Tuesday, December 1, 2015

பெருமாளின் வாள்

 தொண்டைமண்டலத்தில் உள்ள சென்னப் பட்டினமான இன்றைய சென்னை நகரில் பிரபலமான திருமயிலையில் கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர் பேயாழ்வார்.  ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் கூடிய நாளில் பிறந்த இவர் திருமாலின் நந்தகம் என்னும் வாள் அம்சமாகப் பிறந்தவர்.
   பேயாழ்வார், நாலாயிரத் திவ்வியயப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் நூறு வெண்பாக்களை கொண்டுள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்.
   பேயாழ்வார், பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருக்கு சமகாலத்தவர்.  இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிகுந்த வகையில் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே இறையுணர்வுடன் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.
    அப்போது இறைவனுடன் ஏற்பட்ட ஆனந்தம் உள்ளடங்காமல் செய்யுள் வடிவமாக வெளிவரலாயிற்று.  அச்செய்யுள் தொகுதி முறையே பொய்கையாழ்வாருடைய முதல் திருவந்தாதி, பூதத்தாழ்வாருடையது இரண்டாம் திருவந்தாதி, பேயாழ்வாருடையது மூன்றாம் திருவந்தாதி எனப் பெயர் பெற்றன.
    இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டும் ஒன்றே என்ற ஒற்றுமை காண விழைந்தவர் பேயாழ்வார் என்றும் கருதப்படுகிறது.
    இவர் திருமாலிடம் ஆழ்ந்த அன்புடையவர்.  இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் மற்றவர்களிடமிருந்து இவரைத் தனித்துக் காட்டின.  தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர்போல, கண்கள் சுழலும்படி விழுந்தார், எழுந்தார், தொழுதார், குதித்து ஆடினார், பாடினார், பெருமானை விண்ணுலகத்தில் விட்டுவிட்டு, தான் மட்டும் பூலோகத்தில் இருந்ததால் ஏற்பட்ட பிரிவாற்றாமை தாளாமல் அலறினார்.  இதனால் இவரைப் பேயாழ்வார் என்று குறிப்பிட்டு பக்தர்கள் கொண்டாடினர்.
     பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள திருக்கோயில்கள் வேளுக்கை, திருக்கடிகை, திருவல்லிக்கேணி, திருவிண்ணகரம், திருக்கோஷ்டியூர், திருப்பாடகம், திருவெக்கா,திருமாவிலஞ்சோலை, கும்பகோணம் மற்றும் திருவேங்கடகம்.
     திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில் ஏந்தியுள்ள சக்கரத்தைக் காலைக் கதிரவன் என்று கருதி மலர்கிறதாம்.  அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறதாம் என்று பாடியதை அவரது கற்பனை சக்திக்கு உதாரணமாகக் கூறலாம்.
-- ராஜேஸ்வரி ஐயர்.  ஆழ்வார்கள். ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 13,2014.

No comments: