட்சி நடைபெற்றபோது , ஆங்கிலேயர்கள் தங்கள் ஆபீஸ் தபால் உறை மீது
' கம்பெனி சேவைக்கு மட்டும் ' ( On Company Service Only ) என்பதைச் சுருக்கி O . C . S . என்கிற மூன்று ஆங்கில எழுத்துக்களை முத்திரை குத்தினார்கள் . இந்த கவர்களின் மேல் ஸ்டாம்ப் ஒட்டத் தேவை இல்லை . இது இலவச சேவை ! இதை ' ஓசி சர்வீஸ் ' ( O. C . S .) என்று சொல்லத் தொடங்கினார்கள் .
நாளாவட்டத்தில் O . C . என்ற இரண்டு எழுத்துக்களும் ' ஓசி ' என்ற தமிழ்ச் சொல்லாகி , நிலைத்துவிட்டது .
--- ஆனந்தவிகடன் . 22 - 04 - 2009 .

Friday, August 21, 2009

' பிக்பென் '

வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை.
லண்டன் நகரின் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை 1834 -ல் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது . இதில்தான் இங்கிலாந்து பாராளுமன்றம் இயங்கிவந்தது . எனவே , பழைய அரண்மனை இருந்த அதே இடத்தில் , புதுப் பொலிவுடன் மீண்டும் ஒரு அரண்மனையைக் கட்ட இங்கிலாந்து பாராளுமன்றம் முடிவு செய்தது .
இதற்காக சார்லஸ் பாரி என்ற கட்டடக் கலைஞரை இங்கிலாந்து அரசு நியமித்தது . அதற்காக அகஸ்டஸ் புகின் உதவியை நாடினார் சார்லஸ் பாரி .
புதிதாக கட்டப்படும் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் மிகப் பெரிய அளவில் , பிரமாண்டமான ஒரு மணிக்கூண்டு கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது . இதன்படி 315 அடி உயரத்தில் , நான்கு. திசைகளில் இருந்து பார்த்தால் தெரியுமாறு பிரமாண்ட மணிக்கூண்டு கட்டப்பட்டது .
அரசு கேட்டுக் கொண்டதற்காக மிக பிரமாண்டமான வெண்கல மணியை தயாரித்தது ஜான் வார்னர் கம்பெனி . 16 ஆயிரத்து 300 கிலோவில் மிகப் பெரிய மணி உருவாக்கப்பட்டு , 16 குதிரைகள் கட்டிய பிரமாண்ட சாரட் வண்டியில் அது இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டது . ஆனால் , அதிக எடை காரணமாக , சாரட் முறிந்ததால் , மணி கீழே விழுந்து சேதம் அடைந்தது . இதையடுத்து , மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டு , 1854 -ம் ஆண்டு லண்டன் டவருக்குள் கொண்டு வரப்பட்டது . மணியை கட்டுவதற்காக 5 டன் எடை கொண்ட கடிகார அறை கட்டப்பட்டது . இதில் காற்று புகாத அறையில் கடிகாரத்துடன் மணி இணைக்கப்பட்டு , ஒலி அளவு சோதிக்கப்பட்டது . ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் மிகச் சிறிய அளவில் மணி ஒலிக்குமாறு முதலில் பரிசோதிக்கப்பட்டது . பின்னர் , 1858 ஏப்ரல் 10 -ம் தேதி லண்டன் டவர் கடிகாரத்துடன் , பிரமாண்டமான மணி இணைக்கப்பட்டு , இயக்கத்திற்குத் தயாரானது . 2-ம் உலக போரின்போது 1941-ல் ஜெர்மன் குண்டு வீச்சில் இந்த கடிகார கோபுரத்தின் 2 பக்கங்கள் சேதம் அடைந்தன . கடந்த 1976-ல் கடும் பனிப்பொழிவு காரணமாக , கடிகாரத்தின் முட்கள் சரிவர இயங்கவில்லை . இன்று வரை லண்டன் மக்களுக்கு சேவை செய்து வருகிறது . உலகின் மிகப் பெரிய மணியோசை கடிகாரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் . 10 - 04 - 2009 .

Thursday, August 20, 2009

அப்படியா !

* இப்போதுள்ள அரசியல் தலைவர்களும் , மந்திரிகளும் எதுக்கெடுத்தாலும் , எங்கு போனாலும் விமானத்தில் பறக்கிறார்கள் . ஆனால் , நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தேசபிதா மகாத்மா காந்தி ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்தது கிடையாதாம் .
* ரோஜாப்பூவிலிருந்து முதன்முதலில் பன்னீர் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் தாஜ்மஹால் உருவாகக் காரணமாக இருந்த நூர்ஜஹானின் தாயார் சாலிமாதான் .
*மனிதனுக்கு 32 பற்கள் , நாய்க்கு 42 பற்கள் . ஆனால் , ஆமைக்குப் பல்லே கிடையாது .
* இரத்தத்தில் கொழுப்புப் பொருள்கள் , கேல்சியம் படிவதால் நெஞ்சுப்பை நாளம் குறுகி விடுகிறது . இதனால் , இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது . அல்லது நின்று விடுகிறது . அப்போது மாரடைப்பு உண்டாகிறது .
* சென்னை வானொலி நிலையம் , 1938-ம் ஆண்டு ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டது . அவர் ஆற்றிய உரையே வானொலியில் முதல் தமிழ் பேச்சாகும்
* மாவீரன் அலெக்ஸாண்டர் , ப்ளேட்டோ , டாவின்சி , மைக்கேல் ஏஞ்சலோ... இப்படி ' ஹோமோசெக்ஸ் ' மேதைகளைப்பற்றிய பெரிய புத்தகமே உண்டு
* உடல் எடையைக் குறைக்க இன்று நவீன சிகிச்சைகள் வந்துள்ளன . இதற்கு Endoscopic allergan baloon என்று பெயர் ..

Wednesday, August 19, 2009

நேரு எழுதிய உயில் ...

' கையளவு அஸ்தி , கங்கையில் கலக்கப்பட வேண்டும் '
நேரு எழுதிய உயில் ...
" என் மறைவுக்குப் பிறகு எனக்காக மதச்சடங்குகள் எதுவும் செய்யப்பட வேண்டாம் என்று அறிவிக்க விரும்புகிறேன் . நான் இறந்த பிறகு என் உடலைத் தகனம் செய்துவிட வேண்டுமென்று விரும்புகிறேன் . அயல்நாட்டில் நான் மரணமடைந்தால் , அங்கேயே தகனம் செய்யப்பட்டு அஸ்தி , அலகாபாத்திற்கு அனுப்பப்பட வேண்டும் . ஒரு சிறிய கையளவு அஸ்தி கங்கையில் கலக்கப்பட வேண்டும் . இதற்கு காரணம் , இளம் பிராயத்திலிருந்தே அலகாபாத்தில் கங்கை , யமுனை நதி தீரங்களிடம் எனக்கு ஓர் பற்று உண்டு . நான் வளர வளர இந்தப் பற்றும் வளர்ந்து வந்திருக்கிறது . இந்தியாவின் தொன்மை மிக்க பண்பாட்டிற்கும் , நாகரிகத்திற்கும் இடையறாமல் மாற்றங்கண்ட போதிலும் , நிரந்தரமான நீர்பெருக்குடன் என்றும் ஒன்று போலவே பொலியும் கங்கை ஒரு சின்னமாகத் திகழ்கிறது.
கங்கையின் நினைவு பழங்காலப் பெருமையையும் , நீரோட்டம் நிகழ்காலத்தையும் , பெருங்கடலை நோக்கிச் செல்லும் சங்கம யாத்திரை வருங்காலத்தையும் எனக்கு உணர்த்துகின்றன .
எனது இந்த அபிலாஷைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் இந்தியக் கலாச்சாரத்திற்கு எனது கடைசி அஞ்சலியாகவும் என் அஸ்தியின் ஓர் பகுதி அலகாபாத்திலுள்ள கங்கையில் கரைக்கப்பட வேண்டும் . அதன் மூலம் இந்தியக் கரையோரங்களைத்தொடும் பெருங்கடலில் அது சங்கமமாக வேண்டுமென்ற வேண்டுகோளை விடுக்கிறேன் . எனது அஸ்தியின் பெரும் பகுதி , ஓர் விமானத்தின் மூலம் உயரே எடுத்துச் செல்லப்பட்டு , இந்திய வயல் புறங்களில் தூவப்பட வேண்டும் . அது இந்திய மண்ணோடு மண்ணாக கலந்து அதிலிருந்து பிரிக்க முடியாத வண்ணம் ஒன்றுபட வேண்டும் . "
இதுவே நேரு எழுதிய உயிலில் உள்ள முக்கிய விபரமாகும் . சுதந்திரத்துக்கு 30 ஆண்டுகளும் , சுதந்திரத்திற்குப்பின் 17 ஆண்டுகளும் தாய்நாட்டுக்கு உழைத்தார் . இந்தியா வரலாற்றில் அந்த தியாக வரலாறு , 1964 மே 27 -ம் தேதி முடிவடைந்தது .
--- தினமலர் 07 - 04 - 2009 .

தேவரின் பண்பு !

தென்னகத்து நேதாஜி என்று எல்லோராலும் போற்றப்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் . தேவர் ஐயா , தேவர் பெருமான் என அழைக்கப்பட்டவர் . அவர் பெண்களை பெரிதும் மதிப்பவர் . பெண்ணை , பெண்மையை போற்றும் குணம் கொண்டவர் .
1955 ல் அவர் பர்மா சென்றிருந்தார் .அவருக்கு புத்தமதம் சார்பில் வரவேற்பு அளித்தனர் . அழைப்பை ஏற்று சென்றார் .அவர் அங்கு வந்த போது புத்தமதப் பெண்டிர் வரிசையாக மண்டியிட்டு அமர்ந்து தங்கள் கூந்தலை விரித்து தரையில் பரப்பினர் . அதன் மீது நடந்து சென்று இருக்கையில் அமர வேண்டும் என்றனர் . மிகச் சிறந்தவர்கள் என கருதுபவர்களுக்கு மட்டுமே இத்தகைய வரவேற்பு.
இந்த வரவேற்பு முறையில் தேவருக்கு உடன்பாடில்லை . அந்த ஏற்பாட்டை பார்த்ததும் பதறி விட்டார் . " நான் வணங்கும் தாய் போன்று பராசக்தியின் வடிவானவர்கள் பெண்கள் . அவர்கள் தலைமுடி மீது நான் கால் வைக்க மாட்டேன் " என கரங்கூப்பி மறுத்து விட்டார் . இதைக் கேட்டு புத்தமத துறவிகள் , பெண்கள் யாவரும் வியந்து , மகிழ்ந்தனர் .
--- தினமலர் . பெண்கள் மலர் . மார்ச் . 1 . 2008 .

Tuesday, August 18, 2009

மரியாதை !

கொடிக்கு மரியாதை !
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடியை மேளதாளத்துடன் வெள்ளித் தட்டில் வைத்து வெளியே எடுத்து வந்து , கோயிலின் கிழக்குக் கோபுரத்தில் ஏற்றி நாட்டுக்கும் தேசியக் கொடிக்கும் மரியாதை செய்வார்கள் . இதுவே வேறு எந்தக் கோயிலிலும் இப்படிச் செய்வது கிடையாது .
--- மாந்தன் . பிப்ரவரி . 29 , 2008 .

Monday, August 17, 2009

செயற்கை இதயம் .

1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் -- இந்திய விஞ்ஞானிகள் சாதனை .
ஏழை நோயாளிகளுக்கு மிகவும் உதவும் வகையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான செயற்கை இதயத்தை கரக்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் .
மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் ஐஐடியில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்தியாவிலேயே முதல் முறையாக செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளது . விலை மதிப்பில்லாத உயிரை காக்கும் இதன் விலை ஒரு லட்ச ரூபாய் மட்டுமே . சோதனை முறையில் தாயாரிக்கப்பட்ட இந்த இதயம் விலங்குகளுக்கு வைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது . இதில் விலங்குகள் இயல்பாக இருந்தது தெரியவந்ததால் சோதனை வெற்றிபெற்றது . 13 அறைகள் கொண்ட இந்த இதயம் அடுத்து மனிதர்களிடம் சோதித்து பார்க்கப்படவேண்டியது தான் பாக்கி . ஆனால் இதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலிடம் முறைப்படி அனுமதி பெறவேண்டும் .
இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி , ஸ்டன் ட் , பைபாஸ் அறுவை சிகிச்சை என பல முறைகள் இப்போது நடைமுறையில் உள்ளன . ஆனால் இதய தசைகள் பலவீனமானவர்களுக்கு இது எதுவுமே பயன்தராது . இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் உயிர் பிழைக்க ஒரே வழி . அல்லது செயற்கை இதயங்களை பொருத்தலாம் . அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் செயற்கை இதயங்கள் 30 லட்சம் ரூபாய் விலை கொண்டது . மேலும் அவற்றின் நம்பகத்தன்மையும் குறைவு . ஆனால் ஒரு லட்ச ரூபாய் விலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சுதேசி இதயம் எந்தக்குறைபாடும் இல்லாமல் செயல்படக்கூடியது என்று இதைத் தயாரித்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .
ஒரு லட்ச ரூபாய் விலையிலான நானோ காரை தயாரிக்கும் வாய்ப்பை வங்காளம் இழந்தாலும் அதே விலையில் இதயத்தையே உருவாக்கி சாதனை படைத்துவிட்டது என்று இத்திட்டத்தில் பங்கு வகித்த ஒரு விஞ்ஞானி கூறினார் .
--- தினமலர் . 21 - 03 - 2009 .

Saturday, August 15, 2009

முதுகெலும்புத் தொடர்

முதுகெலும்புத் தொடரில் உள்ள 5 பிரிவுகள் :
கழுத்து வரை உள்ள முதல் .... 7 எலும்புகள் -- செர்விகல் -- Cervical .
அதற்கு அடுத்த ................................12 எலும்புகள் -- தொராஸிக் -- Thoracic .
அதற்கு அடுத்த ................................. 5 எலும்புகள் -- லும்பர் -- Lumber /
இடுப்புப் பகுதியில் .......................... 5 எலும்புகள் -- ஸேக்ரம் -- Sacram .
இரண்டு தொடைகளும்
வந்து சேரும் பகுதி ........................ 4 எலும்புகள் -- காக்ஸிஸ் -- C occyx .
மொத்தம் ..............................33 எலும்புகள் .
--- தினமலர் . பெண்கள் மலர் . ஜூன் 19 , 2004 .

Friday, August 14, 2009

விமானம் .

கன்கார்டு விமானம் .
உலக உருண்டையை வலம் வர மனிதன் பல மாதங்கள் எடுத்துக்கொண்ட காலம் ஒன்று இருந்தது .ஆனால் , காலப்போக்கில் நவீன தொழில் நுட்பங்களின் பலனாக சில மணி நேரங்களில் உலகைச் சுற்றி வரும் நிலையும் ஏற்பட்டது . கன்கார்டு விமானத்தின் வருகைக்குப் பின்னர்தான் இது சாத்தியப்பட்டது . ஒலியை விட வேகமாக பயணிக்கும் கன்கார்டு விமானம் முதன்முதலாக பறந்த நாள் மார்ச் 27 .
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளின் விந்தை தயாரிப்பான இந்த விமானத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 2 ஆயிரத்து 179 கிலோ மீட்டர் .
அதாவது காற்றில் ஒலி பரவும் வேகத்தைவிட இது 2 மடங்கு அதிகம் . லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு இந்த விமானம் அரை மணி நேரத்திற்குள்ளாகவே சென்று விடும் . இதற்கான பயணக்கட்டணம் 5 லட்ச ரூபாய் . வேகமான வான் பயணத்தில் கன்கார்டு பல சாதனைகளைப் படைத்தது .1970 களிலேயே கன்கார்டு உருவாக்கப்பட்டு விட்டாலும் வர்த்தக ரீதியாக இது 1976-ல் தான் சேவையை தொடங்கியது . மொத்தம் இது போன்று 20 கன்கார்டு விமானங்கள் தயாரிக்கப்பட்டன .
பிரிட்டிஷ் ஏர்வேஸ் , ஏர் பிரான்ஸ் , சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற பிரபல விமான நிறுவனங்கள் இதை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி இயக்கின .ஆனால் லண்டன் -- பாரீஸ் , லண்டன் -- நியூயார்க் மார்க்கங்கள் தவிர மற்ற மார்க்கங்களில் இது பெரும் நஷ்டத்தையே தந்தது .
எரிபொருளை பீப்பாய் பீப்பாயாக குடித்ததும் , கட்டணங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்ததும்தான் இந்த நஷ்டத்துக்கு காரணம் . இதனால் கன்கார்டு விமானங்கள் மெல்ல மெல்ல சேவையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன . கடைசியாக 2003-ம் ஆண்டுதான் கன்கார்டு பறந்தது . அதற்குப் பிறகு பறக்கவேயில்லை .அதாவது கன்கார்டு விமானம் கடைசியில் காயலான் கடை சரக்காகிவிட்டது .
வர்த்தக ரீதியில் கன்கார்டு ஜெயிக்காவிட்டாலும் தொழில்நுட்ப ரீதியில் இது உலக அதிசயங்களில் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது .
--- தினமலர் . 27 - 03 - 2009 .

Thursday, August 13, 2009

தகவல் களஞ்சியம் .

* 1660 ஆண்டுக்கு முன்புவரை கடிகாரங்களில் மணியைக் காட்டும் முள் மட்டுமே உண்டு .
* உலகின் அனைத்து கண்டங்களின் தென்பகுதி குறுகலாகவும் , வடபகுதி அகலமாகவும் இருக்கிறது .
* தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு 8-வது வாரத்தில் கைவிரல்கள் தோன்றி அதில் ரேகைகளும் பதிய ஆரம்பித்துவிடும் . . .
* அமெரிக்க சட்டசபை கட்டிடத்தில் ஆண்டின் நாட்களை குறிப்பிடும் வகையில் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது .
*மகாத்மா காந்தியை ' காந்தியடிகள் ' என்று முதன்முதலில் அழைத்தவர் திரு.வி. கல்யாணசுந்தரனார் .
* சூரியக் கதிர்கள் கடலுக்குள் 350 அடி வரை செல்லும் .
* மழையை அளக்க ' புளூவியோ மீட்டர் ' என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது .
*' போப் ' என்ற சொல் 'பாபா ' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும் .
* கடல்நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நம் நாட்டில் முதன்முதலாக குஜராத்தில் தொடங்கப்பட்டது .
* 50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரம் -- மூங்கில் .
* நின்றுகொண்டே உறங்கும் விலங்கு -- குதிரை .
* இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -- செரி .

Wednesday, August 12, 2009

படை வகைகள் .

தற்போது தரைப்படை , விமானப்படை , கப்பற்படை ஆகிய முப்படைகள் தான் இருக்கின்றன. ஆனால் மன்னர்கள் காலத்தில் இருந்த படை பலம் வேறு . அப்போது அவர்கள் வைத்திருந்த படை அளவைப் பொறுத்து பலவகைகளாக பிரித்து இருந்தனர் . அவை :
தேர்ப்படை , யானைப்படை , குதிரைப்படை , காலாட்படை ஆகிய நாற்படையும் கூடியது-- பதாதி .
பதாதி மும்மடி ( 3 மடங்கு ) கொண்டது --சேனாமுகம்
சேனாமுகம் மும்மடி கொண்டது ------------- குமுதம் .
குமுதம் மும்மடி கொண்டது -------------------- கணகம் .
கணகம் மும்மடி கொண்டது --------------------- வாகினி .
வாகினி மும்மடி கொண்டது --------------------- பிரளயம் .
பிரளயம் மும்மடி கொண்டது ------------------- சமுத்திரம் .
சமுத்திரம் மும்மடி கொண்டது ---------------- சங்கம் .
சங்கம் மும்மடி கொண்டது ----------------------- அநிகம் .
அநிகம் மும்மடி கொண்டது -----------------------அக்கோணி .
ஒரு அக்கோணி என்பது 21,870 தேர்கள் , 21,870 யானைகள் , 65,610 குதிரைகள் , 1,07,300 காலாட்படைகள் கொண்ட படையாகும் .
--- தினத்தந்தி , 21 - 03 - 2009 .

Tuesday, August 11, 2009

' பிரஷ் '

கைதியின் ' பிரஷ் '
கண்டுபிடிப்புகள் எல்லாம் பெரும்பாலும் ஒரு தற்காலிக நிகழ்வால் ஏற்பட்டவையாக இருக்கிறது .
நாம் பல்துலக்கும் பிரஷ்சை உருவாக்கியவர் ஒரு சிறைக் கைதி . அவரது பெயர் வில்லியம் ஆட்டிஸ் . இங்கிலாந்தை சேர்ந்த இவர் 1770-ம் ஆண்டில் கலகத்தை தூண்டியதாக சிறையில் அடைக்கப்பட்டார்.
வித்தியாசமாக சிந்திக்கும் குணம் உடையவர் ஆட்டிஸ் . ஒரு நாள் அப்போதைய வழக்கப்படி துண்டுத் துணியால் பல் தேய்த்தார் . அப்போது அவருக்குள் ஒரு எண்ணம் உதித்தது . உடனே அன்றைய தினம் சாப்பாட்டுக்குக் கொடுக்கப்பட்டதில் இருந்து ஒரு எலும்பு துண்டை தனியாக எடுத்து வைத்துக்கொண்டார் . அவர் தனது எண்ணத்தை வெளிப்படுத்தவே , காவலாளி ஒருவர் மிருகத்தின் ரோமங்களை கொடுத்து உதவினார் . அந்த ரோமங்களை சிறு சிறு குச்சங்களாக சேர்த்து கட்டினார் ஆட்டிஸ் . பின்னர் எலும்புத் துண்டில் துளை போட்டு குச்சங்களை நிறுத்திவைத்தார் . இவ்வாறுதான் பல்துலக்கும் பிரஷ் உருவானது .
ஜெயிலில் இருந்து வெளியே வந்த வில்லியம் ஆட்டிஸ் , தனது பிரஷ் வியாபாரத்தை தொடங்கினார் . அது பலத்த வரவேற்பை பெற்றது .நாளுக்கு நாள் முன்னேற்றத்துடன் பல வடிவங்களை பெற்று வந்தது பிரஷ் . கடந்த நூற்றாண்டில்தான் பீங்கான் , பிளாஸ்டிக் வகை கைப்பிடிகளையும் , நார் குச்சங்களையும் கொண்ட நவீனவகை பிரஷ்கள் பயன்பாட்டுக்கு வந்தது .
அவரது கண்டுபிடிப்பு ஆள்காட்டி விரலுக்கு ஒரு வேலையை மிச்சப்படுத்திவிட்டது . இருந்தாலும் ஆட்டிஸ் காலத்துக்கு முன்பே வேர் , விழுதுகள் , குச்சிகளால் பல் துலக்கும் பழக்கம் உடையவர்கள் நமது முன்னோர்கள் என்பது கூடுதல் தகவல் .
--- தினத்தந்தி , 21 - 03 - 2009 .

Monday, August 10, 2009

' ஒபாமா ஷூ '

நம்மூரில் என்றால் அவமரியாதை என்று கொந்தளித்து விடுவார்கள் . ஆனால் , அமெரிக்காவில் புதிய அதிபர் ஒபாமா முகம் அச்சிடப்பட்ட காலணி அமோகமாக விற்பனையாகி வருகிறது . முதல் கறுப்பின அதிபராக ஒபாமா பொறுப்பேற்ற உற்சாகம் அமெரிக்காவெங்கும் .
அதன் ஓர் அங்கமாக டீ - ஷர்ட்கள் , சாவிக்கொத்துகள் என்று கிடைப்பதில் எல்லாம் ஒபாமாவின் உருவத்தை அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள் .அந்த வகையில்தான் இந்த ' ஒபாமா ஷூ ' .இதில் ஒபாமாவின் உருவத்துடன் , அவரது புகழ்பெற்ற வாக்கியங்களான ' ஆம் , நம்மால் முடியும் ' , ' மாற்றம் தேவை ' பொன்றவையும் இடம் பெற்றுள்ளன . காலணியின் அடிப்பகுதியில் ஒபாமா படம் . மென்மையான பரப்பில் மிதித்தால் ஒபாமா உருவத்தை உருவாக்கும் அச்சு போன்றவை உள்ள காலணிகளும் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன .
--- தினத்தந்தி . 01 - 02 - 2009 .

Sunday, August 9, 2009

பனிக்குடம் .

கர்ப்பமான இரண்டாவது வாரத்தில் பனிக்குடம் உருவாகிறது . அந்த திரவத்தின் பெயர் பனிநீர் என்றழைக்கப்படுகிறது . கருவில் வளரும் குழந்தை பாதுகாப்பாய் அந்த நீரில் மிதந்து கொண்டிருக்கும் . கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் திரவத்தின் அளவு 600 முதல் 1200 மி.லி. பனிநீரின் அளவு குறைவது ஆபத்தானது .
பிரசவத்தின் போது கருப்பையின் வாயையும் , பெண் உறுப்பையும் விரிவாக்குவதும் , குழந்தை பிறக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்வதும் பனிநீரின் பணியாகும் . பனிநீரை பரிசோதனை செய்தே , கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை உணர முடியும் .
நஞ்சு .
கருப்பையில் கரு உருவாகி குழ்ந்தையாக வளர்ந்து .... பிறக்க.... துணை புரிவது , நஞ்சு . இதன் மத்தியில் இருந்து தொப்புள் கொடி ஆரம்பித்து , கருக்குழந்தையின் தொப்புள் வரை நீண்டிருக்கும் .
கருவின் வளர்ச்சிக்குரிய உணவையும் , ஆக்ஸிஜனையும் தாயின் ரத்தத்தில் இருந்து எடுத்து , கருக்குழந்தைக்கு செலுத்துகிறது . கருக் குழந்தையின் உதிரத்தை தொப்புள் கொடி வழியாகப்பெற்று , அதன் கழிவுகளையும் அகற்றுகிறது .
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை நோய் அணுகாமல் பாதுகாப்பதும் , சீதோஷ்ண நிலை தாக்காமல் கவசம்போல் செயல்படுவதும் நஞ்சின் வேலைதான் . குழந்தையின் நுரையீரலாக , உணவுப்பாதையாக , சிறுநீரைப் பிரிக்கும் உறுப்பாக நஞ்சு செயல்படுகிறது . இது கருப்பையின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும் .
--- தினத்தந்தி . 01 - 02 - 2009.

Saturday, August 8, 2009

மடாதிபதிகள் .

ஒரு சமயம் மடாதிபதிகள் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது . கடைமடை என்னும் ஊரிலிருந்து கடைசியாக ஒரு மடாதிபதி வந்தமர்ந்தார் . அதைப் பார்த்த மாநாட்டுத் தலைவரான துறவி ,
" வாருங்கள் கடை மடையரே ! " என்று சிலேடையாக அழைத்தார் . பதிலுக்கு அந்த துறவியும் , " வணக்கம் மடத் தலைவரே !" என்று சொல்லி அமர , மாநாட்டுக்கு வந்த துறவிகள் மத்தியில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று .
--- ஒரு சொற்பொழிவில் இதை சொன்னவர் , கவியரசு கண்ணதாசன்

Friday, August 7, 2009

பஞ்சபூத தலங்கள் .

சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்கள் வருமாறு :
திருவானைக்காவல் ...( நீர் ) .
ஸ்ரீகாளஹஸ்தி...............( வாயு ) .
சிதம்பரம் ...........................( ஆகாயம் ) .
காஞ்சீபுரம் .........................( நிலம் ) .
திருவண்ணாமலை......( நெருப்பு ) .

Thursday, August 6, 2009

நந்திகள் .

5 வகை நந்திகள் .
பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருக்கும் .
இந்திர நந்தி.
வேத நந்தி .
ஆத்ம நந்தி .
மால்விடை நந்தி .
தரும நந்தி . ஆகியவைதான் அவை .
. இவைகளில் , இந்திர நந்தியை கோவிலுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கி அமைக்கின்றனர் .
வேத நந்தி அல்லது பிரதம நந்தியை சுதையாலும் , சுண்ணாம்பாலும் மிகப் பெரிய அளவில் பெரிய மண்டபத்தினுள் அமைக்கின்றனர் .
ஆத்ம நந்தி கொடி மரத்தின் அடியில் அமைகிறது . இதற்கே , பிரதோஷ கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன .
மால்விடை நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணுத்துள் அமைகிறது .
தரும நந்தி இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் .

காவிரி ?

தமிழக வேளாண் மக்களை வாழவைத்து வறுமையை போக்கி , நல்ல விளைச்சலை தந்து , பசியை விரட்ட உதவுவதில் முக்கிய பங்கு காவிரி நதிக்கு உண்டு . காவிரியின் மொத்த நீர்வரத்து 81,155 சதுர கிலோமீட்டர் .தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை 800 கிலோமீட்டர் தூரம் ஓடி வங்கக்கடலில் கலக்கிறது . கர்நாடகாவில் 320 கிலோமீட்டர் தூரம் காவிரி பாய்கிறது .
மேட்டூர் அணை 1934 லும் , கல்லணை அதற்கு முன்னர் பலனூறு ஆண்டுகளுக்கு முன்னரும் கட்டப்பட்டது .

Wednesday, August 5, 2009

மகாமகம் .

மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும் , சூரியன் கும்ப ராசியிலும் வர , கூடவே , பவுர்ணமியும் , மகம் நட்சத்திரமும் , ரிஷப லக்னமும் சேர்ந்து வரும் நன்னாளே மகாமகமாகும் . இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது .
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் , ரிஷப லக்னம் ஒரே நாளில் சேர்ந்து வருவது மாசி மகமாகும் .சிலநேரங்களில் , அந்த நாளில் பவுர்ணமியும் சேர்ந்து வரும் . ,

Tuesday, August 4, 2009

தென்னக துவாரகை .

குருவாயூர் என்று சொன்னதும் அங்கு கோவில் கொண்டுள்ள குருவாயூரப்பன்தான் நம் நினைவுக்கு சட்டென்று வருவார் . இங்குள்ள குருவாயூரப்பன் சிலை குரு பகவான் , வாயு பகவான் ஆகியோரது முயற்சியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் , இந்த தலத்துக்கு குருவாயூர் என பெயர் ஏற்பட்டு , இங்குள்ள நாராயணனும் குருவாயூரப்பன் என்று அழைக்கப்படுகிறார் .
தென்னக துவாரகை என்ற பெயரும் குருவாயூருக்கு உண்டு . சதுர வடிவமான இந்த கோவிலின் கிழக்கிலும் , மேற்கிலும் இரண்டு கோபுரங்கள் உள்ளன . கிழக்கு கோபுரம் வழியே நுழைந்தால் ,' சுற்றம் பலம்' என்று அழைக்கப்படும் வெளிப்பிரகாரத்தை அடையலாம் . அங்கே தங்கத்தால் முலாம் பூசப்பட்ட 100 அடி உயர கொடி மரத்தைக் காண முடிகிறது . இங்கேதான் குருவாயூரின் சிறப்பு இசையான செண்டை மேளங்கள் முழங்கும் . அலங்கரிக்கப்பட்ட யானைகளும் குருவாயூரப்பனை வழிபட இந்த இடத்தில்தான் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் .
குருவாயூரப்பன் தரிசனம் : கோவிலுக்குள் நின்ற கோலத்தில் நாராயணன் , அதாவது குருவாயூரப்பன் காட்சித்தருகிறார் . இடையில் பட்டாடையுடன் , மார்பில் ஆபரணங்கள் சூடி , தலையில் ரத்தினங்கள் பதித்த கிரீடத்தை தாங்கியுள்ளார் . நான்கு திருக்கரங்களில் ' வலது கரங்கள் ஒன்றில் சக்கரமும் , மற்றதில் மலர்ந்த தாமரை மலரும் காணப்படுகின்றன. இடது கரங்களில் ஒன்று சங்கு தரித்திருக்கிறது . மற்றது கதாயுதம் வைத்துள்ளது .
கருவறையின் உட்புறச் சுவர்களில் அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன . அழகிய வேலைபாடுகள் கொண்ட சிற்பங்களும் நம் கண்களை குளிர்விக்கின்றன .
விடியற்காலை 3 மணிக்கே கோவில் நடையை திறந்துவிடுகிறார்கள் . அப்போது , முந்தையநாள் செய்த பூ அலங்காரத்தோடு குருவாயூரப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார் . இந்த முதல் தரிசனத்திற்கு
" நிர்மால்ய தரிசனம் " என்று பெயர் .
அதன்பிறகு , குருவாயூரப்பனுக்கு தைலாபிஷேகம் , சங்காபிஷேகம் போன்ற அபிஷேகங்கள் செய்யப்பட்டு , பாலகோபாலனாக அலங்கரிக்கப்படுகிறார் . உச்சிக்கால பூஜை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது .
மாலை 6 மணிக்கு விரிவான தீபாராதனை நடைபெறும் . அப்போது , தீபங்களின் வெளிச்சத்தில் காட்சிதரும் குருவாயூரப்பனின் அழகை ரசிக்க இந்த இரு கண்கள் போதாது என்று எண்ணத்தோன்றுகிறது .
அமைவிடம் : கேரளாவில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு செல்பவர்கள் திருச்சூர் வரை ரெயிலில் சென்று , அங்கிருந்து குருவாயூருக்கு பஸ்ஸில் செல்லலாம் , முக்கிய ஊர்களில் இருந்து நேரடியாகவும் பஸ் வசதியும் உள்ளது .
பாலக்காட்டில் இருந்து 86 கிலோமீட்டர் தொலைவிலும் , திருச்சூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் குருவாயூர் அமைந்துள்ளது .
துலாபாரம் : குருவாயூர் கோவிலில் துலாபாரம் மிகவும் பிரபலம் . இதற்காக பெரிய தராசு ஒன்று இங்குள்ளது . ஒரு தட்டில் வேண்டுதல் நிறைவேற்றுபவர் அமர்வார் . மற்றொரு தட்டில் அவர் வேண்டிக்கொண்ட காணிக்கை பொருளை எடைக்கு எடை வைப்பார்கள் .பின் , அந்த பொருள் குருவாயூரப்பனுக்கு சமர்ப்பிக்கப்படும் . குழந்தைக்கு முதன் முறையாக சாதம் ஊட்டும் ' அன்னப்பிராசனம் ' என்ற் வைபவமும் இங்கு நடைபெறுகிறது .
--- தினத்தந்தி . 03 - 03 - 2009 .

Monday, August 3, 2009

சேமிக்கிற வழி .

கன்னியாகுமரியில் பிறந்து , கேரளத்தில் தவழ்ந்து , கர்நாடகாவில் தொடர்ந்து , மகாராஷ்டிராவில் வளர்ந்து நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை . இப்படி 4 மாநிலங்களை தழுவி இருக்கும் இம்மலைத் தொடரில் 36 நதிகள் உருவாகின்றன . இதில் உருவாகும் நீரை முழுமையாகப் பயன்படுத்தினால் எந்த ஒரு காலக்கட்டத்திலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம் .அதுமட்டுமல்ல... மூன்று போகம் விவசாயம் செய்து விவசாயிகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து தமிழகத்தையும் வளர்த்து விடுவார்கள் .
ஆனால் , இந்த நதிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரில் 15 சதவீதம் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு , மீதி 85 சதவீ தத்தை அரபிக்கடலிலும் . வங்கக்கடலிலும் வீணாகக் கலக்கவிடுகிறோம் . இயற்கை தரும் வளத்தை தக்க வைத்துக் கொள்ள தெரியாமல் , அதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திக்காமல் இன்னும் எவ்வளவு காலம் தான் தமிழக அரசு தண்ணீரை தேடி அலைந்து கொண்டிருக்கப்போகிறதோ தெரிய வில்லை .
--- மு . சம்பத்குமார் , கரூர் . தினமலர் .31 - 03 - 2009 .

Sunday, August 2, 2009

அலெக்ஸாண்டர்.

மகா சக்ரவர்த்தி அலெக்ஸாண்டர் தன் கடைசிக் காலத்தில் ஆயிரக்கணக்கான வீரர்களை வைத்துக்கொண்டு , " இறந்த பிறகு பெரிய மரப் பெட்டியில் என் உடலை வைத்து மூடி , ஆணி அறைந்து , கல்லறைக்குத் தூக்கிச் செவீர்கள் . அப்போது என் இரண்டு கைகளை மட்டும் மூடாமல் வெளியில் தெரியும்படி வைத்து நீங்கள் தூக்கிச் செல்லவேண்டும் ! " என்று கேட்டுக்கொண்டான் . " அப்படியே செய்கிறோம் ! " என்றார்கள் வீரர்கள் .
அப்போது ஒரு வீரன் , " மன்னிக்கணும் , கையை மட்டும் ஏன் வெளியில் வைக்கச் சொல்றீங்க ? " என்று கேட்டான் .
" நான் இந்த உலகில் எத்தனையோ போர்களை நடத்தினேன் ; எத்தனையோ வெற்றிகளைக் கண்டேன் . புகழையும் , கீர்த்தியையும் , பொன்னையும் , பொருளையும் சம்பாதித்தேன் . கடைசியில் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது , நான் ஒன்றையுமே எடுத்துக்கொண்டு போகவில்லை என்பது இந்த உலகத்திற்குத் தெரியவேண்டும் ! " என்றான் அலெக்ஸாண்டர். .
' முடிசார்ந்த மன்னரும் மற்று முள்ளோரும் முடிவில் பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவார் ...'
--- திருக்குறளார் முனுசாமி . ஆனந்தவிகடன் . 01 - 04 - 2009 .

Saturday, August 1, 2009

புதுத் திருடன் .

கழைக் கூத்தாடி ஒருத்தன் தன் உதவியாளை மேளம் அடிக்கச் சொல்லிவிட்டு ஒரே தடவையில் 20 அடி 25 அடி என்று தாண்டிக் கொண்டிருந்தான் . இதைக் கவனித்த திருடன் ஒருவன் ' இவனைப் பயன்படுத்தி நாம் இன்னும் அதிகக் கொள்ளை அடிக்கலாமே ' என்று கருதி , அந்த கழைக் கூத்தாடியைக் கூப்பிட்டு , ' நாள் முழுதும் கஷ்டப்பட்டு நாலோ ஐந்தோ சம்பாதிக்கிறாயே , என்னோடு வந்து நான் சொல்வதைக் கேள் . உனக்குத் தினமும் நூறு ரூபாய் தருகிறேன் ' என்றான் . கழைக் கூத்தாடியும் சம்மதித்தான் .
அன்று நள்ளிரவு , திருடன் கழைக் கூத்தாடியை ஒரு பெரிய வீட்டுக்கு முன் அழைத்துச் சென்றான் . உயரமான சுவர் . ' இப்பொழுது நீ இந்தச் சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே போய்த் தாழ்ப்பாளைத் திறந்து விடு . பிறகு நான் கவனித்துக் கொள்கிறேன் ' என்றான் .
உடனே கழைக் கூத்தாடி , " இதைவிட , உயரமான சுவரைக் கூடத் தாண்டி விடுவேன் . ஆனால் ஒன்று . காலையில் என் ஆள் மேளம் கொட்டியது போல இப்பொழுது யாராவது கொட்டினால்தான் எனக்குத் தாண்ட வரும் ; இல்லாவிட்டால் முடியாது " என்றானாம் . திருடன் முகத்தைப் பார்க்க வேண்டுமே ! .