Monday, March 14, 2016

பழுப்பரிசி.


     வெள்ளையனை மட்டுமல்ல வெள்ளை அரிசியையும் வேண்டாம் எனச் சொன்னவர் மகாத்மா காந்தி.  'பழுப்பரிசியே நல்லது' என 70 வருடங்கள் முன்னரே அவர் வலியுறுத்தினார்.  உணவுப் பற்றாக்குறை குறித்த பெரும் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் 'ஆலையில் அரைத்த குருணை அற்ற, வெளுத்த அரிசியை மட்டுமே விநியோகிக்கச் சொல்கின்றார்கள்.  ஏறத்தாழ 10 சதவிகிதம் அரிசி வீணாகிறது' என நெல் விவசாயிகள் வருந்திச் சொன்னபோது காந்தி, 'பழுப்பு கைக்குத்தல் அரிசிதான் நல்லது.  அதைச் சாப்பிடுங்கள் ' எனச் சொல்லியிருக்கிறார்.
    பழுப்பரிசி எனும் பிரவுன் ரைசில், 'Aleurone layer' எனும் தவிட்டுக்குப் பிதைய அரிசியின் தோல் நீக்கப்படுவது இல்லை.  அந்த
'அலெயுரன்' நீக்கிய வெள்ளை அரிசியில், கைக்குத்தல் அரிசியில் உள்ள 67 சதவிகித வைட்டமின் பி3, 80 சதவிகித வைட்டமின் பி1, 90 சதவிகித வைட்டமின் பி6,  மாங்கனீசு, செலினியம், இரும்புச் சத்துகளில் பாதிக்கும் மேலானவை காலாவதியாகிவிடும்.  நார்ச்சத்தும், நல்லது செய்யும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலமும் கூட முற்றிலும் காணாமல் போய்விடும்.
     இந்த உண்மை தெரிந்த பிறகும் அரிசிக்கு ஏன் அந்த பாலிஷ் அலங்காரங்கள் என்று கேட்டால், 'அலெயுரன் உறையை நீக்கினால்தான் அரிசியின் ஆயுட்காலம் அதிகரிக்கும்.  வணிகத்துக்கு அதுதானே அடிப்படை?' என வாதிடுகிறார்கல்.  அரிசியின் ஆயுள்காலத்தை நீட்டித்து லாபம் ஈட்டும் வணிகம், அதை உண்ணும் மனிதனின் ஆயுள்காலத்தைக் கண்டுகொள்வது இல்லை!
--- மருத்துவர் கு.சிவராமன்.   ( 'ஆறாம் திணை' தொடரில் )
-- ஆனந்த விகடன்.  22-01-2014.                                              

No comments: