Thursday, July 9, 2015

இந்திய ரூபாய் நோட்டுகளில் நோய்க்கிருமிகள்

  (  சிறப்பு )
     மத்திய  அறிவியல்  மற்றும்  தொழில்  ஆய்வு  மையத்தின்  கீழ்  இயங்கும் 'இன்ஸ்டியூட்  ஆஃப்  ஜினோமிக்ஸ்  அண்ட்  இன்டக்ரேட்டிவ்  பயாலஜி  மையத்தைச்  சேர்ந்த  விஞ்ஞானிகள்  சமீபத்தில்  இந்திய  ரூபாய்  நோட்டுகளை  ஆராய்ந்தனர்.
     இதற்காக  முதன்முறையாக, 'ஷாட்கன்  மெட்டாஜினோம்  சீக்வென்சிங்'  என்னும்  தொழில்நுட்பம்  பயன்படுத்தப்பட்டது.  அதன்மூலம்  சுமார்  78  நோய்க்கிருமிகளும், 18  வகையான  ஆன்டிபயாடிக்  எதிர்ப்புக்  கிருமிகளும்  இருப்பது  தெரியவந்தது.  'இந்த  நோய்க்  கிருமிகளில்  70%  யூகார்யோட்டா ( மெய்க்கருவுயிரி ),  9 %  பாக்டீரியா  மற்றும்  1%  வைரஸ்  ஆகியவை  இருக்கின்றன'  என்று  கூறப்பட்டுள்ளது.
     ரூபாய்  நோட்டுகள்  கடினத்தன்மையுடன்  இருக்கும்  காரணத்தால்,  அவற்றில்  நோய்க்கிருமிகள்  நீண்ட  நாட்கள்  வாழும்.  மேலும்,  ரூபாய்  தாள்கள்  எவ்வளவு  முறை  கைமாறுகின்றன,  எவ்வளவு  தூரம்  ஈரத்தன்மை  இழுத்துக்கொள்ளப்படுகிறது  போன்றவற்றின்  அடிப்படையில்  அந்த  நோய்க்கிருமிகள்  கெடுதலை  ஏற்படுத்தும்  என்று  கூறப்படுகிறது.
     கடந்த  ஆண்டு 'பயோடெக்னாலஜி' எனும்  அறிவியல்  இதழில்  வெளியான  ஆய்வுக்  கட்டுரை  ஒன்றில், பாலஸ்தீன  ரூபாய்  நோட்டுகளில்  96.25 % நோய்க்கிருமிகளும்,  கொலம்பியா  நாட்டு  ரூபாய்  நோட்டுகளில்  91.1%,  தென்னாப்பிரிக்கா  ரூபாய்  நோட்டுகளில்  90%,  சவுதி  ரூபாய்  நோட்டுகளில்  88 % மற்றும்  மெக்சிகோ  ரூபாய்  நோட்டுகளில்  96%  நோய்க்கிருமிகள்  இருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டிருந்தது.
     அதேபோல, 'ஜர்னல்  ஆஃப்  ரிசர்ச்  இன்பயாலஜி'  எனும்  ஆய்விதழில்  வங்கிகள்,  மருத்துவமனை  போன்றவை  கையாளும்  ரூபாய்  நோட்டுகளில்  அதிகளவு  நோய்க்கிருமிகள்  இருப்பதாகவும்,  அதற்கடுத்து  இறைச்சி  விற்பனையாளர்கள்  கையாளும்  ரூபாய்  நோட்டுகளில்  நோய்க்கிருமிகள்  இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.
-- தேசம்.
--  'தி இந்து'  நாளிதழ்.  புதன், ஜூலை 8, 2015.  

No comments: