Thursday, November 12, 2015

பூதத்தாழ்வார்

  பூதத்தாழ்வார் வைனவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் காலத்தால் முதலாமவர்.  முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக போற்றப்பட்டவர்.  மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைனவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிபந்தங்களில் உள்ள நூறு வெண்பாக்களால் ஆன இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.
     இவரது அவதாரத் தலமான மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது.  இக்கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது.  இக் கோயிலின் வெளிச்சுவரிலே, இத்தலம் பூதத்தாழ்வாரின் அவதாரத் தலம் என அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.
     திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவப் பெரியோர் கூறுகின்றனர்.
     வடமொழியில் பூ என்ற அடிச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல்.  இதற்குச் சத்து - அறிவு என்று பொருள்.  பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார்.
-- ரஜேஸ்வரி ஐயர்.  ஆழ்வார்கள். ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 6, 2014.

No comments: