Wednesday, February 8, 2017

பிணந்தின்னிக் கழுகுகள்

  தமிழகத்திலுள்ள  திருக்கழுக்குன்றத்தில்  கழுகுகள்  தினசரி  உணவுக்கு  வருவதை, அந்த  ஊரில்  வாழும்  மக்கள்  கதைகதையாய்ச்  சொல்வார்கள்.  கோயில்  நிர்வாகம்  கழுகுகளுக்கு  உனவளிப்பதற்காகவே  தனி  மானியம்  வழங்கிவந்தது.  பல்வேறு  அச்சுறுத்தல்களால்  1994-ம்  ஆண்டிலிருந்து  அங்குக்  கழுகுகள்  வருவதில்லை.  கோவில்  கோபுரத்தில்  கழுகுகள்  வரும்  வழியில்  கூடு  போன்ற  அமைப்பை  1994-ம்  ஆண்டு  நடந்த  குடமுழுக்கின்போது  அடைத்துவிட்டதே,  கழுகுகள்  வராததற்குக்  காரணம்  என்று  பலரும்  சொன்னாலும்  சூழலியல்  காரணங்களை  யாரும்  முன்னிறுத்துவதில்லை.  கோவில்  தூணில்  கழுகுக்கு  உணவளிப்பதைப்  போன்ற  சிற்பம்  மட்டுமே  அங்கு  எஞ்சி  உள்ளது.
     காடுகளிலுள்ள  கழுகுகளைப்  பற்றி  நாம்  பேசுகிறோம்.  காட்டைத்  துப்புரவு  செய்து  தூய்மையாக  வைத்திருக்கும்  உயிரினம்தான்  கழுகுகள்.  நமது  வீடுகளில்  ஒரு  சுண்டெலி  சந்து,  பொந்துகளில்  சிக்கி  இறந்து  போனால்  வீடெங்கும்  வீசும்  கெட்ட  வாடையைப்  பொறுத்துக்கொள்ள  முடியாமல்  அதைத்  தேடி  எடுத்துத்  தூக்கி  எறிந்து,  வீட்டைச்  சுத்தப்படுத்திய  பிறகுதானே  நிம்மதியடைகிறோம்.
      ஆட்கள்  நுழைய  முடியாத  ஒரு  அடர்ந்த  காட்டில்  யானை  இறந்து  போனால்  அதைச்  சுத்தப்படுத்துவது  யார்?  கழுகுகள்தான்!  காட்டில்  கழுகுகள்  அற்றுப்போனால்  யானையின்  உடல்  மக்கி  மறைய  வெகு  நாட்கள்  ஆகும்.  அதன்  உடலில்  இருந்து  வெளியேறும்  நோய்க்  கிருமிகள்  காட்டில்  வாழும்  மற்ற  உயிரிங்களுக்கும்  தொற்றும்.  காட்டுக்குள்  மேய்ந்து  வரும்  நமது  கால்நடை களையும்  பாதிக்கும்.
     கழுகுகள்  வாழும்  பகுதியைச்  சுற்றிலும்  100  கி.மீ. சுற்றளவுக்கு  டைகுளோஃபிளாக்  மருந்தின்  பயன்பாடு  அறவே  கூடாது  எனச்  சுற்றுச்சூழல்  அமைச்சகம்  நெறிமுறை  வகுத்துள்ளது.
-- கோவை  சதாசிவம்.  (  உயிர் பாதுகாப்பு )  உயிர் மூச்சு.
--   'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய்.,ஜனவரி 21, 2014.  

No comments: