Tuesday, May 16, 2017

பூமியை போன்று 2 கோள்கள்

மனிதர்கள்  வசிக்க  முடியும்  என  நாசா  அறிவிப்பு.  கண்டுபிடித்தது  கெப்லர்.
     விண்வெளியில்  இரண்டு  புதிய  கிரகங்கள்  அடையாளம்  காணப்பட்டுள்ளதாக  நாசா  கூறியுள்ளது.
    'கெப்லர்  மிஷன்'  எனும்  தொலை நோக்கியை  விண்வெளியில்  நாசா  செலுத்தியது.  கடந்த  2009ம்  ஆண்டு  செலுத்தப்பட்ட  இந்த  தொலை நோக்கி  இதுவரை  4,50,000 -க்கும்  மேர்பட்ட  நட்சத்திரங்களை  கண்காணித்துள்ளது.  அதன்மூலம்  இதுவரை  4,175  பூமியைப்  போன்ற  கிரகங்களை  அது  அடையாளம்  கண்டுள்ளது.  இவற்றில்  1,000-மாவது  கிரகத்தை  சமீபத்தில்  விண்வெளி  ஆய்வாளர்கள்  சோதித்தனர்.
     இந்நிலையில், விண்வெளியில்  கோல்டிலாக்ஸ்  பகுதியில்  புதிதாக  மேலும்  8  கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  இவற்றில்  இந்த 2  கிரகங்கள்  பெருமளவில்  பூமியைப் போலவே  இருப்பதாக  கூறுகின்றனர்.  இந்த  இரண்டு  கிரகங்களில்  ஒன்றுக்கு  கெப்லர்-438பி  என்றும்,  இன்னொன்றுக்கு  கெப்லர்-442பி  என்றும்  பெயர்  சூட்டப்பட்டுள்ளன.
     இந்த  கிரகங்களில்  பாறைகள்  உள்ளன  என்றும்,  அதிகளவில்  வெப்பமாகவும்  இல்லாமல்  அதேசமயம்  குளிராகவும்  இல்லாமல்  தண்ணீர்  இருப்பதற்கான  மிதமான  தட்பவெப்பம்  நிலவுவதாலும்  இங்கு  உயிர்  வாழ்வதற்கான  சாத்தியக்  கூறுகள்  இருப்பதாக  விஞ்ஞானிகள்  தெரிவிக்கின்றனர்.  மேலும்  பூமியைவிட  12  சதவீதம்  பெரியதாக  கெப்லர் -438பி கோளமும்,  கெப்லர்-442பி  கோளம்  பூமியைவிட  33 சதவீதம்  பெரியது.  அதில்  60  சதவீதம்  பாறைகள்  காணப்படுகிறது,  என்றும்  கூறினர்.
     இந்த  கிரகங்களில்  உயிர்  வாழ்வதற்கான  சாத்தியக்  கூறுகள்  தென்பட்டாலும்  அதுகுறித்து  மேலும்  அறிவது  மிகப்பெரிய  சவாலாக  இருக்கும்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  காரணம், இந்த  2  கிரகங்களும்  பூமியில்  இருந்து  பல  நூறு  ஒளி  ஆண்டுகள்  தூரத்தில்  இருக்கின்றன.
     இதில்  கெப்லர் -438பி  பூமியில்  இருந்து  470  ஒளி  ஆண்டுகள்  தொலைவிலும்,  கெப்லர்-442பி  கிரகம்  1,100  ஒளி  ஆண்டுகள்  தொலைவிலும்  உள்ளன.  முன்னது  தன்னுடைய  நட்சத்திரத்தை  35  நாட்களுக்கு  ஒரு  முறை  சுற்றிவர,  பின்னது  112  நாட்களுக்கு  ஒரு  முறை  சுற்றி  வருகிறது.
     இதுகுறித்து   விஞ்ஞானிகள்  கூறும்போது, "இந்தக்  கிரகங்கள்  உயிர்கள்  வாழ்வதற்கு  வசதியானவை  என்று  அறுதியிட்டுக்  கூற  முடியாது.  ஆனால்,  மனிதர்கள்  வசிப்பதற்குத்  தேவையான  சாத்தியக்கூறுகளை  அதிகளவில்  கொண்டவை  என்று  மட்டுமே  இப்போதைக்குச்  சொல்ல  முடியும்"  என்கிறார்கள்.
--- ஏ.எஃப்.பி.   சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  ஜனவரி 8,  2015.
--தினமலர்  திருச்சி  9-1-2015. 

No comments: