Saturday, December 31, 2011

அரசுப் பள்ளி பாழல்ல....

அரசுப் பள்ளி பாழல்ல....அன்னைத் தமிழும் பாழல்ல !
மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி
முழுதாய்க் கற்றது கோவையில் தான
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
அகிலம் பார்த்து மெச்சியது
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்
நானிலமெல்லாம் அதைச் சொன்னேன்
அந்தோ இன்று எனதூரில்
அங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனைப் பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகி செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன் .
ஏழ்மை என்பது பணத்தாலா ?
அறியா மனதின் நிலையாலா ?
அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்
இதை
அனைவரும் உணரும் வகையாக
விகடன் வழியாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்
இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம் !
--- கவிதை : மயில்சாமி அண்ணாதுரை ,
--- ஆனந்த விகடன் , 8 . 6 . 2011 .

No comments: