Wednesday, August 3, 2011

நேதாஜி .

* ஜனவரி 23 , 1897 -ம் வருடம் ஜானகிநாத் போஸ் -- பிரபாவதி தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9 -வது குழந்தை போஸ் ! * சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு . அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார் . * போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார் . அப்போதுதான் போஸூக்கு ' நேதாஜி ' என்ற பட்டத்தை அளித்தார் தாகூர் . ' மரியாதைக்குரிய தலைவர் ' என்பது அர்த்தம் ! * திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார் . ஆனால், 1934 -ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது . இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா . ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றதுதான் எமிலியுடனான இறுதி சந்திப்பு ! * 'இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன் ! ' -- இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது . 1944 -ல் ' ஆசாத் ஹிந்த் ' வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை, ' தேசப் பிதா ' என்று முதன்முதலில் அழைத்தார் . ' ஆசாத் ஹிந்த் ' என்றால் ' சுதந்திர இந்தியா ' என்று பொருள் ! * காந்திக்கும் போஸூக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர் . எப்படி சுபாஷ், காந்தியை ' தேசப் பிதா ' என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை ' தேச பக்தர்களின் பக்தர் ' என்று அழைத்தார் ! * தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக ' ஜெய் ஹிந்த்... ' அதாவது, ' வெல்க பாரதம் ' என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி . அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர் ! * ஒரே ஒருமுறை மதுரைக்கு வந்தார் . பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று . இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியலியனின் கீழ் 600 -க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள் . ' அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ' என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி ! * பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு . காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தவர் நேதாஜி ! * 1945 -ம் ஆண்டு ஆகஸ்ட் 16 -ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார் . ஆகஸ்ட் 18 -ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது . ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது . இதுவரை 12 கமிஷன்கள்வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை . நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம் ! --- ந. வினோத்குமார் , ஆனந்த விகடன் . 13 . 10 . 10 .

No comments: