Tuesday, September 8, 2015

பாரம்பரியம்

பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மறந்ததால் பலவித நோய்களுக்கு ஆளாகிறோம்.
     பெரும்பாலான  நோய்களுக்கு உணவு, சுற்றுச்சூழல்,வாழ்வியல் ஆகியவை முக்கியக் காரணம்.  உணவுப் பழக்கம் நல்லவிதமாக இருந்தால் பல நோய்கள் நம்மை அண்டவிடாமல் செய்யலாம். காலை உணவு மிக முக்கியம்.  அதை தவிர்க்கவே கூடாது.  ஆனால், நாம் காலை உணவாக நூடுல்ஸ், ப்ளேக்ஸ் ஆகியவற்றை சில நொடிகளில் செய்து கொடுத்து வேலையை முடித்து விடுகிறோம்.  இந்த உணவுகள் கெடுதலை விளைவிக்கக் கூடியவை.
     மோனோசோடியம்குளூட்டமேட் எனப்படும் சீன உப்பு ரெடிமேட் உணவுகளில் சேர்க்கப்படுகிறது.  இதில் உள்ள ரசாயனம் நரம்பு நோய், மூளை பாதிப்பு, அறிவாற்றல் மந்தம் ஆகியவற்றை உண்டாக்குகிறது.  இதனால் உலகில் 60 நாடுகள் இந்த சீன உப்பை தடை செய்து விட்டன.  ஆனால், நம் நாட்டில் அது தங்குதடையின்றிக் கிடைக்கிறது.
     தெரிந்தோ தெரியாமலோ நாம் உட்கொள்ளும் மஞ்சள்தான் நம்மை பலவிதமான நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது.  தேங்காய் எண்ணெய் மற்ற எண்ணெய்களைவிட நல்லது.  அதிலிருக்கும் லாரிக் அமிலம் இதய நோய்க்கான மருந்து.  மற்ற ரீபைண்ட் ஆயிலில் உள்ள எக்சிம் கல்லீரலைப் பாதிக்கும் தன்மைக் கொண்டது.
     ஒரு காரட்டில் உள்ளதைப் போல் 2700 மடங்கு அதிகம் பீட்டாகரோட்டின் முருங்கைக் கீரையில் இருக்கிறது.  சர்க்கரையைக் காரணம் காட்டி கனி வகைகளை நாம் ஒதுக்கிவிட்டோம்.  உள்ளூரில் கிடைக்கும் அனைத்துக் கனி வகைகளும் மிகவும் நல்லது.  அயல் நாட்டு கனி வகைகள் பல நாள் கழித்து நமது கைக்கு வருவதால் அதில் சத்துக் குறைவாகவே இருக்கும்.  மேலும், கெட்டுப்போகாமலிருப்பதற்காக அந்தக் கனிகள் மீது பூசப்படும் மெழுகு மிகவும் கெடுதலானது.
     வாரத்திற்கு மூன்று, நான்கு நாட்கள் சிறு தானியங்களை உணவாக உட்கொள்ளுங்கள்.  உளுந்து, கம்பு, கேழ்வரகு களி, கஞ்சி வடிவிலும், சோள தோசை என செய்து சாப்பிடுங்கள்.  கடலை மிட்டாய் அதிக சத்து நிறைந்த ஒரு திண்பண்டம்.  அதிரசம், முறுக்கு ஆகியவற்றையும் சத்தான திண்பண்டங்கள்தான்.  உள்ளூரில் விளையும் நெல்லிக் கனி, வாழைப்பழம், கொய்யாப்பழம், பன்னீர்திராட்சை, கமலா ஆரஞ்சு ஆகியவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளுங்கள்.  பெரும்பாலும் உங்களை நோய் அண்டாது.
-- கு.சிவராமன். இயற்கை மருத்துவர்.
--   ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 23, 2013.

No comments: