Saturday, February 1, 2014

மங்கலம்.

   அமங்கலமான வார்த்தைகளைப் பேசினால் அவை,  அப்போதே பலித்து விடும்.
     இதை, ராமாயணம் தசரதர் வாயிலாக விவரிக்கிறது.
     ராமருக்கு ராஜ்யத்தை அளித்து,  அவரை அரசராகப் பார்த்துவிட்டு,  காட்டிற்கு போய் தான் தவம் செய்யப் போவதாக சபையில் அறிவித்தார் தசரதர்.
     அந்த அறிவிப்பை வெளியிடும் கம்பரின் பாடல்...
    ' ஆதலால் இராமனுக்கு அரசனை நல்கி இப்
     பேதமைத்தாய் வரும் பிறப்பை நீக்குவான்
     மாதவம் தொடங்கி அவ்வனத்தை நணுவேற்கு
     யாதுநும் கருத்தென இளைய கூறினான் '
இப்பாடலை,  மேலோட்டமாக பார்த்தால் ' ராமனுக்கு ராஜ்யத்தை கொடுத்துவிட்டு, பேதமை நிறைந்த இப்பிறப்பை நீக்குவதற்காக, நான் காட்டிற்கு போய் பெருந்தவம் செய்யப்போகிறேன் ' எனத் தசரதர் கூறுவதாக தோன்றும்.  ஆனால்,
     இப்பாடலில் தசரதர் அமங்கல வர்த்தைகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார்.
     ராமனுக்கு என்பது அந்த நேரத்தில் அங்கு இல்லாமல்,  தாய் மாமனான யுதாஜித்துடன் இருந்த பரதனைக் குறிக்கும்.
     அரசு அந்த பரதனுக்குத்தான் போகப் போகிறது.  ஏன் அப்படி?
     அவனுடைய தாயான பேதமை நீறைந்த கைகேயி வந்து வரங்களைக் கேட்கப் போகிறாள்.  அது தாங்காமல், நான் இறந்து போய்விடுவேன் என்பது, தசரதரே அறியாமல் வந்து விழுந்த அமங்கல வார்த்தைகள்.  அதைவிட பாடலில் வரும் மூன்றாவது வரி,  சீதை வனத்தில் படப்போகும் துயரத்தை நுணுக்கமாக விவரிக்கிறது.
     சீதை, ராமர் முதலானோர் காட்டுக்கு பொய் 14 ஆண்டுகள் தவம் செய்யபோகிறார்கள் என்கிறது மூன்றாவது வரி.
     தமிழில், எழுத்துகளைக் கணக்கிடும் போது, ஒற்று நீக்கித்தான் எண்ணப்படும்.  அதன்படி ' மாதவ தொடங்கிய வனத்தை நணுவேற்கு '  இவ்வாறு ஒற்று
நீக்கி கணக்கிட்டால் 14 எழுத்துகள் வரும்.  ( வை.மு.கோ. கம்பராமாயண உரை ).
     தசரதரிடமிருந்து வெளிப்பட்ட அந்த அமங்கல வார்த்தைகள் அப்படியே பலித்தன என்பது நமக்கு தெரிந்ததுதான்.
--  ஸாந்த்ரானந்தா,  தினமலர். வாரமலர். நவம்பர், 10, 2013.

No comments: