Saturday, June 20, 2009

மாவிலை !

மகத்துவம் நிறைந்த மாவிலை !
கோயில் சம்பந்தப்பட்ட எந்த விழாவை எடுத்துக் கொண்டாலும் சில பொருள்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் . மஞ்சள் , குங்குமம் , விபூதி , மஞ்சள் தூள் கலந்த அரிசி ( அட்சதை ), தர்ப்பைப் புல் , மாவிலை போன்றவை எல்லா சுபகாரியங்களிலும் பயன்படுத்தப்படும் பொருட்கள் .
பந்தலிலும் முகப்பிலும் குருத்தோலைத் தோரணங்கள் இடம் பெறும் . வீட்டின் முகப்பில் மாவிலைத் தோரணம் கட்டாயம் இருக்கும் . இதைக்கட்ட நேரமில்லாவிட்டாலும் , ஒரு கொத்து இலையாவது
சொருகி வைப்பர் .
பூஜைகள் செய்யும்போது கலச ஸ்தாபனத்துக்கு கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் மாவிலைகள் இட்டு அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள் . பூஜை முடிந்த பின் மாவிலை நுனியால் கலசத்தில் உள்ள புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர் . இப்படி விழாக்களில் முதன்மை இடம் பெறுவது மாவிலை . இதற்கு சமய ரீதியான காரணம் உண்டு . மாவிலையின் நுனியில் லட்சுமி தேவி வசிக்கிறாள் . அதனால்தான் அதிகம் முற்றாததும் , நுனி உள்ளதுமான இலையை உபயோகிப்பர் .
மாவிலைக்கு இன்னொரு சக்தியும் உண்டு . மரம் , செடி , கொடிகள் காற்றில் கலந்து கிடக்கும் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகின்றன . மனிதன் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறான் . மாசுபடும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவன மரம் , செடி , கொடிகள் மரத்திலிருந்து வெட்டப்பட்டபின்னரும் கூட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியை மாவிலைத் தோரணம் செய்து வருகிறது என்கிறார்கள் . அலங்காரத்துக்கு மட்டுமல்ல ; ஆரோக்கியத்துக்கும் உதவும் மாவிலையை பயன்படுத்துவதே நல்லது .
--- தினமலர் . பக்திமலர் . மார்ச் 12 . 2009 .

No comments: