Saturday, June 17, 2017

வெளிநாட்டுக் கோயில்கள்

மலேஷியா  பத்துமலை  முருகன்  கோயில்!
     உலகிலேயே  மிக  உயரமான  முருகன்  சிலை ( 140  அடி )  மலேஷியாவின்  தலைநகர்  கோலாலம்பூரிலிருந்து  13 கி.மீ தூரத்தில்  பத்துமலை  என்ற  இடத்தில்  உள்ளது.
     திருவாரூரைச்   சேர்ந்த  சிற்பி  தியாகராசன்  மற்றும்  14  உதவியாளர்களுடன்  3  ஆண்டு  கடின  உழைப்பில்  உருவானது  இந்த  முருகன்  சிலை.  மலேஷியாவின்  கின்னஸ்  புத்தகத்தில்  இச்சிலைப்  பற்றிய  விவரங்கள்  இடம்பெற்றுள்ளன.
     29-1-2006ம்  ஆண்டு  சிலை  திறப்பு  நடைபெற்றது.  தரையில்  இருந்து  400  அடி  உயரத்தில்  குகையில்  அமைந்திருக்கும்  முருகனை  தரிசிக்க  272  படிக்கட்டுகள்  ஏறிச்  செல்ல  வேண்டும்.  குகையில்  வேலாயுதம்  கோயிலும்  அலுவலகமும்  உள்ளது.
கோயில்  வரலாறு :
     தமிழகத்தில்  திருமலைராயன்  பட்டினம்  ஊரைச்  சேர்ந்த  தம்புசாமி  பிள்ளை,  கந்தப்பத்தேவர்  துணையுடன்  குகைக்  கோயிலில்  முதலில்  வேல்  மட்டும்  நட்டு  வணங்க  தொடங்கினார்கள்.
     மலைமேல்  தமிழ்க்கடவுள்  முருகனின்  வேல்  இருப்பதை  அறிந்த  பக்தர்கள்  கஷ்டப்பட்டு  மலையேறி  'வேல்'  வழிபாடு  செய்து  மகிழ்ந்தனர்.  அப்போது  அவ்வேலை  அகற்ற  கோலாலம்பூர்  ஆட்சியர்  ஜோஸ்துரை  முனைந்தார்.  அதை  பக்தர்கள்  எதிர்த்தனர்.  எனவே  வழக்குப்  பதிவு  செய்யப்பட ,  இறுதியில்,  முருகபக்தர்களுக்கு  ஆதரவாக  தீர்ப்பு  வந்தது.
     அதன்பின்  1891ம்  ஆண்டு  திராவிடக்  கட்டடக்  கலையின்  அமைப்பில்  கோயில்  கட்டப்பட்டது.  1892ம்  ஆண்டில்  இருந்து  தை  பூச  விழா  இங்கு  கொண்டாடப்பட்டு  வருகிறது.
     1920ம்  ஆண்டு  மலைமேல்  செல்லவும்,  கீழே  இறங்கவும்  படிக்கட்டுகள்  அமைக்கப்பட்டன.  1939ல்  அதனருகிலேயே  இன்னொரு  படிக்கட்டு  வரிசையும்,  1975ல்  மூன்றாவது  படிக்கட்டுகளும்  கட்டப்பட்டன.  பின்னர்  கோயிலுக்கு  வெள்ளி  ரதம்  உருவானது.
     பத்துமலை  அடிவாரத்தில்  50  அடி  அனுமன்  சிலை,  விநாயகர்  கோயில்,  வள்ளி,  தெய்வானையுடன்  கூடிய  சுப்ரமண்யர்  கோயில்  உண்டு.  அங்குள்ள  கலைக்கூடத்தில்  1330  திருக்குறள்  மற்றும்  அவ்வையார்,  திருவள்ளுவர்,  வள்ளலார்,  காந்தி,  நாயன்மார்கள்,  ராமாயண  சிற்பங்கள்  இருக்கின்றன.
     பத்துமலை  முருகனுக்கு  இந்துக்கள்  மட்டுமல்ல,  சீனர்களும்  மற்ற  மதத்தவரும்  ஈடுபாடுகொண்டு  விரதம்  இருந்து  நேர்த்திக்கடன்  செலுத்துகின்றனர்.
-- ந.சண்முகம்,  திருவண்ணாமலை.
-- தினமலர்  பக்திமலர்.  11-12-2014.      

No comments: