Sunday, May 24, 2009

ஒரு மனிதன் .

ஒரு மனிதன் தன்னைத்தானே எப்படி மதிக்கிறான் ( உள்ளுறவு ), பிறருடன் எப்படிப் பழகுகிறான் ( உலக உறவு ) என்பதை வைத்துத்தான் அவனை ஊரும் உலகமும் எடை போடுகிறது !
அமெரிக்காவில் நீங்கள் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தீர்களானால் , இந்தியா போல யாரும் அங்கு பாட சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு உங்கள் அறிவை மீண்டும் சோதிப்பதில்லை . நிறுவனதிலுள்ள முக்கியமானவர்களை பேட்டி காணச்செய்கிறார்கள் . அதன் மூலம் , பிறருடன் அவரால் எளிதாகப் பழக முடியுமா , அங்கிருக்கும் எல்லோருடனும் அவரால் ஒத்துப்போக முடியுமா என்று பார்க்கிறார்கள் .
' என்னைப் பாராட்டும் ஒருவனை , உலகின் இரண்டாவது பெரிய மனிதனாக நான் நினைக்கிறேன் !' என்றொரு வாசகம் உண்டு . இனிமையாகப் பழகும் ஒருவனிடம் எல்லோரும் இனிமையாகப் பழகத் துவங்குகிறார்கள் . ஹாஸ்யமாகப் பேசும் ஒருவனுடன் இருப்பதை எல்லோரும் விரும்பி வரவேற்கிறார்கள் . பிறருக்கு உதவும் ஒரு மனிதனுக்கு உலகமே உதவ முன் வருகிறது .
அறிவு , திறமை , கற்பனை , துணிச்சல் , முடிவெடுக்கும் திறன் , வியூகம் என்ற இவற்றுடன் வாழ்வின் வெற்றிக்குத் தேவையான மிக முக்கிய குணம் ' பழகும் தன்மை 'தான் .
அதிகாரத்தின் முன்னிலையிலோ , செல்வாக்கின் முன்னிலையிலோ , பணத்தின் பின்புலத்திலோ , ஒரு தலைவனின் செல்வாக்கு நிழலிலோ நீங்கள் ஒரு பதவியைப் பெறக்கூடும் . ஆனால் , பிறருடன் உங்களால் அனுசரித்துப்போக முடியவில்லை என்றால் , உங்கள் பதவி நிலைக்காது . அரசியல் உலகில் இத்தகைய ஆர்ப்பாட்டக்காரர்களின் பதவி ஆட்டம் காண்பதையும் , பிறகு அவர்கள் பிறர் காலில் விழுவதையும் அன்றாடக் காட்சியாகக் காண்கிறோமே !
--- டாக்டர் எம் . எஸ் . உதயமூர்த்தி

No comments: