Thursday, January 9, 2014

காட்சிப்பிழைதானோ?

   விமானங்களை வைத்தே உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த சம்பவத்தைத் தொடர்ந்து பல வதந்திகள் பரவின.  அந்த விமானங்களில் ஒன்றின் எண் Q33 NY என்றும் அந்த எண்ணை எம்.எஸ்-வேர்டில் ( MS- Word ) உள்ளிட்டு அதை விண்டிங்ஸ் ( Wingding ) என்ற எழுதுருவுக்கு மாற்றினால் ஒரு விமானம், இரண்டு கட்டடங்கள், ஒரு மண்டையோடு, இறுதியாக ஒரு நட்சத்திரம் தெரியும் என்றும் ஒரு வதந்தி பரவியது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவே இதுகுறித்து ஒருமுறை எழுதியிருந்தார்.  அந்த எண்ணை விண்டிங்ஸ் எழுத்துருவுக்கு மாற்றினால் விமானம், இரண்டு கட்டடங்கள், மண்டையோடு, நட்சத்திரம் தெரிவதெல்லாம் உண்மைதான்.  ஆனால், அந்த விமானங்களில் ஒன்றுக்குக்கூட Q33 NY என்ற எண் இல்லை என்பது பின்னால் தெரியவந்தது.  தற்போது, அதே 9/11 சம்பவத்தை வைத்து பரபரப்பூட்டும் செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.  முதல் விமானம் மோதிய பின்னர், அந்தக் கட்டடத்தில் இருந்து கிடைத்த இரும்புத் தூண் ஒன்றில் மனித முகம் தெரிவதாக ஒரு செய்தி.  பயங்கரமான அந்த நிகழ்வைக் கண்டு துயரமும் பதற்றமும் அடைந்தது போன்ற முகபாவனையுடன் இருக்கும் அந்த முகத்தை ' 9/11 தேவதை ' என்று அழைக்கிறார்கள்.  எனினும், குறிப்பிட்ட கோணம் மற்றும் ஒளியமைப்பில் பார்த்தால்தான் அது மனித முகம் போல் தெரிகிறது என்று நிபுணர்கல் கூறுகின்றனர்.
-- வெ. சந்திரமோகன்.  தொடர்புக்கு : chandramohan.v@ Kslmedia.in. கருத்துப் பேழை.
--   ' தி இந்து ' நாளிதழ்.வெள்ளி, டிசம்பர் 6, 2013.  

No comments: