Sunday, August 30, 2015

ஆந்தைகள் !

  எல்லா ஆந்தைகளுமே இரவில் நடமாடும் வேட்டையாடிகள்.  மற்ற பறவைகளைப் போலல்லாமல் ஆந்தையின் இரு கண்களும் மனிதர்களின் கண்கலைப்போல முன்புறம் நோக்கி அமைந்திருக்கின்றன.  ஆந்தையால் தன் தலையை முழுவதுமாகப் பின்புறம் திருப்பமுடியும். சக்தி வாய்ந்த செவிகளின் மூலம், ஒலி வரும் தூரத்தை வைத்தே இரை இருக்கும் இடத்தைத் துல்லியமாக கணிக்க இப்பறவையால் முடியும்.  குறைந்த வெளிச்சத்திலும் பார்க்கக்கூடிய பார்வைத் திறன், மெல்லிய இறகுகள் புசுபுசுவென்று நிறைந்திருப்பதால் ஓசையின்றிப் பறக்கக்கூடிய ஆற்றல், கூரிய, வலிமையான நகங்கள், வளைந்த கூர்மையான அலகு ஆகியவற்றைக் கொண்டு ஆந்தைகள் திறமைமிக்க இரைகொல்லிகளாக இயங்குகின்றன.
     நம் நாட்டில் உணவு தானியங்களைச் சேதம் செய்வதில் முதலிடம் வகிக்கும் எலிகளைக் கொன்று இந்த ஆந்தைகள் விவசாயிகளுக்குப் பெரும் உதவி செய்கின்றன. உலகின் பல இடங்களில் தோட்டங்களில் வெண்ணாந்தைகளை ஈர்க்கச் சிறிய மரப்பெட்டிகளை மரத்தில் கட்டி விடுகிறார்கள்.  இனப்பெருக்கக் காலத்தில் ஓர் ஆந்தை ஒரே இரவில் ஐந்தாறு எலிகளைக் கொன்றுவிடும்.
     செல்வத்தின் கடவுளான லட்சுமியின் வாகனம் என்றாலும்கூட , ஆந்தை என்றதுமே அச்சமும் அருவருப்புமே மக்கள் மனதில் உருவாகிறது. நாட்டு மருத்துவதுக்காகவும் ஆந்தைகள் கொல்லப்படுகின்றன.  ஆந்தைக் கூடுகளைக் கண்டுபிடித்து குஞ்சுகளைப் பிரித்துவிடுகிறார்கள்.  அல்லது கீழே தரையில் கிடக்கும் எச்சத்தின் மூலம் ஆந்தை அடிக்கடி வந்தமரும் கிளையை அறிந்து, அதில் ஃபெவிகால் போன்ற பசைகளைத் தடவி இவற்றை எளிதாகப் பிடித்துவிடுகிறார்கள்.  அதிகமாகப் பிடிபடுபவை புள்ளி ஆந்தைகளும் வெண்ணாந்தைகளும்தான்.  ஆனால் அதிக விலைக்குப் போவது உருவில் பெரிய கோட்டான்.  ரூபாய் ஐந்தாயிரம்வரை போகிறது என்கின்றனர் வனத்துறையினர். வீட்டில் குடியிருப்பவரை காலி செய்யக் கால்கள், தேர்தலில் வெற்றி பெறத் தலை, எதிர்காலத்தைக் கணிக்க ஈரல், வேகமாகப் பயணிக்க எலும்புகள் என ஆந்தையின் ஒவ்வொரு உடற்பாகமும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.
-- தியடோர் பாஸ்கரன்.  உயிர் மூச்சு.
--  ' தி இந்து ' நாளிதழ்.செவ்வாய், டிசம்பர் 17, 2013. 

No comments: