Thursday, April 23, 2015

விநாயகர் அகவல்.

  அவ்வையார்  இயற்றிய  விநாயகர்  அகவல்  பாடல்களில்  விடுபட்ட  2  வரிகள்  குறித்து  தஞ்சை  சரஸ்வதி  மகால்  நூலக  சுவடிகளில்  விளக்கமாக  கூறப்பட்டுள்ளது  என்று  நூலக  தமிழ்  பண்டிதர்  மணிமாறன்  தெரிவித்துள்ளார்.
     இதுபற்றி  அவர்  வெளியிடுள்ள  அறிக்கை:
     விநாயகர்  அகவல். நூலை  பல்லாயிரக்கணக்கான  மக்கள்  தினமும்  பூஜையின்போது  மனமுருகிப்  பாடுவது  வழக்கமாக  உள்ளது.  அப்படி  சிறப்புடைய  பாடல்களில்  2  வரிகள்  விடுபட்டுள்ளது  இப்போது  தெரியவந்துள்ளது.  பழந்தமிழ்  நூல்கள்  அனைத்தும்  ஓலைச்சுவடிகளில்  இருந்து  பதிப்பிக்கப்பட்டு  அச்சு  நூலாக  மலர்ந்துள்ளன.  அச்சு  நூல்  வெளியானபின்பு,  அதில்  சில  விடுபட்டாலோ  அல்லது  பிழைகள்  இருந்தாலோ  அவை  அடுத்தடுத்த  பதிப்புகளில்  சரி  செய்யப்படும்.  இந்த  வகையில்  நல்லூர்  ஆறுமுக  நாவலர்  பதிப்பித்த  விநாயகர்  அகவலிலும்  பின்னர்  பாலகிருஷ்ண  முதலியார்  பதிப்பிலும்  இதன்பின்பு  திருவாவடுதுறை  ஆதீன  பதிப்புகளிலும்  முதல்  பாடலான  ' சீதக்  களபச்செந்தாமரைப்பூ ' என்று  தொடங்கும்  பாடலில்  இரு  வரிகள்  விடுபட்டுள்ளன.  இந்தப்  பாடலில்  2 வது  வரியான  ' பாதச்  சிலம்பு  பலவிசை  பாடப்...' என்ற  வரிக்கு  அடுத்து " காரணத்  தண்டை  கணைக்கால்  சிலம்பும்,  பூரணக்கதலியைப்  போற்றுடையழகும்"  என்ற  2  வரிகள்  உள்ளன.  இந்த  வரிகள்  இதுவரை  பதிப்பித்துள்ள  பாடல்களில்  இல்லை.  இந்த  சுவடியில்தான்  உள்ளன.  இவ்வாறு  அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தினமலர்.  18 - 11 - 2012. 

No comments: