Saturday, November 7, 2009

மைக்கேல் ஜாக்சன் .

" Gone too soon " ( சீக்கிரமே மறைந்து விட்டாய் ) என்பது மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று . எய்ட்ஸ் நோய் பாதித்திருந்த ஒரு சிறுவன் பதினோரு வயதிலேயே இறந்து போன போது ஜாக்ஸன் அவன் நினைவாக அந்தப் பாடலைப் பாடினார் . உள்ளத்தை உருக்கும் குரலில் அந்தப் பாடலின் இசையும் , பாடல் வரிகளும் , வீடியோவும் , எய்ட்ஸ் நோயைப் பற்றிய செய்திகளை அழுத்தமாக உலகத்துக்கு எடுத்துச் சொன்னது .
மைக்கேல் ஜாக்ஸ்னின் பெரும்பாலான பாடல்கள் இப்படிச் சமூக அக்கரையுடன் எழுதப்பட்டவையே . பலப் பாடல்களை அவரே எழுதினார் . நிறவெறி , யுத்த வெறிக்கான எதிர்ப்பு , உலக அமைதிக்கான கோரிக்கைகள் , கறுப்பின மக்களின் துயர்கள் , காடுகளை அழிப்பதை எதிர்ப்பது போன்றவை மட்டுமல்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புக்கள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது .
உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் ( சுமார் 39 நிறுவனங்கள் ) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது .
உலக இசை சரித்திரத்தில் மைக்கேல் ஜாக்ஸனைப் பொல் மக்களிடையே பிரபலமானவர் வேறு யாரும் இல்லை . பீட்டில்ஸ் இசைக்குழு ( ' நாங்கள் ஏசுநாதரை விடப் புகழ் பெற்றவர்கள் ' என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியவர்கள் ) , எல்விஸ் பிரஸ்லி போன்றவர்களும் கோடிக்கணக்கான வெறி கொண்ட ரசிகர்களைக் கொண்டிருந்தாலும் யாருமே தங்கள் வாழ்நாளில் ஜாக்ஸன் அலவுக்கு 750 மில்லியன் இசைத் தொகுதிகளை விற்றதில்லை .
' இசை என்பது கேட்பதற்கு மட்டும் இல்லை , பார்ப்பதற்கும்தான் ' என்கிற மோடவுன் வீடியோ கலாச்சாரத்தை உருவாக்கியவர் ஜாக்ஸன் .
கிறிஸ்டல் கையுறைகள் , தங்கம் மின்னும் உடைகள் , ' மூன்வாக் ' என்று சொல்லப்பட்ட பிரத்யேக அலை நடை கொண்ட நடனம் , வெளிறிய நிறம் , கருகிய தலைமுடி , வசீகரப் புன்னகை , கூலிங்கிளாஸ் , தொப்பி , சைக்கடலிக் வண்ணவிளக்குகள் புகைந்த பிரும்மாண்ட செட் இவைகளுடன் அவர் மேடைகளிலும் , வீடியோக்களிலும் காண்பித்த பொழுதுபோக்கு இசை , நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களைப் பைத்தியமாகவே ஆக்கின .
தன் 45 வருட இசைத் தொழிலில் 2500 கோடி ரூபாய் டாலர்கள் சம்பாதித்த பாப் இசையின் அரசன் ஐம்பது வயதில் அகால மரணமடைந்தது ஏன் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் தாங்க முடியாத கேள்வி .
ஜாக்ஸனின் சிறு வயதுப் பருவம் துயரத்துடன் கழிந்தது . இந்தியானா மாநிலத்தில் ஒரு புறநகர் தொழிற்பேட்டைப் பகுதியில் பிறந்தார் மைக்கேல் ஜோசப் ஜாக்ஸன் . தந்தை ஒரு மில் தொழிலாளி . அவரைப் போன்ற அராஜகத் தந்தையைப் பார்க்க முடியாது . தன்னுடைய ஐந்து ஆண் குழந்தைகளையும் அவர் பாடாய்ப் படுத்துவார் . ஒரு காலைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்கி மைக்கேலை அலற அலற அடிப்பார் .
ஓப்ரா வின்ஃப்ரே டெலிவிஷன் ஷோவில் அவர் சில விஷயங்களை ஒப்புக்கொண்டார் . சின்ன வயதில் அப்பா கொடுமைப்படுத்தியதைப் பற்றிச் சொன்னபோது வாய்விட்டு அழுதார் . விட்டிலிகோ என்கிற தோல் நோய் இருப்பதை ஒப்புக்கொண்டார் . ஒரு விபத்தின்போது உடைந்த மூக்கு நுனி அடுத்தடுத்த ஆபரேஷன்களில் இன்னும் மோசமானதாக அதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் . ஆனால் , சிறுவர்களை முறைகேடாகப் பயன்படுத்டியதே இல்லை என்றும் அழுத்தமாகச் சொன்னார் .
' ஐ வில் பீ தேர் ' என்பது அவருடைய மற்றொரு ஹிட் பாடல் . அது உண்மைதான் . ஜாக்ஸன் எப்போதும் இருப்பார் , தன்னுடைய அழியாத பாடல்களின் மூலம் .
* முழு உலகமே பாப் இசையின் முதல் பெரும் நட்சத்திரமாக மதித்துப் போற்றும் மைக்கேல் ஜாக்சன் வெறும் 60 பாடல்கள்தான் பாடியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா ?
அவரது முதல் இசைத் தொகுப்பு இரண்டு கோடிப் பிரதிகள் விற்றிருக்கின்றன . அவரது ' த்ரில்லர் ' தான் இன்று வரை உலகில் மிக அதிகமாக விற்ற இசைத் தொகுப்பு . தன் 50 வயதிலேயே , அவரே ஒரு பாடலில் சொல்லிக் கொள்வது போல , ' மாலை வானத்தில் எரிந்து செல்லும் தாரகை போல விரைவாக மின்னி மறைந்தார் !'.
---- கிருஷ்ணா டாவின்ஸி , குமுதம் . 08 - 07 - 2009 .
---- ஷாஜி , தமிழில் : ஜெயமோகன் . ஆனந்தவிகடன் , 08 - 07 - 2009 .

No comments: