Wednesday, April 8, 2009

அதிசயம்.

புதிய அதிசயம்.
ஒரு புலவர் துரைரங்கன் என்ற மன்னனிடம் சென்றார் . துரைரங்கன் என்பவர் குறுனில மன்னர் . சிறந்த ரசிகர் . அறிஞர் .ஜோதிடக் கலையிலும் வல்லவர் . புலவர் , புரவலனைப் பார்த்து , " மன்னவரே ! ஒரு புதுமை சொல்லுகிறேன் கேள் . ஒரு பெண்ணுக்கு நான்கு புருவம் , ஐந்து கம்மல் , ஆறு தனம் , ஏழு கண் ," என்று ஒரு பாடலைப் பகர்ந்தார் .
" துங்கவரை மார்ப ! துரைரங்க பூபதியே !
இங்கோர் புதுமை இயம்பக் கேள் ! பங்கையக்கை
ஆயிழைக்கு நான்கு நுதல் , ஐந்து குழை , ஆறுமுலை
மாயவிழி ஏழா மதி ."
மன்னவன் , " பேஷ் !" என்று மெச்சி ஆயிரம் பொன் தந்தார் .
அருகில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ' என்ன ! ஒரு பெண்ணுக்கு நான்கு புருவமா ? ஐந்து கம்மலா ? ஆறு முலையா ? ஏழு கண்ணா ?" என்று எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து விளங்காது விழித்தார்கள் .
புலவர் விளக்கினார் . ராசிகள் 12 . மேஷம் , ரிஷபம் , மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் . இந்த அடிப்படையில் --
ஆயிழைக்கு நான்கு நுதல் -- ஆயிழை கன்னி . பன்னிரு ராசிகளில் கன்னி என்பது ஒரு ராசி . கன்யா ராசிக்கு நாலாவது ராசி தனுசு , நுதல் -- அதாவது அந்தப் பெண்ணின் புருவம் வில்லைப் போன்றுள்ளது .
ஐந்து குழை -- கன்யா ராசியில் இருந்து ஐந்தாவது ராசி மகரம் . அவளுக்கு மகரக் குழை .
ஆறு முலை -- கன்னியா ராசியிலிருந்து ஆறாவது ராசி கும்பம் . கும்பம் போன்ற தனம் .
ஏழாவது ராசி -- மீனம் . மீன் போன்ற கண் .
--திருமுருக கிருபானந்தவாரியார் . வாரியார் விருந்து . குமுதம் . இலவச இணைப்பு , 07-09-1995

No comments: