Sunday, March 7, 2010

சாதி பேதம் !

" சாதிபேதம் இல்லை அகப்பேய் !
தான்ஆக நின்றவர் "க்கு என்பார் அகப்பேய் சித்தர் .
" தொல்லுலகில் நால்சாதி அனேகம்சாதி
தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே ! " என்று , சாதிகள் தொற்றுவிக்கப்பட்டதன் சூட்சுமத்தைச் சொல்லித் தந்தார் வால்மீகச் சித்தர் .
" பறைச்சியாவது ஏதடா ? பனத்தியாவது ஏதடா ?
இறைச்சிதோல் எலும்பிலும் , இலக்கம்இட்டு இருக்குதோ ?
பறைச்சிபோகம் வேறதோ ? பனத்திபோகம் வேறதோ ? " என்ற கேள்விகளை அடுக்கி , சாதிய மூலவர்கள் மீது வெறுப்பைக் கொட்டினார் சிவவாக்கியர் . ( பனத்தி -- பாப்பனத்தி ) .
" சாதிப் பிரிவினில் தீமூட்டுவோம் !
சந்தை வெளியினில் கோல்நாட்டுவோம் ! " என்று சபதம் செய்தார் பாம்பாட்டிச் சித்தர் .
' மானும் , பன்றியும் சேர்ந்தால் கரு உண்டாகாது . ஏனெனில் , அவை வேறுவேறு இனம் . வேதியர் குலத்து ஆணும் , ' சூத்திரப் ' பெண்ணும் சேர்ந்தால் கரு உண்டாகும் . அவர்கள் ஒரே இனம் . இயற்கை நியதி இப்படி இருக்க , சாதியின் பெயரால் தீண்டாமை எதற்காக ? ' என்று தேவாரம் பாடிய சுந்தரரைப் பார்த்து ஒரு கோபக் குரல் , ' ஞானவெட்டியான் ' நூலில் ஒலித்தது .
--- சித்தர்களின் வைதீக மறுப்பு , என்ற கட்டுரையில் நந்தா . குமுதம் தீராநதி , செப்டம்பர் . 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன்

No comments: