Wednesday, December 14, 2016

'காஸ் சிலிண்டர்'

'காஸ் சிலிண்டர்' எப்போது வெடிக்கும்!
     'காஸ் சிலிண்டர்' எனும் சமையல் எரிவாயு உருளைக்குள் அடைக்கப்பட்டிருக்கும், 'புரோப்பேன், பூட்டேன்' ஆகியவை, திரவ வடிவில் தான் இருக்கும்.  ஆனால், அது அடுப்புக்கு, வாயு வடிவில் வருகிறது.  சிலிண்டரில் இருந்து, 'காஸ் லீக்'  ஆகும்போது, அதை எளிதில் உணர, 'எத்தில் மெர்கேப்டன்' என்ற ரசாயனம் சேர்க்கப்பட்டு இருக்கும்.
     இந்த ரசாயனம் தான் 'காஸ் லீக்' ஆவதை, வாசனை மூலம் எச்சரிக்கை செய்யும்.  எனவே, இவ்வாசனையை உனர்ந்ததும், உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும்.  இல்லையென்றால், சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம், காற்றைவிட கனமானது என்பதால், புகையை போல் மேலே பரவாமல், தரையில் பரவி விடும்.
     அப்படி கீழே தங்கியிருக்கும் காஸ் மீது, சிறிய தீப்பொறி பட்டாலும், பெரிய அளவில் தீப்பற்றி எரிய ஆரம்பிக்கும்.  இப்படி, சிலிண்டரை சுற்றி தீ தொடர்ந்து எரிவதால், சிலிண்டரின் உட்புறம் உள்ள திரவ நிலை எரிவாயு, அதிக அழுத்தம் அடைந்து, சிலிண்டரின், 'டெஸ்ட் பிரஷர்' எனும், அதிகபட்ச அழுத்தத்தை அடைந்து வெடிக்கிறது.
     காஸ் கசிவு ஏற்பட்டவுடன், தீ விபத்தை தடுக்க, சிலிண்டரின் மீதுள்ள, 'ரெகுலேட்டரை'  கழற்றி விட்டு, சிலிண்டரின் மேல் பகுதியில் சிறு கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் வெள்ளை நிற பிளாஸ்டிக் மூடியை, சிலிண்டரின் வால்வின் மீது பொருத்தி, விபத்தை தடுக்கலாம்.
     பெரும்பாலான வீடுகளில் இரவு சமையல் முடிந்து ரெகுலேட்டரை, 'ஆப்' செய்யாமல் தூங்கிவிடுவதால் தான், 70 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன.  நைந்த, 'ரப்பர் டியூப்' பயன்படுத்துவதும் மற்றொரு காரணம்.  எனவே, தரம் குறைந்த பச்சை நிற ரப்பர் டியூப் பொருத்தியிருந்தால், ஆரஞ்சு நிற ரப்பர் டியூபை, வினியோகிப்பாளரிடம் பெற்று, அவர்களின் மெக்கானிக்கால் சரியானபடி பொருத்தித் தரச் சொல்லுங்கள்.  மேலும், தினமும் வேலை முடிந்ததும், அடுப்பை துடைப்பது தான் நல்லது.
--சாமிவேலு, அனைந்திந்திய பாரத் காஸ் வினியோகஸ்தர்கள் சங்க துணை தலைவர். சென்னை.
-- செகண்ட் பிரன்ட் பேஜ்.
-- தினமலர்  சென்னை  ஞாயிறு 8-6-2014. 

No comments: