Saturday, November 1, 2014

ஓம் ஒலிக்கும் ஊர்க் கடிகாரம்.

 லண்டன் மாநகருக்கு விஜயம் செய்பவர்கள் அனைவரும் தவறாமல் பார்ப்பது ' பிக்பென் ' ( Bigben ) எனப்படும் மிகப்பெரிய கடிகாரம்.  ஆனால், பெங்கர் நகருக்கு விஜயம் செய்பவர்களில் பெரும்பான்மையோர், பார்க்காமலேயே இருக்கும் ஒரு ' பிக் பென் ' இருக்கிறது. லண்டன் கடிகாரத்திற்கு இணையான இந்தக் கடிகாரம், நமது உள்நாட்டுத் தொழில் நுணுக்க விற்பன்னர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் நாமனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.
     பெங்களுரூ ராஜேஸ்வரி நகரில் அமைந்துள்ள ஓம்கார் ஆஸ்ரமத்தில் அமைந்துள்ள இந்தப் பெரிய கடிகாரத்தை வடிவமைத்தது,எச்.எம்.டி. என, சுருக்கமாக அழைக்கபடும் ' இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் ' எனும் அரசு சார்ந்த தொழிற்சாலை.  ஒவ்வொரு மணி நேரத்தின் போதும் ' ஓம் ' எனும் நாதஒலி எழுப்பி, பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் பரவசமூட்டும் கடிகாரம் இது.
     'ஓம்கார் மலை' என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மீது 2002ஆம் ஆண்டு  ஜனவரி 30 இந்த கடிகாரம் நிறுவப்பட்டது. இந்த குன்றின் உச்சிக்குப் போய்விட்டால், தெற்கு பெங்களூர் நகர் முழுவதையும் பார்த்துவிட முடியும்.
     கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கடிகாரத்தின் குறுக்களவு ( விட்டம் ) 24 அடி. தரையிலிருந்து 40 அடி உயரத்தில் 9 ச.அடி குறுக்களவு கொண்ட இரண்டு பெரிய தூண்களின் மீது பொருத்தப்பட்டுள்ளது, இந்த ராட்சஸ கடிகாரம்.  இந்த ' பிக்பென்' கடிகாரத்த்தின் எடை 500 கிலோ,  நிமிட முள், மணி முள் ஒவ்வொன்றின் எடையும் 40 கிலோ. இந்த 'பிக்பென்' எனப்படும் ராட்சஸ கடிகாரம் அமைக்க, சுமார் பத்து லட்ச ரூபாய் செலவாயிற்று.
-- ஜனகன்,
-- மஞ்சரி. பிப்ரவரி 2013.
---  இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.  

No comments: